Skip to main content

‘தலைவி’: தாறுமாறா..? தடுமாற்றமா..? - விமர்சனம்

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

thalaivi

 

சமீபகால சினிமாவில் பயோபிக் படங்களுக்கு என தனி மவுசு கூடியுள்ளது. அதனாலேயே பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளும் படமாக வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பல படங்கள் ரிலீஸிற்கு அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, நரேந்திர மோடி, மன்மோகன் சிங், நடிகை சாவித்ரி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான 'தலைவி' இந்த வெற்றி பட்டியலில் இணைந்ததா..?

 

1960களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நடிகர் எம்.ஜெ.ஆர். படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ஜெயா. சிறுவயதிலேயே எம்.ஜெ.ஆர். உடன் ஜோடியாக நடித்த ஜெயாவின் படங்கள் தொடர்ந்து வெற்றிபெறுகின்றன. இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிறது. அந்த சமயம் ஜெயா, எம்.ஜெ.ஆர். இருவருக்குள்ளும் நட்புறவு மலர்கிறது. இது எம்.ஜெ.ஆரின் கேடயமாகச் செயல்படும் ஆர்.என்.வி.க்கு சுத்தமாகப் பிடிக்காததால், சூழ்ச்சி செய்து இருவரையும் பிரிக்க முயல்கிறார். இதையடுத்து எம்.ஜெ.ஆர். ஜெயாவை பிரிகிறார். அதன்பின் ஜெயாவிற்கும் சினிமா வாய்ப்புகள் குறைய எம்.ஜெ.ஆர் முதல்வர் ஆகிறார். காலங்கள் உருண்டோட ஒருநாள் நடன நிகழ்ச்சியில் ஜெயாவை சந்திக்கும் எம்.ஜெ.ஆர். அவரை அரசியலுக்கு வர அழைக்கிறார். ஜெயாவும் அரசியலில் குதிக்க, அவருக்கு எதிராக மீண்டும் ஆர்.என்.வி. வந்து நிற்கிறார். ஆனாலும், ஆர்.என்.வியை சமாளித்து எம்.பி. ஆகி டெல்லி வரை சென்று எம்.ஜெ.ஆரின் அன்பை இன்னும் அதிகமாகப் பெறுகிறார் ஜெயா.

 

இதையடுத்து மீண்டும் ஆர்.என்.வி. சூழ்ச்சி செய்து ஜெயாவை கட்சியிலிருந்தும், எம்.ஜெ.ஆரிடம் இருந்தும் பிரிக்கிறார். எம்.ஜெ.ஆர். மரணமடைந்ததும் அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெயா, மீதும் அரசியல் களத்திற்கு வந்து கட்சியைக் கைப்பற்றுகிறார். எம்.எல்.ஏவாகி எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபைக்குள் செல்கிறார். அப்போது அங்கு நடைபெறும் அடிதடியில் அவமானப்படுத்தப்பட்ட ஜெயா, "நான் இனி முதல்வரான பிறகுதான் இந்த சட்டசபைக்குள் நுழைவேன்" எனச் சபதம் செய்கிறார். இதையடுத்து ஜெயா முதல்வரானாரா, சட்டசபைக்குள் நுழைந்தாரா, இல்லையா..? என்பதே ‘தலைவி’ படத்தின் கிளைமாக்ஸ்.

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

ஒரு மிகப்பெரிய வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேர படமாகச் சுருக்க மிகவும் மெனக்கெட்டுள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய். அதில் வெற்றி பெற்றாரா என்றால் சந்தேகமே..! படத்தின் மேக்கிங், நடிப்பு மற்றும் வசனங்களில் அதீத கவனம் செலுத்தியுள்ள இயக்குநர் விஜய், வாழ்க்கை கதையிலிருந்த முக்கியமான தருணங்களை சரிவர கோர்க்கத் தவறியுள்ளார். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை, சம்பந்தப்பட்டவரின் கண்ணோட்டத்தில் இல்லாமல், அடுத்தவரின் பாயிண்ட் ஆஃப் வியூவில் உருவாக்கியுள்ளார். இது பல நேரங்களில் நிஜத்திற்கு அப்பாற்பட்டு நிற்கிறது. எங்கு ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே திரைக்கதையை அமைத்திருப்பது போல சில இடங்களில் தோன்றுகிறது. மற்றபடி ஒரு படமாகப் பார்க்கும்போது திரைக்கதை அமைத்ததிலும், நடிகர்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைத்ததிலும், வசன உச்சரிப்புகளை வாங்கியதிலும், சரியான கலவையில் காட்சிகளை அழகாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியதிலும் அப்லாஸ் வாங்குகிறார் இயக்குநர் விஜய். இயக்குநர் விஜய்யின் பிளஸ் எதுவென்று இந்தப் படத்தின் மூலம் பளிச்சிட்டுள்ளது. அதை அவர் சரியாகக் கவனிக்கும்பட்சத்தில் இனிவரும் காலங்களில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் விஜய் இணைவதற்குப் பிரகாசமான வாய்ப்புள்ளது!

 

கதை முழுவதும் எம்ஜிஆர், ஆர்.எம். வீரப்பன், ஜெயலலிதா, சசிகலா, கருணாநிதி ஆகியோரையே சுற்றிச் சுற்றி வருவதால், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வந்த பிற நபர்களின் கதாபாத்திரங்களுக்கு இப்படத்தில் வேலை இல்லை. எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அரவிந்த்சாமி, எம்ஜிஆர் ஆகவே மாற மிகவும் முயற்சி செய்துள்ளார். அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால் சந்தேகமே! சில காட்சிகளில் எம்ஜிஆருடைய மேனரிசத்தில் அவர் நடிக்க முயற்சி செய்தது டூப் நடிகர்கள் செய்வது போல் இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் நடிப்பை தன் ஸ்டைலில் அட்டகாசமாக வெளிப்படுத்தி சிலிர்ப்பூட்டியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார். 

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

நடிப்பு ராட்சசி என பட்டம் தரும் அளவிற்கு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். ஒரு நடிகையாக, அம்மாவுக்கு மகளாக, அரசியல்வாதியாக நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அசால்ட்டாக காட்டி அமர்க்களப்படுத்தியுள்ளார் கங்கனா. குறிப்பாக எமோஷனலான காட்சிகளில் தன்னுடைய முகபாவனைகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்தி, பார்ப்பவர்கள் கண்களைக் குளமாக்கியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அந்தந்த வயதுக்கு உண்டான நடிப்பைச் சரிவரப் பிரதிபலித்து நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். இந்தப் படத்துக்காகவும் கங்கனாவுக்கு விருதுகள் நிச்சயம்! 

 

ஆர்.என்.வியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, கங்கனாவுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்துள்ளார். கொஞ்சம் அசந்தாலும் கங்கனாவின் நடிப்பைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வில்லத்தனத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரும் கங்கனாவை போல் முக பாவனைகளில் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷன் காட்டி ஸ்கோர் செய்துவிடுகிறார். ஜெயாவின் உதவியாளராக வரும் தம்பி ராமையா, தனது அனுபவ நடிப்பால் கதைக்கு வலு சேர்த்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சசிகலா கதாபாத்திரத்தில் வரும் பூர்ணா பெரிதாக வசனங்கள் பேசாமலே வந்து செல்கிறார். ஜெயாவின் அம்மா சந்தியாவாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, எம்ஜிஆரின் மனைவி ஜானகியாக நடித்திருக்கும் மதுபாலா ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலைகளை நிறைவாகச் செய்துள்ளனர். கலைஞர் கருணாநிதியாக நடித்திருக்கும் நாசர் குரலில் மட்டும் கருணாநிதியை அழகாகப் பிரதிபலித்துள்ளார். நடிப்பில் ஏனோ ஒரு இறுக்கமாகவே தெரிகிறார். எம்.ஆர். ராதா வேடத்தில் வரும் ராதா ரவி திடீரென தோன்றி மறைந்துள்ளார்.

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது மேக்கிங். அந்த மேக்கிங்கிற்கு விஷால் விட்டலின் ஒளிப்பதிவும், ராமகிருஷ்ணா மற்றும் மோனிகாவின் கலை இயக்கமும் சிறப்பாகச் செயல்பட்டு படம் பிரம்மாண்டமாக வர உதவி புரிந்துள்ளது. குறிப்பாக அந்தக் காலத்து செட் அமைப்புகள், சூழல்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாகக் கையாண்டு தங்களுடைய ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் மூலம் அழகாகக் காட்சிப்படுத்தி, ஒரு பிரம்மாண்ட படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் இப்படத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

 

ஜி.வி. பிரகாஷின் ‘கண்கள் ரெண்டும்...’ பாடல் மட்டும் மனதை வருடுகிறது. ஆனால், அவரது பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைத்துள்ளார்.

 

ஒரு சாதாரண படமாக இதைப் பார்த்தால், ஒரு பெண் எப்படி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அவருடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் போராடி ஜெயித்து, பின் அரசியலிலும் எப்படி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதை உத்வேகம் தரும்படி சிறப்பாகக் காட்சிப்படுத்தி, அதை ஒரு பிரம்மாண்ட படமாக உருவாக்கி, சிறப்பான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்துள்ளனர். 

 

ஆனால், இது ஜெயலலிதா பயோபிக் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பார்த்தால் சற்று ஏமாற்றமே...!!!

 

‘தலைவி’ - ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார்...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.