Skip to main content

விறுவிறு உண்மை கதை வெள்ளித்திரையில் எப்படி வந்திருக்கிறது..? குருப் விமர்சனம்

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Kurup

 

உண்மைக்கு நெருக்கமாக எடுக்கப்படும் படங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதுண்டு. அதேபோல், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்கள் எந்த அளவுக்கு காம்பிரமைஸ் செய்யப்படாமல் உண்மைக்கு நெருக்கமாகவும் சுவாரஸ்யமாகவோ எடுக்கப்படுகிறதோ அதைப்பொறுத்தே அப்படத்தின் வெற்றி அமையும். அந்தவகையில் கேரளாவில் 1980களில் மிக பெரிய அளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீசாரால் இன்றளவும் தேடப்பட்டு வரும் குற்றவாளியுமான குருப் என்பரின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள "குருப்" படம் உண்மை சம்பவத்தில் இருந்த அதே சுவாரஸ்யத்தை பிரதிபலித்ததா..?

 

தான் மட்டுமே வாழ்ந்தால் போதும், பணமே பிரதானம் என்ற சுயநலத்துடன் வாழும் துல்கர் சல்மானை எப்படியாவது வாழ்க்கையில் உருப்பட வைக்க வேண்டும் என்று நினைக்கும் அவரது பெற்றோர் அவரை ராணுவ விமானப் படையில் சேர்த்து விடுகின்றனர். அங்கு சென்ற துல்கர் சல்மான் பயிற்சியை முழுமையாக முடிக்காமல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு அங்கிருந்து பாதியில் வெளியேறுகிறார். அங்கிருந்து வெளிநாடுக்கு செல்லும் அவர் சில வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்கும் பணத்தை தான் உயிரோடு இருக்கும் போதே சட்டவிரோதமாக பெற கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அதற்காக இவர்கள் ஒரு பிணத்தை தேடி அலைகின்ற சமயத்தில் குருப் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து  சாம்பலாகிறது. அதில் ஒரு பிணம் எரிந்த நிலையில் இருக்க, இறந்தது குருப் என அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது விபத்தா? கொலையா? என துப்புதுலக்க ஆரம்பிக்கின்றனர். போலீசார் விசாரணையில் இறந்தது குருப் இல்லை என தெரியவர, காரில் இருந்த பிணம் யாருடையது? காணாமல் போன குருப் எங்கே? அவருடைய இன்சூரன்ஸ் பணம் என்னவானது? என்பதே குருப் படத்தின் மீதி கதை.

 

ஒரு சிம்பிளான லீனியர் கதையை நான் லீனியர் பேட்டர்னில் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். ஆனால், அந்த முயற்சியில் வெற்றியா? தோல்வியா? என்றால் சந்தேகமே! படம் எடுத்த விதம், வசனங்கள், கதாபாத்திர தேர்வு, கேமரா வேலைப்பாடு, கலை, இயக்கம் என பல்வேறு விஷயங்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் ஆங்காங்கே தென்படும் தொய்வு அயர்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நான் லீனியர் திரைக்கதையை கையாண்டவிதத்தில் சற்று தடுமாற்றம் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு கதையை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனாலேயே கதையில் இருந்த சுவாரஸ்யம் படமாக பார்க்கும்போது வர மறுக்கிறது. அதேபோல, படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

 

குருப் ஆக நடித்திருக்கும் துல்கர் சல்மான் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். கதை 1970களின் இறுதியில் நடப்பதால் அந்த காலத்து நடை, உடை, பாவனைகளை அப்படியே நம் கண் முன் நிறுத்தியுள்ளார். இவர் முழு படத்தையும் தன் தோளிலே சுமந்துள்ளார். சம்பிரதாய நாயகியாக வரும் நடிகை சோபிதா, சம்பிரதாய நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஷைன் டாம் சாக்கோ படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். இவரது கதாபாத்திரமே படத்தின் வேகத்தை சற்று கூட்டியுள்ளது. அதேபோல் போலீசாக வரும் நடிகர் இந்திரஜித் திரைக்கதைக்கு பக்கபலமாக இருக்கும்படியாக கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். அவர் வரும் சீன்களும் படத்தின் வேகத்தை சற்று கூட்டியுள்ளன.

 

மேலும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், டொவினோ தாமஸ், பரத் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். படத்துக்கு மிகப்பெரிய பலம் மேக்கிங். அந்த மேக்கிங்குக்கு சிறப்பான வகையில் ஒளிப்பதிவும், கலை இயக்கமும் பங்களிப்பு அளித்துள்ளன. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மற்றும் கலை இயக்குனர் மனோஜ் ஆகியோர் படத்தை ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சுஷின் ஷியாம் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை நன்று. இவரின் இசை படத்துக்கு சுவாரஸ்யத்தை கூட்ட முயற்சி செய்து அதில் ஆங்காங்கே தட்டு தடுமாறியுள்ளது.

 

பொதுவாக ஒருவருடைய வாழ்க்கை கதையை படமாக்கும் பொழுது அவர் எதிர்கொண்ட விஷயங்களையும், சம்பவங்களையும் அப்படியே உண்மைக்கு நெருக்கமாகவும், அதேசமயம் ரசிக்கும்படியும் எடுக்கும்பட்சத்தில் அது கண்டிப்பாக ரசிக்கப்படும். ஆனால் அதுவே பிரதான கதாபாத்திரத்தை விட்டு சற்றே விலகி மற்ற சம்பவங்களுக்கும் செல்லும்பொழுது படம் பார்ப்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சும். இதில் குருப் இரண்டாவது வகையில் சேர்ந்துள்ளது.

 

குருப் - குழப்பம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” - நொறுங்கிப் போன துல்கர் சல்மான்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Dulquer Salmaan condemn about Spanish couple attack

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியர், இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாகிஸ்தான் சென்ற அவர்கள், பின்பு பங்களாதேஷ் சென்று, நேபாள் செல்வதற்கு ஜார்க்கண்ட் வழியாக சென்றுள்ளனர். அப்போது  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த தம்பதியர், இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

கடந்த 1ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  

இதையடுத்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துல்கர் சல்மான், “இதைக் கேட்டு நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் சமீபத்தில் கோட்டயத்திற்குச் சென்றிருந்தீர்கள், அங்கு நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உணவளித்தனர். இது யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” என அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலிவுட் நடிகை மற்றும் அரசியல் ஆர்வலரான ரிச்சா சதா, “வெட்கக்கேடானது. இந்தியர்கள் தங்கள் சொந்தப் பெண்களை நடத்துவது போல் வெளிநாட்டினரை நடத்துகிறார்கள். நமது அழுகிய சமூகத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.