Skip to main content

கருப்பு நாய் வெள்ளை நாய் கதை தெரியுமா? - 60 வயது மாநிறம் விமர்சனம் 

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

வாழ்க்கையின் சோகங்களை மேக்-அப் போடாமல் முழு வீச்சுடன்  காட்டுகின்ற படங்கள் ஒரு வகையில் சிறந்த படங்கள் என்றால் வாழ்க்கையின் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை, பாடங்களை மென்மையாகச் சொல்லும் படங்களும் சிறந்த படங்களே. அந்த வகை முயற்சியாக வெளிவந்திருக்கிறது இயக்குனர் ராதாமோகனின் '60 வயது மாநிறம்'.

 

prakash raj



'அல்ஸைமர்' (ஞாபக மறதி) நோயால் பாதிக்கப்பட்ட அறுபது வயது அப்பா பிரகாஷ்ராஜை ஒரு முதியோர் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு தன் வேலையில் முழு கவனத்துடன், அமெரிக்கா செல்லும் முயற்சியில் இருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பாவின் மேல் பல புகார்கள் கொண்ட அவர் எப்போதாவது சென்று அவரை சந்திக்கிறார், தேவையானதை வாங்கித் தருகிறார். அவ்வளவுதான் அப்பா மகன் உறவு. ஒரு முறை இப்படி சந்தித்து வெளியே அழைத்துச் செல்லும்போது விக்ரம்பிரபுவின் அலட்சியத்தால் பிரகாஷ்ராஜ் தொலைந்துவிடுகிறார். இன்னொரு புறம் சமுத்திரக்கனி டீம் ஒரு கொலையை செய்துவிட்டு அதை மறைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இவர்களிடம் சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். என்ன நடந்தது என்பதே  '60 வயது மாநிறம்'.

 

 


இயக்குனர் ராதாமோகன் 'அழகிய தீயே', 'மொழி', 'அபியும் நானும்' என அழகாக ஈர்த்தவர். அவருக்கேற்ற கதையை கன்னடத்திலிருந்து பெற்றுத் தந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணுவும் பிரகாஷ்ராஜும். இந்தப் படத்தையும் பெரிய அதிர்வுகள் இல்லாமல் மென்மையாக நடத்திச் செல்கிறார். பிரகாஷ்ராஜூக்கு எந்த கதாபாத்திரமும் கடினமல்ல. அவரைத்தாண்டி அந்தப் பாத்திரங்களைப் பார்ப்பது ரசிகர்களுக்குத்தான் சில நேரங்களில் கடினம். ஆனால், இந்தப் படத்தில் மிக எளிதாக ஒரு முதியவராக நம் மனதில் பதிகிறார். ஒரு காட்சியில், அமர்ந்திருக்கும் புத்தர் சிலை முன்பு, அவரும் ஒரு புத்தர் போலவே அமர்ந்துகொண்டு தன் பழைய நினைவுகளை பகிரும் இடம் ஒரு சாம்பிள்.

 

 

vikram prabhu



விக்ரம் பிரபுவுக்கு ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல கதை அமைந்துள்ளது. அமைதியான நடிப்பு. அப்பா மீது அவர் காட்டும் வெறுப்பை நம்மிடம் அவர் சம்பாதிப்பதே அவரது நடிப்பிற்கு வெற்றி. சமுத்திரக்கனி, ஒரு ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிக்கு அடியாளாக நன்றாக நடித்தாலும், நமக்கு அவரை நல்லவராகவே பார்க்கத் தோன்றுகிறது, எந்தத் தீமையும் செய்துவிட மாட்டார் என்றே எண்ண வைக்கிறது. அது படத்துக்கு ஒரு குறையே. 'மேயாத மானி'ல் தங்கையாகக் கவர்ந்த இந்துஜா, இந்தப் படத்தில் நாயகியாக ஈர்க்கிறார். அளவான, அழகான நடிப்பு. இவர்களைத் தாண்டி படத்தில் நம்மைக் கவர்வது இளங்கோ குமரவேல். அவர் பேசும் ஒவ்வொரு வரியும் சிரிக்க, ரசிக்க வைக்கின்றன. தமிழ் சினிமாவில் ராதாமோகனைத் தாண்டி இவர் அதிகம் பயன்படுத்தப்படாதது வருத்தமே (குரங்கு பொம்மை நீங்கலாக). 

 

 


அவசர வாழ்வில் பெற்றோரை கவனிக்க மறப்பதால் நாம் இழப்பது வெறும் உறவுகளை அல்ல அவர்களிடம் இருக்கும் பெரும் அன்பையும் அனுபவங்களையும் வாழ்வியல் நெறிகளையும் என்பதை பல காட்சிகளில் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். 'உங்கள் திலகம்', 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்', கருப்பு நாய் வெள்ளை நாய் கதை, கணவனையே மறந்துவிட்ட பெண்ணுக்கு பெரும் துணையாக இருக்கும் கணவர் என அழகழகான குட்டிக் குட்டி எபிசோட்கள் ராதாமோகன் ஸ்பெஷல். படத்தைப் பெரிதாகத் தாங்கி நிற்பவை விஜியின் வசனங்கள். பிரகாஷ்ராஜ் பேசும் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருவருக்கு பாடமாக அமைவதாக வரும் வசனங்களாகட்டும், "பொதுவாவே ஹஸ்பண்டோட நண்பர்கள் மேல வொய்ஃப்புகளுக்கு நல்ல அபிப்ராயம் இருக்குறதில்ல சார், ஆனா ஹஸ்பண்டுகள் அப்படியில்ல", "இனிமேல் 500, 1000 நோட்டுகளெல்லாம் செல்லாதுன்னு பிரதமர் 8 மணிக்கு அறிவிச்சப்போ நான் 8.30 மணி வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தேன், என்கிட்டே இருநூறு ரூபாதான் இருந்துச்சு" போன்ற காமெடி வசனங்களாகட்டும் அமைதியான படத்தில் அதிகமாக ரசிக்கவைக்கின்றன.
 

 

samuthrakani



படத்தில் சமுத்திரக்கனியை சுற்றியுள்ள கதைதான் பலவீனமாக இருக்கிறது. பல கொலைகளை செய்யக்கூடிய ஒரு கேங் வெறும் நான்கைந்து பேருக்குள்ளேயே சுற்றி வருவது நம்பகத்தன்மையை குறைக்கிறது. படத்தின் சில காட்சிகளில் ஏதோ ஒரு அவசரம் தெரிகிறது. இளையராஜாவின் பின்னணி இசை ஆங்காங்கே மட்டும் அழுத்தம் தருகிறது. விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவில் பல அழகான ஃப்ரேம்கள் இருக்கின்றன. ஜெய்யின் படத்தொகுப்பு சில இடங்களில் பழைய ஸ்டைலில் இருக்கிறது.

 

 


சரி, அந்தக் கருப்பு நாய் வெள்ளை நாய் கதை என்ன? நம் எல்லோருக்குள்ளும் ஒரு கருப்பு நாய், ஒரு வெள்ளை நாய் இருக்கும். கருப்பு நாய் கெட்ட குணங்களும் வெள்ளை நாய் நல்ல குணங்களையும் கொண்டிருக்கும். இரண்டுக்கும் சண்டை நடந்துகொண்டே இருக்கும். எந்த நாய் ஜெயிக்கும் தெரியுமா? அதை படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லுவார். 'அதென்ன, கருப்புதான் கெட்டதா இருக்கணுமா?' என்று கேட்டால் அதையும் சமன்படுத்த படத்தில் ஒரு வசனம் உண்டு. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அறுபது வயது மாநிறம்... அனுபவங்களின், அன்பின் நிறம்.     

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜ் குறித்து வாய்திறந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்; முடிவெடுத்த போலீசார்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
NN

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.

இந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால், முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். தொடர்ந்து நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் நேற்று மதன் செல்வராஜின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடையின் விளம்பர படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தெரிவித்துள்ளனர். கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், நிறுவனத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மோசடியில் தொடர்பில்லாததால், பிரகாஷ்ராஜிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு இ.டி சம்மன்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

nn

 

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு,  நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தை பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு  செய்ததாக கூறப்படுகிறது.      

 

ஆனால் கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அண்மையில் சென்னை உள்ளிட்ட 10 மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

 

nn

 

இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி மோசடி தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்த ஜுவல்லரி கடையில் விளம்பத்தில் நடித்தவர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.