கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் தம்பி. இந்த படத்தை இயக்கியவர் ஜீது ஜோசப். இவர் தமிழில் கமல்ஹாசனை வைத்து பாபநாசம் என்றொரு படத்தையும் இயக்கியுள்ளார். இந்த இயக்குனர் பாபநாசம் படத்தை முதலில் த்ரிஷ்யம் என்ற தலைப்பில் மலையாளத்தில்தான் முதன் முதலாக எடுத்திருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்துதான் தமிழில் பாபநாசம் என்று இயக்கினார். த்ரிஷ்யம் படத்தில் ஜீதுவின் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் விவேக் ஆர்யன். இவர் ஜீது ஜோசப்பின் மெமரீஸ் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

விவேக் ஆர்யன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஓர்மையில் ஒரு சிஷ்ரம் என்ற படம் வெளியானது. இதனை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் இயக்குனர் விவேக்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி பைக்கில் தனது மனைவியுடன் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது குறுக்கே நாய் ஓடி வந்துள்ளது. நாயை மோதிவிடக் கூடாது என்பதற்காக பைக்கை வலைத்திருக்கிறார். அப்போது பைக்கிலிருந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுக, இருவரும் படுகாயம் அடைந்தனர். இதன்பின் கொச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வரப்பட்டனர். விவேக்கிற்கு தலையில் பலத்த காயம் என்பதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விவேக் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணம் குடும்பத்தாரையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.