Skip to main content

"ரஜினியைவிட அதிக சம்பளம் வேண்டும்..."  'பொன்னு வெளையிற பூமி' படத்தின்போது கறாராக இருந்த ராஜ்கிரண்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ராஜ்கிரண் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

திரை நடிகர்களின் வாழ்க்கையில் சில நேரங்களில் மிகப்பெரிய சம்பவங்கள் நடைபெறும். வருடங்கள் கடந்த பிறகு அந்தச் சம்பவங்கள் குறித்து யோசித்துப் பார்த்தால் அந்த நடிகர்களுக்கே அது வியப்பாக இருக்கும். நடிகர் ராஜ்கிரண் வாழ்க்கையில் நடந்த அப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து உங்களுக்கு கூறுகிறேன். 

 

பி. வாசுவின் உதவி இயக்குநர் கிருஷ்ணன் நடிகர் ராஜ்கிரணை வைத்து 'பொன்னு வெளையிற பூமி' என்ற படத்தை இயக்கத் திட்டமிட்டார். அப்படத்தில் குஷ்புவும் வினிதாவும் கதாநாயகிகளாக நடித்தனர். அந்தச் சமயத்தில் நடிகை குஷ்பு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்துடன் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தைக் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஏ.ஜி. சுப்ரமணியம் தயாரித்தார். நான் அந்தப் படத்தில் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினேன். 

 

'என் ராசாவின் மனசிலே', 'எல்லாமே என் ராசாதான்', 'அரண்மனைக்கிளி' ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றி மூலம் நடிகர் ராஜ்கிரணும் உச்ச நட்சத்திரமாக இருந்தார். அவருக்கென தனி மதிப்பும் மரியாதையும் திரையுலகிற்குள் இருந்தது. 'பொன்னு விளையுற பூமி' படத்தில் ராஜ்கிரணின் சம்பளம் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய். அதில், 50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையாகக் கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஒரு கோடிதான் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.  

 

பூஜையுடன் தொடங்கப்பட்ட 'பொன்னு வெளையிற பூமி' படத்தின் படப்பிடிப்பு, நல்ல படியாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அந்தச் சமயத்தில், அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ராஜ்கிரண் நடிப்பில் உருவான 'மாணிக்கம்' திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதேபோல 'பாசமுள்ள பாண்டியரே' திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த இரு படங்களின் தோல்வி 'பொன்னு வெளையிற பூமி' படத்தின் வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இப்படமும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தொடர் தோல்விகள் மூலம் சினிமாவில் ராஜ்கிரணின் இறங்கும் காலம் தொடங்கியது. 

 

அதன் பிறகு பல நெருக்கடிகளை எதிர்கொண்ட ராஜ்கிரண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த 'செவ்வேல்' திரைப்படத்திற்கு நான்தான் மக்கள் தொடர்பு அதிகாரி. அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. படப்பிடிப்பு இடைவேளையின்போது ராஜ்கிரணும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, “'பொன்னு வெளையிற பூமி' படத்தில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம்” என்று எனக்குத் தெரியாததுபோல அவரிடம் கேட்டேன். “நான் ஒரு கோடி பத்து லட்சம் சம்பளம் வாங்கினேன்” என்று உண்மையான சம்பளத்தை வெளிப்படையாகக் கூறினார். “ரஜினிகாந்த் ஒரு கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். அவரைவிட அதிகமாக வேண்டும் என்று கூறி ஒரு கோடி பத்து லட்சம் வாங்கினேன்” என்றார். 'செவ்வேல்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு நிறைய கடன் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துகொண்டிருந்தது. அதுபற்றி அவரிடம் கேட்கையில், "நீங்க படிச்சது உண்மைதான்... மூணு கோடிவரை இருந்தது. கிட்டத்தட்ட அதை அடைச்சிட்டேன்... இன்னும் கொஞ்சம் இருக்குது" என்றார். தற்போது அந்தக் கடனை எல்லாம் அடைத்துவிட்டு நல்ல நிலைமைக்கு வந்துவிட்டார் ராஜ்கிரண். இன்று காலங்கள் கடந்துவிட்டன. நடிகர் ராஜ்கிரண் எங்காவது தனியாக அமர்ந்து, ரஜினியைவிட நாம் அதிகமாக சம்பளம் வாங்கியிருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் அவருக்கே அது ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருக்கும்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".