விஸ்வாசம் , பேட்ட ஆகிய இரண்டு பெரிய படங்கள் ஒன்றாக ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் ரோகினி திரையரங்கில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் சிறப்பு காட்சியை காண கோலாகலமாக கொண்டாடி வந்தனர். அந்த தியேட்டர் வாசலில் தல, தலைவர் என்று அஜித் ரஜினி ஆகிய இருவருக்கும் ஒன்றாக பேனரும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. முதலில் இரு ரசிகர்களும் ஒன்றாக இணைந்தே கொண்டாட்டங்களை தொடங்கினார்கள். அதன் பின்னர், இரு ரசிகர்களும் இரு பிரிவுகளாக செயல்பட்டனர். ரஜினி பேனருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டவுடன், அஜித் ரசிகர்களும் உடனடியாக அஜித் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர்.
காலை முதல் சிறப்பு காட்சியாக ரஜினியின் பேட்ட திரைப்படம் நான்கு மணிக்கு தொடங்க இருந்தது. விஸ்வாசத்திற்கு காலை எழு மணிக்குதான் முதல் காட்சி என்றது அந்நிறுவனம். ஆனால், அஜித் ரசிகர்கள் எங்களுக்கும் இப்போதே சிறப்பு காட்சி போட்டே ஆக வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் இது இரு ரசிகர்களிடமே சலசலப்பை உண்டாக்க இறுதியில் ரஜினி பேட்ட பேனர்களை கிழிக்க தொடங்கினார்கள் அஜித் ரசிகர்கள். அப்போது இரு பிரிவினர்களுக்கும் இடையே மோதல் தொடங்க, உடனடியாக போலீஸார் வந்து கூட்டத்தை கலைத்தனர். முதலில் இரு ரசிகர்களும் இணைந்து கொண்டாடி, கடைசியில் மோதலில் முடிந்தது. இச்சூழலால் அங்கு பதற்றம் நிலவியது. வெளியேற்றப்பட்ட அஜித் ரசிகர்கள் சாலையில் வரும் லாரிகளையெல்லாம் மறித்தனர். தற்போது திரையரங்கில் சகஜமான நிலைக்கு மாறியுள்ளது.