விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (11.07.2022) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், ஏ.ஆர் ரகுமான், உதயநிதி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசுகையில், " விக்ரம் மாரடைப்பால் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற பல செய்தியை பார்த்தேன் நல்லாயிருந்தது. இன்னும் சில பேர் க்ரியேட்டிவாக எடிட் செய்திருந்தனர். அதுவும் நல்லாயிருந்தது. இதெல்லாம் பார்க்கும் போது நாம என்னென்னமோ பாத்துட்டோம், ஒண்ணுமே இல்லை என்று தான் தோன்றியது. அதனால் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. என் குடும்பம், ரசிகர்கள், நண்பர்கள் எல்லாம் எனக்கு பலமாக இருக்கும்போது எனக்கு ஒண்ணுமே ஆகாது. எனக்கு 20-வயது இருக்கும் அப்போது ஒரு விபத்து நடந்தது, எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த சூழலில் கால் எடுக்க வேண்டி இருந்தது, அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். அதன் பிறகு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.
சில தினங்களுக்கு முன்பு மார்பில் லேசான அசௌகரியம் இருந்தது. அதன் காரணமாகத்தான் மருத்துவமனை சென்றோம். எனக்கு விருப்பப்பட்டவர்கள், நெருங்கியவர்கள் அனைவரும் வேதனை அடைந்தார்கள். குறிப்பாக ரசிகர்கள் என்னோடு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாமல் ரொம்ப வருத்தப்பட்டனர். அவர்கள் உள்பட எல்லாருக்கும் நான் இந்த மேடையில் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்வது என் கடமை. அனைவருக்கும் நன்றி. நான் எப்போதுமே சினிமாவிற்காக மட்டும் தான் வாழ்ந்தேன், சினிமா மட்டும் தான் எனக்கு உயிர், வேற எதுவுமே கிடையாது. நமக்குன்னு ஒரு கனவு இருந்தா...ஒரு லட்சியம் இருந்தா... அதற்காக உழைச்சோம்னா யாராக இருந்தாலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர முடியும் " என குறிப்பிட்டு படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் விக்ரம் பேசியுள்ளார்.
இதனிடையே விக்ரம் சில தினங்களுக்கு முன்பு மார்பில் லேசான அசௌகரியம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.