புது படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவது தற்போது வழக்கமாக நடந்து வரும் நிலையில் இதை தடுக்க திரைப்பட சட்டம் 1952-ன் 7வது பிரிவு, அபராதம் விதிக்க வழி வகை செய்கிறது. இந்நிலையில், தண்டனையை இன்னும் கடுமையாக்குவதற்காக, இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது. இதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரைவு மசோதா குறித்து வரும் 14ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.