Skip to main content

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ட்வீட்... ரசிகர்கள் நிம்மதி!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

sj surya

 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், வேறு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

 

ad

 

இந்த நிலையில், மார்ச் 5-ஆம் தேதி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியாகுமென படக்குழு அறிவித்தது. படத்தைத் திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த செல்வராகவன் ரசிகர்கள், இவ்வறிவிப்பைக் கண்டு உற்சாகமடைந்திருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடைகாலத் தடை விதித்தது. கடன் பாக்கி தொடர்பாக ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.

 

அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, திட்டமிட்டபடி மார்ச் 5-ஆம் தேதி படம் வெளியாகுமா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா படத்தின் வெளியீடு குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "ரேடியன்ஸ் மீடியா மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இடையிலான பிரச்சனை நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் வெளியீட்டிற்காக பிரார்த்தனை செய்து காத்திருந்த அனைவருக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாகவே ரிலீஸ் ஆகுதுங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியாகுமா இல்லையா எனக் குழம்பிப்போயிருந்த ரசிகர்கள், எஸ்.ஜே. சூர்யா ட்வீட் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபகத் ஃபாசில் படத்தில் இணையும் எஸ் ஜே.சூர்யா - எகிறும் எதிர்பார்ப்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
sj surya fahad fazil movie tpdate

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்ரமின் 62வது படத்தையும், தனுஷின் ராயன் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதில் ராயன் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது. விக்ரமின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் நானி நடிக்கும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே சூர்யா, தற்போது மலையாளத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபகத் ஃபாசில் தற்போது தமிழில் ரஜினியின் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேஷம் படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில் ஃபகத் ஃபாசிலுடன் எஸ்.ஜே.சூர்யா இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Next Story

“சர்வதேச தரம்” - தனுஷ் குறித்து எஸ்.ஜே. சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj suryah about dhanush raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் குறித்து பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, “தனுஷ் சார், உங்கள் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். அதற்காக நன்றி. நான் முன்னதாக சொன்னது போல இப்படம் ரத்தமும் சதையுமாய் எமோஷ்னல் கலந்து சர்வதேச தரத்தில் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடை விருந்தாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.