நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். திட்டமிட்டபடி வெளியாகவிருந்த இப்படம், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர், ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. கரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது.
இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவெடுத்து, சில ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும் இறுதி முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து தமிழ்நாடு மெல்ல மீண்டு இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியதையடுத்து, தமிழ்நாட்டில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தை நேரடியாக திரையரங்கிலேயே வெளியிடலாம் என முடிவெடுத்துள்ள படக்குழு, ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது.
அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினம் வருவதால் அன்றைய தினத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 9ஆம் தேதி ‘டாக்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே ‘டாக்டர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.