தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சென்ற மாதம் அறிவித்தார். அதில்.. "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன் மகனுக்கு 'குகன் தாஸ்' எனப் பெயரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்போடும் ஆசியோடும் அவருக்கு “குகன் தாஸ்” எனப் பெயர் சூட்டியிருக்கிறோம்" என அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தந்தையின் பெயர் 'தாஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.