சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மீதமுள்ள 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் சென்னையிலேயே படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கிடையே ‘விஸ்வாசம்’ பட ரிலீஸ் சமயத்தில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் சிவா. அது ‘அண்ணாத்த’ படத்தால் தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இடைவெளியில் சும்மா இருக்க வேண்டாம் என்று இயக்குனர் சிவா முடிவெடுத்திருப்பதாகவும், அடுத்து இயக்கவுள்ள சூர்யா படத்தின் முதற்கட்டப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'அண்ணாத்த' படத்தை முடித்த கையோடு உடனடியாக சூர்யா படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட சிவா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.