கங்கை அமரனின் மனைவியும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், நேற்று (09.05.2021) இரவு சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
"அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும். இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்தச் சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன். ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு. அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும், வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கண்ணீருடன் சிலம்பரன்" எனக் கூறியுள்ளார்.