ஜீரோ படத்தின் தோல்விக்கு பிறகு ஷாருக்கான் படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்து வருகிறார். ராஞ்சனா, டனு வெட்ஸ் மனு என்ற வெற்றி படங்களை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் ஷாருக்கானை வைத்து ஜீரோ என்னும் படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஷாருக்கான் குள்ளமானவராக நடித்திருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நடித்திருந்தனர். பலத்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த வருடம் வெளியான இப்படம் சரியாக ஓடவில்லை, இதனால் வருத்தத்தில் இருக்கும் ஷாருக்கான். சினிமாவைவிட்டு விலகி தற்போது குடும்பத்துடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார்.
ஜீரோ படம் மட்டுமின்றி இதற்கு முன்பாக அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியதாலயே ஷாருக்கான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இத்தனை வருடங்களாக சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்யாமல் விட்டுவிட்டேன். சிறிது காலம் சினிமாவிற்கு ஓய்வளித்துவிட்டு திரும்பவும் வருகிறேன் என்று ஒரு முடிவுடன் இருக்கிறார் ஷாருக்கான்.
இந்நிலையில் பல மாதங்களாக தன்னுடைய ரசிகர்களுடன் சம்மந்தமே இல்லாமல் இருப்பதால் ட்விட்டரில் ஆஸ்க் ஷாருக் என்ற ஹேஸ்டேகினி மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டிருந்தார் ஷாருக். அதில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பினார்கள்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஷாருக்கானிடம் கேள்வி கேட்டனர். இதில் ஒரு ரசிகர், நடிகர் அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் பதில் தாருங்கள் என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஷாருக், அஜித் தனது நண்பர் என்றார். இதேபோல் மற்றொரு ரசிகர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும் என கேட்டார். இதற்கு விஜய் ஒரு அற்புதமானவர் என ஷாருக்கான் பதில் அளித்தார். தனுஷ் குறித்தும் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கு ஷாருக், நான் அவரை நேசிக்கிறேன் என்றார்.