சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த மாதத்தின் மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இடம்பெற்றிருந்த 'வா சாமி...' பாடல் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்துள்ள நிலையில், தமிழில் அப்பாடலைப் பாடிய நாட்டுப்புற பாடகர் ராஜலட்சுமியையும் அவரது கணவர் செந்திலையும் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம்.
அந்த சந்திப்பில், பா.ரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை முன்னெடுப்பு குறித்து பேசிய செந்தில் - ராஜலட்சுமி, "இதற்கு முன்பு அவர்கள் செய்த விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை. சூப்பர் சிங்கர் வெற்றிக்குப் பிறகு வேறுவேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தோம். அதனால் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த ஆண்டு அவர்கள் அழைத்துள்ளார்கள். இந்த முறை மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் மக்களிசை பாடல்களை பாடுவதற்காக ஆவலுடன் இருக்கிறோம். இசை என்பது பொதுவானது. அதில் இந்த இசைதான் உயர்ந்தது; இந்த இசை தாழ்வானது என்று எதுவும் கிடையாது. இசைய வைக்கும் அனைத்துமே இசைதான். அந்த விஷயத்தைத்தான் ரஞ்சித் சார் முன்னெடுத்து வைக்கிறார். எங்களுக்கும் அதே சிந்தனைதான் உள்ளது. அதனால் அதில் இணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
சுதந்திர போராட்டக் காலங்களில் சபாக்களில் பாடப்பட்ட கிளாசிக் பாடல்கள் பெரும்பாலும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில்தான் அதிகம் இருக்கும். ஒரு போராட்டத்திற்கு பிறகுதான் அதில் தமிழ்ப்பாடல்கள் கொண்டுவரப்பட்டது. இன்றைக்கு தமிழ் இசையை கொண்டுவர வேண்டும் என்று ரஞ்சித் சார் முன்னெடுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு அனைவருமே ஆதரவு தருகின்றனர். எங்களுக்கு எல்லா மேடையும் ஒன்றுதான். ஒரு முச்சந்தியில் நின்று பாடவேண்டும் என்றாலும் அதே உற்சாகத்தில்தான் பாடுவோம். முக்கியமான ஒரு சபாவில் பாடவேண்டும் என்றாலும் அதே உற்சாகத்தில்தான் பாடுவோம். மக்களிசை கலைஞர்களாக எங்களுடைய வேலையை சரியாகச் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம்" எனக் கூறினார்கள்.