தமிழ் சினிமாவில் 'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சசிகுமார் படம் இயக்குவதை விட்டு, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் சசிகுமார் அடுத்ததாக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் அயோத்தி படத்தில் நடிக்கவுள்ளார். இதில் குக் வித் கோமாளி புகழ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரிக்கிறார். இன்று தொடங்கி இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் 45 நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும் இப்படம் குறித்து கூறிய இயக்குநர் மந்திரமூர்த்தி," எல்லோரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்கும் விஷயத்தை பற்றியது இப்படம். இக்கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். நம் வாழும் உலகின் மறுபக்கத்தை காட்டும் ஒரு உணர்ச்சிகரமான ஒரு கதை இது. இக்கதையைக் கேட்டவுடன் சசிகுமார் நடிக்க ஒப்புக் கொண்டார். அயோத்தி எனப் பெயரிடப்பட்டது இப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் அதற்கான காரணத்தை இப்போது கூறுவது நன்றாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.