சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாகப் படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், அரண்மனை 3 படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் 14ஆம் தேதி ஆயுதபூஜைத் தினத்தையொட்டி அரண்மனை 3 திரைப்படம் வெளியாகும் என ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.