புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டை கொண்டாட அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கலர் பிலிம் பேக்டரி சார்பில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று (30.12.2021) முதல் (1.12.2021) புத்தாண்டு வரை தொடர்ந்து மூன்று நாட்கள் பழைய துறைமுகத்தில் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சன்னி லியோனின் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் தளம் என்ற அமைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் சன்னி லியோனின் பேனர்களையும் போஸ்டர்களையும் கிழித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே, காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு கிளம்பியது.
இதனைத்தொடர்ந்து பேசிய தமிழர் தளம் அமைப்பின் தலைவர் அழகர்,"புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சாரத்தை சீரழிக்கும் முதல்வர் மற்றும் ஆளுநரை கண்டித்து போராட்டங்கள் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.