Skip to main content

"பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா?" - 'பரிதாபங்கள்' சுதாகர்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

'உறியடி'... பல நல்ல படங்களைப் போலவே வெளிவந்தபொழுது கவனிக்கப்படாமல், வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு படம். விஜயகுமார் நாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்திருந்த இந்தப் படத்தை 'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி வெளியிட்டார். வெளியான போது பெரிய வெற்றி பெறவில்லை இந்தப் படம். அப்போது விமர்சகர்களாலும், பின்னர் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை யூ-ட்யூப் சினிமா விமர்சகர் அபிஷேக் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் படத்தில் பணியாற்றிய பலரும் மேடையேறி தங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்தனர்.

 

sudhakar speech



படத்தில் நடித்துள்ள 'பரிதாபங்கள்' புகழ் சுதாகரை மேடைக்கு அழைத்த அபிஷேக், "தமிழ் யூ-ட்யூப் தளத்தின் எல்லைகளை விரிவு செய்த 'பரிதாபங்கள்' புகழ் கோபியா சுதாகரா என்று பலரும் குழம்பும் யூ-ட்யூப் சூப்பர் ஸ்டாரை பேச அழைக்கிறேன்" என்று கூறினார். மேடைக்கு வந்த சுதாகர், கூச்சத்தில் நெளிந்துகொண்டே "பொழைப்பு ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு, அதை குழப்பி விடுறீங்களா? என்னைப் போய் சூப்பர் ஸ்டார்னுலாம் சொல்றீங்க, ஏண்ணே" என்று கூறி பேச ஆரம்பித்தார். "இந்தப் படத்தில் நடித்தது எனக்கு பெரிய வாய்ப்பு. 'உறியடி' படம் வெளிவந்த பொழுது அதைப் பார்த்து வியந்தேன். ஒரு தடவ விஜயகுமாரை டீ கடைல பார்த்து பேசினோம். அதுவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. 'உறியடி 2' பண்ணலாமானு அவரே கேட்டது எனக்கு இன்னும் சந்தோஷம். கதையை கேட்டுட்டு எனக்கு உண்மையிலேயே தூக்கம் வரல. அப்படி ஒரு கதை" என்று கூறி அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தார். உடனே தொகுப்பாளர் அபிஷேக், "உங்களுக்கு கால் உடைஞ்ச கதையெல்லாம் சொல்லுங்க" என்று சொல்ல, சிரித்துக்கொண்டே "ஆமாங்க... இந்தப் படத்துல ஒரு பெரிய ஸ்டண்ட் பண்ணி என் கால் உடைஞ்சது. இப்போ சரியாகிடுச்சு. அது என்ன ஸ்டண்ட்னு படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க" என்று கூறினார்.

தமிழ் யூ-ட்யூப் ரசிகர்களிடையே புகழ் பெற்ற கோபி-சுதாகர் கூட்டணி தற்போது 'க்ரௌட் ஃபண்டிங்' முறையில் ரசிகர்களிடமிருந்தே நிதி திரட்டி ஒரு புதிய படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள்.                          

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கங்குவா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Release of the second look poster of the movie 'Kangua'

சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. இது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிடும்போது, ‘இந்த படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிடுவதாக நேற்று (15-01-24) படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-24) கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா இடம்பெற்ற இந்த போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

Next Story

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்; பரிதாபமாக உயிரிழந்த 2 ரசிகர்கள்

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

Suriya's two fans lost their lives

 

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரு ரசிகர்கள் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவிற்குத் தமிழ் மொழியைத் தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா எனத் தென்னிந்திய மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் கேக் வெட்டி, அன்னதானம், உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காகப் பேனர் கட்டும்போது இரும்பு கம்பி அருகிலிருந்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.