அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'பிரம்மாஸ்திரம்'. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.ரிலீஸ் தேதி நெருங்கியதால் பாடல்களை ரிலீஸ் செய்து ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ’தேவா தேவா...’ என்ற பாடல் யூட்யூப் தளத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ப்ரீதம் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த பாடலுக்கு நான் இசையமைக்கும்பொழுது ஒரு ஆன்மிக உணர்வு எனக்குள் வந்தது. 'தேவா தேவா' பாடலில் பாரம்பரிய மற்றும் பக்தி கூறுகளை முக்கியமாக வைத்து இசையை நவீனப்படுத்தியுள்ளோம். இந்த ஆன்மிகப் பாடல் உலக அனுபவத்தைத் தருகிறது. இது அனைவருக்கும் விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
'தேவா தேவா' பாடலானது சிவத்தின் உள்ளே இருக்கும் சக்தியைக் கண்டுபிடிக்கும் மந்திர தருணத்தை உள்ளடக்கிய ஆன்மிகம் பற்றிய பாடலாகும். இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.