Skip to main content

”மகனுக்காக தன் நகைகளை அடகு வைத்து படமெடுக்கும் தாய்” - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நெகிழ்ச்சி

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

K. S. Ravikumar

 

21 வயதேயான அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து உருவாகியிருக்கும் படம் ’மாலைநேர மல்லிப் பூ’. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஓர் இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதேயான மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவை மிக ஆழமாகப் பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார். 

 

அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயலெட்சுமி என் கல்லுரி விரிவுரையாளர் ஒருவரது சிபாரிசின் அடிப்படையில் என்னை சந்திக்க வந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பு விடுத்தார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இருப்பதில்லை என்பதால் புறக்கணிக்க நினைத்தேன். படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இயக்குநரைக் கேட்டேன். என் அம்மாதான் என்று அவர் சொன்னார். நல்ல பணக்காரர்களா என்று கேட்டேன். இல்லை சார், என் அம்மா எனக்காக அவர்களின் நகைகளை எல்லாம் விற்று படம் தயாரித்திருக்கிறார் என்று இயக்குநர் கூறினார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.

 

இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதோ ரஜினியின் ஃபிளாஷ்பேக்' - சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

rajini muththu re release update

 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. 

 

இந்த நிலையில் இப்படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸாகவுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது மேலும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளது. டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதோடு ரீ ரிலீஸ் தொடர்பான வீடியோ ஒன்றைப் படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் 'எல்லோரும் ஃபிளாஷ்பேக் பற்றி பேசுகிறார்கள். இதோ ரஜினியின் ஃபிளாஷ்பேக்' எனக் குறிப்பிட்டு முத்து பட காட்சிகளைக் குறிப்பிட்டுள்ளனர். சமீபமாக ஃபிளாஷ்பேக் தொடர்பான பேச்சு ட்ரெண்டாகி வருகிறது. விஜய்யின் லியோ பட ரிலீஸுக்கு பின்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில், படத்தில் வரும் விஜய்யின் ஃபிளாஷ்பேக் பொய்யாக கூட இருக்கலாம் எனச் சொல்லியிருந்தார். அதன் பிறகு பலரும் ஃபிளாஷ்பேக்கில் வரும் படங்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வந்தனர். அது ட்ரெண்டாகி வந்த நிலையில், அந்த ட்ரெண்டிற்கு ஏற்ப திடீரென்று சர்ப்ரைஸாக முத்து படக்குழுவும் ரீ ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

 

 

 

Next Story

"திருமாவளவன் பார்த்துள்ளதால் இப்படம் நியாயத்தை பேசும்..." - கே.எஸ்.ரவிக்குமார்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

ks ravikumar Speech Pudhu Vetham Audio Launch

 

விட்டல்‌ மூவிஸ்‌ தயாரிப்பில் 'காக்கா முட்டை' சிறுவர்கள்‌ விக்னேஷ்‌, ரமேஷ்‌, வருணிகா, சஞ்சனா, இமான்‌ அண்ணாச்சி, சிசர்‌ மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'புது வேதம்'. மேலும் 2 ரூபாய்‌ டாக்டர்‌ ஜெயச்சந்திரன்‌ ஒரு முக்கிய வேடத்தில்‌ நடித்துள்ளார். ராசா விக்ரம்‌ இயக்கியுள்ள இப்படத்திற்கு ரபி தேவேந்திரன்‌ இசையமைத்துள்ளார். விரைவில்‌ இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு திருமாவளவன் எம்.பியும் கலந்துகொண்டு பேசினார். 

 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், "இந்த விழாவுக்கு நெல்லை சுந்தர்ராஜன் செய்த தொல்லையால்தான் வந்தேன். இங்கு வந்தது நல்லாதாகிவிட்டது. எனது பழைய நண்பர்கள், இயக்குநர் வி.சேகர் போன்றவர்களை சந்திக்க முடிந்தது. பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடித்த வேதம் புதிது  படத்துக்கு இசையமைத்தவர் தேவேந்திரன். இன்றைக்கு அவரது மகன் புது வேதம் படத்தில் பாடல் இசையமைத்திருக்கிறார். திருமாவளவன் இந்த படத்தை பார்த்திருக்கிறார் என்றால் அடித்தட்டு மக்களுக்கான நியாயத்தை பேசும் படமாகத்தான் இது  இருக்கும் என்று கருதுகிறேன். இப்படம் ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துகள்" என்றார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பேசுகையில், "புது வேதம் படத்தை இயக்குநர் ராசா விக்ரம் எனக்கு திரையிட்டுக் காட்டினார். முழுமையாகப் பார்த்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும்போது, ‘எல்லோரும் இப்போது சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று படம் எடுக்கிறார்கள்’ என்ற வருத்தத்தை சொன்னார். அப்படிப்பட்ட இந்த திரையுலகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்துடன் படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

 

ராசா விக்ரம் போன்று சாதி வேண்டாம், மதம் வேண்டாம், எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிப்போம் என புரட்சிகரமான முற்போக்கான சிந்தனையாளர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது; ஆறுதல் அளிக்கிறது. இந்த இயக்குநரின் பார்வை இடதுசாரி பார்வையாக இருக்கிறது. முற்போக்கு பார்வையாக இருக்கிறது. ஜனநாயக; சமத்துவப் பார்வையாக இருக்கிறது. எளிய மக்களை உற்று நோக்குகிற ஒரு பார்வையாக இருக்கிறது.

 

ஒருபுறம் சாதிப்பெருமை பேசுபவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்  ஊற்றுகிறவர்களாக இருந்தாலும் ஐயன் திருவள்ளுவர், அவ்வைப்பிராட்டி, புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நாம் சிந்திக்கிறோம். மனித குலத்தை தாண்டி பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அதுதான் கருணை. அதைத்தான் வள்ளலார் தனிப்பெருங்கருணை என்றார். எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு என்ற ஆன்ம நேயத்தைப் போதித்தவர் வள்ளலார்.

 

காலம் நமக்கு அவ்வப்போது வள்ளலார்களை தந்து கொண்டேயிருக்கும். திரைத்துறையில் எத்தனை சாதிவெறியர்கள் வந்தாலும் மதவெறியர்கள் வந்தாலும் எப்படி படம் எடுத்தாலும் சமூகத்தை எப்படி பாழ்படுத்த நினைத்தாலும் அதெல்லாம் எதிர்கொள்கிற சிந்தனையாளர்களை இந்த சமூகம் தந்துகொண்டே இருக்கும். அந்த காலத்தில் வள்ளலார் கிடைத்தார். இந்த காலத்தில் தந்தை பெரியார் கிடைத்தார், அம்பேத்கர் கிடைத்தார். அவர்கள் தந்த கொள்கைகள் நம்மை வழிநடத்துகின்றன என்பதற்கு சான்றாக இயக்குநர் ராசா விக்ரம் இருக்கிறார்" என்றார்.