Skip to main content

கண்ணதாசன் குற்றாலம் போன கதை... - வைரமுத்து பகிர்ந்த சுவையான நினைவுகள்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

நேற்று (13 ஜூலை) கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள். இதை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது பல சுவாரசியமான நிகழ்வுகளை, நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பிற முன்னணி பாடலாசிரியர்களுக்கும் தனக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார்...

 

vairamuthu speech



"எனக்கும் என்னைவிட சிறந்தவர்களான மூத்த கவிஞர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை நான் இந்த மேடையில்தான் சொல்கிறேன். இதை மனுஷ்யபுத்திரன் அறிவார். கோடம்பாக்கத்துக்கு இரண்டு மாதங்கள் வராமல் இருந்த கவிஞர்கள் உண்டு. ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் ஆண்டுக்கணக்கில் இடைவெளி விட்ட கவிஞர்கள் உண்டு.

 

 


'மணப்பாறை மாடுகட்டி' எழுதிய, உத்தமபுத்திரனில் 'முல்லை மலர் மேலே' எழுதிய, 'தாய்க்குப் பின் தார'த்தில் 'மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே' என்ற பாட்டை எழுதிய.. மக்களைப் பெற்ற மகராசி எழுதியவர் மருதகாசி என்ற மகத்தான கவிஞர். இத்தகைய கவிஞர், திரைத்துறையில் தனக்கு வாய்ப்பில்லை என்று கும்பகோணம் சென்று விவசாயம் செய்தார். இரண்டு ஆண்டுகள் சென்னை வரவேயில்லை. பின்னர், தேவர் அவரை அழைத்து வந்து பாட்டெழுதச் சொன்னார். இப்படியெல்லாம் நிகழ்ந்ததுண்டு.

 

 

kannadasan



கண்ணதாசன் குற்றாலத்துக்குப் போவார். இவர் கிளம்பும்போது அங்கு அருவியில் தண்ணீர் வந்திருக்காது. ஆனால், அங்கு இருக்கும்போது அருவியில் தண்ணீர் வரத் துவங்கினால் உடனே அங்கேயே தங்குவார். ஒரு மாதம் தண்ணீர் வந்தால், 'ஒரு மாசம் நான் இங்கதான் தங்குறேன்... தினமும் குளியல், தினமும் எண்ணெய் தேச்சுவிடு, தினமும் கோழிக் குழம்பு, தினமும் கோழிக் குழம்புக்குப் பக்கத்துல ஒன்னு இருக்குமே அது' அப்படி சுதந்திரமா இருப்பார். ஒரு மாதம், மேலே ஆகாயம்... கீழே பூமி... நடுவில் கண்ணதாசன்னு சுதந்திரமா இருப்பார்.

 

vaali mgr



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாட்டு எழுதிட்டு, இடையில ஊருக்குப் போய் விவசாயம் பண்ணிட்டு வந்து திரும்ப கொஞ்ச நாள் எழுதுவார். ஒரு முறை வாலியைப் பத்தி பாரதிராஜா சொன்னார், 'மூணு வருஷமா வாலியோட காரை நான் கோடம்பாக்கத்துல பாக்கவேயில்ல'னு. கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு, சகலகலா வல்லவன் படத்துக்கு பாட்டு எழுதித்தான் அவர் ரெண்டாவது ரௌண்டே வந்தாருன்னு சொல்வாங்க. அப்போதான் அவர் சம்பாரித்தார். எம்.ஜி.ஆர்க்கு பாட்டெழுதி சம்பாரிக்காதவர், 'நேத்து ராத்திரி அம்மா' எழுதித்தான் சம்பாரித்தார்.

 

 


எல்லோருக்கும் இடைவெளி உண்டு. அல்லது அவர்களே இடைவெளி விடுவார்கள். ஆனால், 1980ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் இன்று வரை நான் பாட்டு எழுதாத நாள் இல்லை. இதுதான் மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்".     

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.