Skip to main content

முருகனை திட்டிய தேவர்... ரெட்டியார் ரூபத்தில் வந்து உதவிய முருகன்! கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள் #6

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

devar

 

தமிழ்த் திரையுலகில் கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தொடர் தோல்விகளால் தடுமாறி வந்த சாண்டோ சின்னப்பத்தேவர், அதிலிருந்து எவ்வாறு மீண்டார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு....

 

தேவர் எடுத்த நான்கு படங்கள் தொடந்து தோல்வியைத் தழுவியது பற்றி முன்னரே கூறியிருந்தேன். தொடர் தோல்வி காரணமாக அடுத்தடுத்து தேவரால் படம் இயக்க முடியவில்லை. அதனால் அவர் அலுவலகத்தில் வேலை பார்த்த பெரும்பாலானோர் கிளம்பிவிட்டனர். படக் கம்பெனி கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீடு மாதிரிதான் இருக்கும். ஆளுக வருவாங்க.. போவாங்க... இப்ப மூன்று மாசமா படம் எடுக்குறது நின்ன உடனே வெறிச்சோடி கிடக்குது. தேவரும் அவர் கூட சமையல்காரர், வாட்ச்மேன், ப்ரொடக்ஷன் பாய், ட்ரைவர் என ஐந்து பேர் மட்டும்தான் இருக்காங்க. அன்று தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு... நான்கு பேரும் தேவர் முன்னாடி வந்து நிக்குறாங்க. தேவருக்கு ஒரே அதிர்ச்சி. "என்னப்பா நீங்களும் கம்பெனியை விட்டுப் போறீங்களா" என தேவர் கேட்க, "இல்லையா நாளைக்குத் தீபாவளி... ஏதும் கவனிக்கலியே" என நால்வரும் சேர்ந்து கூறியுள்ளனர். தேவருக்கு அப்போதுதான் போனஸ் குடுக்கணுமேன்னு உரைச்சிருக்கு.

 

உடனே, அந்தத் தெருமுக்கில் இருந்த ஒரு சேட்டு வீட்டுக் கதவை போய் தட்டினார் தேவர். அந்த சேட்டு, தேவருக்கு ரொம்ப நெருக்கமானவர்தான். "என்ன தேவரே, இந்த நேரம் வந்துருக்கீங்க" எனக் கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். "ஆபிஸ்ல வேலை பார்க்குறவங்களுக்குப் போனஸ் கொடுக்கணும்... அவசரமா ஆயிரம் ரூபாய் வேணும்... ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்கிறார் தேவர். அந்த சேட்டு பணத்தை எடுத்துக்கொண்டு வந்து தேவரிடம் கொடுக்கிறார். பணத்தை வாங்கிய தேவர், "நான் எதுல கையெழுத்து போடணும்னு சொல்லுங்க" எனக் கேட்கிறார். "கையெழுத்தெல்லாம் வேண்டாம்... தேவரைப் பத்தி எனக்குத் தெரியும்" என நம்பிக்கையோடு கூறுகிறார் ரெட்டியார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பதெல்லாம் பெரிய விஷயம். 

 

ad

 

அலுவலகத்திற்குச் சென்ற தேவர், அங்கிருந்த நால்வரையும் அழைத்து தலா 250 ரூபாய் பிரித்துக் கொடுத்தார். நல்ல படம் பண்ணிக்கொண்டிருந்த கம்பெனி, ஃபெயிலியர் ஆகி நின்றுவிட்டதுன்னா அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பது கலையுலகத்தில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். பின், வீட்டிற்குச் சென்ற தேவர் அன்று நிம்மதியாகத் தூங்கினார். தேவர்கிட்ட உள்ள சிறப்பு என்னனா, தொழில்ல தோல்வியடைந்தா முருகனை அநியாயத்திற்குத் திட்டுவார். ஃபோட்டோவைப் பார்த்துதான் திட்டுவார். ஆனால், முருகன் அவர் முன்னால உட்கார்ந்து இருக்குற மாதிரி நினைத்து, உனக்கெல்லாம் அறிவு இருக்கா... உனக்கு அதிர்ஷ்டமே இல்லடா முருகா... படம் ஓடுனாத்தான் உன் கோயிலுக்கு நிதி கொடுக்க முடியும்... இப்ப அப்படியே உட்கார்ந்து இருடா என்பார். 

 

மறுநாள் காலை தூங்கிக்கொண்டு இருக்கும்போதே நாகி ரெட்டியார்கிட்ட இருந்து தேவருக்கு ஃபோன் வருது. “தேவரே உங்கள நேர்ல பாக்கணும்... ஸ்டூடியோக்கு வாங்க” என்கிறார் ரெட்டியார். உடனே குளிச்சு கிளம்பி ரெட்டியார் ஸ்டூடியோவிற்கு தேவர் போகிறார். மூன்று மாசமா படம் எடுக்காதது குறித்து ரெட்டியார் கேட்க, “தொடர்ந்து நாலு படம் ஃப்ளாப் ஆகிருச்சு... பைனான்சுக்கு ஒருத்தரும் பணம் தர மாட்டுக்காங்க” என தேவர் விளக்கம் அளிக்கிறார். உடனே ரெட்டியார், “ஏன் தேவரே... நான் உனக்கு கேட்க கேட்க ஏன் பணம் கொடுத்தேன் தெரியுமா... உங்கிட்ட நேர்மை இருக்கு... பொய் கிடையாது.. குடி, கூத்து கிடையாது... உழைப்புல நம்பர் 1” என்கிறார். “நாலு படம் போகலன்னு இப்படி உட்கார்ந்துட்டியே... என் நிலைமைலாம் என்னன்னு உனக்குத் தெரியுமா” என்று கூறி, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். 

 

பின், ”தேவரே உடனே அடுத்த படத்தை நீ தொடங்கு... எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தாரேன்” என்றார் ரெட்டியார். தேவருக்கு ஒன்னுமே புரியல. அந்த முருகன்தான் ரெட்டியார் ரூபத்தில் வந்து உதவுவதாக நினைத்து தேவர் கண்கலங்கினார். ரெட்டியார் கொடுத்த நம்பிக்கையில் அடுத்தப் படத்திற்கான பணிகளை உடனே தேவர் தொடங்கினார்.. (தொடரும்)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.