Skip to main content

யார் என்று கேட்ட வாணி ஸ்ரீ... பழையதை மறக்காமல் வந்து பேசிய விஜயசாந்தியும் ஜெயந்தியும்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

Jayanthi

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகை விஜயசாந்தி குறித்தும் நடிகை ஜெயந்தி குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

பாரதிராஜா கதாநாயகனாக நடித்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் விஜயசாந்தி சில காட்சிகளில் நடித்திருப்பார். அந்தப்படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. அந்தப்படத்தில் நடித்த மற்றவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தபோதிலும் விஜயசாந்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரைச் சினிமாவில் இருந்து ஓரங்கட்டிவிட்டனர். விஜயசாந்தி அப்பா சீனிவாசனும் நானும் நெருங்கிய நண்பர்கள். சீட்டாட்டம் மூலம் எனக்கும் அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. 'இளஞ்ஜோடிகள்' படத்திற்காக நாங்கள் தயாராகிக்கொண்டு இருந்தோம். படத்தின் பெயருக்கு ஏற்ப இளம் நடிகர்களாகத் தேடினோம். பல கட்டத் தேர்வுகளுக்கு பிறகு, ராதா, விஜயசாந்தி, சுரேஷ், கார்த்தி ஆகிய நால்வரையும் நடிக்க வைத்தோம். நால்வருக்குமே இது இரண்டாவது படம். தமிழில் 'இளஞ்ஜோடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

'இளஞ்ஜோடிகள்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையைக் கைப்பற்றிய தேனிலவு வசந்தி, தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். தமிழைவிட தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்தப்படத்தின் ரிலீசிற்குப் பிறகு விஜயசாந்திக்குத் தூங்குவதற்குக்கூட நேரமில்லாத நிலை ஏற்பட்டது. அவருக்கென தனி மார்க்கெட் உருவானது. ஒரு காலத்தில் கே.ஆர்.விஜயா நடித்திருந்தால் உடனே படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கிக்கொள்வார்கள். தெலுங்கில் அதுபோன்ற அந்தஸ்தை விஜயசாந்தி பெற்றார்.  

 

அந்தக்காலத்தில் ஏ.வி.எம் மற்றும் வாகினி ஸ்டூடியோக்கள்தான் பெரிய ஸ்டூடியோக்கள் என்பதால் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கூட இங்கு நடைபெறும். என்னுடைய படத்தின் படப்பிடிப்பும் அங்குதான் நடந்துகொண்டிருக்கும். அங்குப் படப்பிடிப்பிற்கு விஜயசாந்தி வந்தால் என்னைச் சந்திக்காமல் செல்லமாட்டார். ஒருமுறை அவரது படத்திற்கான ஷாட் எடுத்துக்கொண்டிருக்கும்போது, நான் அந்த வழியாக சென்றுகொண்டிருந்தேன். உடனே, கட் சொல்லிவிட்டு 'கலைஞானம் சார்...கலைஞானம் சார்...' என என்னை நோக்கி ஓடிவந்தார். என் கையில் முத்தம் கொடுத்துவிட்டு என் குடும்பத்தினர் பற்றி நலம் விசாரித்தார். 'இளஞ்ஜோடிகள்' படத்திற்காக நளினியைத்தான் முதலில் புக் செய்திருந்தேன். அவர் அப்பா கேட்டுக் கொண்டதால்தான் விஜயசாந்தியை ஒப்பந்தம் செய்தேன். "ஷாட்ல இருக்கும்போது இப்படி ஓடிவராதம்மா... நான் வேணும்னா நிக்கிறேன்" என்பேன். "சும்மா இருங்க சார்... நீங்க இல்லனா நான் இவ்ளோ பெரிய ஆளாகியிருப்பேனா" என்பார். சினிமாவில் எல்லாரிடமும் நன்றியை எதிர்பார்க்க முடியாது. ஆனால், விஜயசாந்தி பழையதை மறக்காமல் நன்றியுணர்வுடன் வந்து பேசினார். "கதையாசிரியர், கேமரா மேன்லாம் யாருன்னு தெரியாது... யார் அவங்க" என என் கதை மூலம் நாயகியாக அறிமுகமாகிய வாணி ஸ்ரீ ஒருமுறை கேட்டுவிட்டார். நான் அவரை குறை கூறுவதற்காக இதைக் கூறவில்லை. அதேபோல இன்னொரு சம்பவத்தையும் கூறுகிறேன். 

 

நடிக்க வாய்ப்புத்தேடி சென்னை வந்த நடிகை ஜெயந்தி, தேனாம்பேட்டையில் குடியிருந்தார். ஒருநாள் நான் வேலை பார்த்த கம்பெனிக்கு படவாய்ப்பு தேடிவந்தார். தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லை என அந்தப் பெண்ணிடம் கூறிய இயக்குநர் ராமதாசன், அவரது அட்ரஸை வாங்கிக்கொள்ளும்படி என்னிடம் கூறினார். பின், அந்தப்பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வீடு எங்கிருக்குனு பார்த்துட்டுவா என்றார். அவரது வீட்டிற்கு அருகே சென்றபோது இரு ரவுடிகள் குடிபோதையில் வந்து ஜெயந்திக்குத் தொந்தரவு கொடுத்தனர். "நாங்களே இந்த ஊருக்கு புதுசு சார்... இப்படித்தான் டெய்லி தொந்தரவு கொடுக்குறாங்க சார்... வேற எங்கையாவது வீடு இருந்தா வாடகைக்கு பாத்துக்கொடுக்க முடியுமா சார்..." என ஜெயந்தியின் அம்மா என்னிடம் கேட்டார். உடனே, சூளைமேட்டில் ஒரு வீடு வாடகைக்குப் பார்த்து அன்று இரவே அவர்கள் அந்த வீட்டில் குடியேற உதவினேன். ஜெயந்தியை வளர்த்தவர் மிகப்பெரிய ஜமீன்தார். அவர் ஜெயந்தியைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்தார். இவர்தான் நமக்கு வீடு பார்த்துக் கொடுத்தது என அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவைத்தார். அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளும்படியும் அவரை எனக்குத் தெரிந்த படக்கம்பெனிகளில் அறிமுகம் செய்துவைக்கும்படியும் என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

 

அப்படியே சில நாட்கள் கடந்தன. ஒருநாள், "எனக்குத் தமிழ் பேச மட்டுமே தெரியும் சார்... எழுத, வாசிக்கத் தெரியாது... எனக்குத் தமிழ் சொல்லித்தர முடியுமா" என்று ஜெயந்தி என்னிடம் கேட்டார். பின்பு, அவருக்குத் தமிழ் எழுதப்படிக்க நான் கற்றுக்கொடுத்தேன். ஜெயந்திக்கு கற்பூர புத்தி. மிக விரைவிலேயே தமிழ் எழுத, வாசிக்கக் கற்றுக்கொண்டார். அதன் பிறகு, சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என பெரிய இடத்தை அடைந்துவிட்டார். சில ஆண்டுகள் பிஸியாக நடித்த அவர், ஓர் இயக்குநரின் மகனைத் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். என்னை எங்கு பார்த்தாலும் வந்து பேசிவிட்டுச் செல்வார். அவர் கணவரிடம், நான்தான் தமிழ் எழுத, வாசிக்க கற்றுக்கொடுத்தேன் எனக் கூறி என்னை அவருடைய 'குரு' என அறிமுகப்படுத்தினார். எங்குப் பார்த்தாலும் 'குருகார்' என்றுதான் என்னை அழைப்பார். விஜயசாந்திபோல ஜெயந்தியும் பழையதை மறக்காமல் நன்றியுணர்வுடன் நடந்துகொண்டார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.