பாஜக தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தில் பிறந்த இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக தன் பணியை தொடங்கினார். பின்பு 2019-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து தன் சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு 2020-ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் தன்னை இணைத்து கொண்டார். தமிழக பா.ஜ.க தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார். முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை இதனிடையே ஒரு படத்திலும் நடித்துள்ளார்.
நீச்சல் போட்டியில் பல சாதனை படைத்துள்ள கே.எஸ். விஸ்வாஸின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.எஸ். விஸ்வாஸ், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10-வது வயதில் ஒரு விபத்தினால் இரண்டு கைகளையும் இழந்தவர். நீச்சலின் மீது ஆர்வம் உள்ள விஸ்வாஸ் தனது குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியால் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். பின்பு சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமையால் பல சாதனைகளை படைத்ததுள்ளார்.
இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அரபி’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாக்க போவதாக 2019-ல் கன்னட இயக்குநர் ராஜ்குமார் அறிவித்தார். இப்படத்தில் விஸ்வாஸின் நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு அண்ணாமலை நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
'அரபி’ படத்தின் டீசர் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அது தள்ளிப்போகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த டீசர் தள்ளிப்போகிறது. விரைவில் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரி, விவசாயி, அரசியல்வாதி என பல முகங்களை காட்டிவரும் அண்ணாமலை தற்போது 360 டிகிரி கோணம் போல சினிமாவிலும் முகம் காட்டவுள்ளார்.