கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இந்தத் தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வரும் நிலையில் பின்னணி பாடகி சின்மயி பாடல்களைப் பாடிய விடியோவை, இவரிடம் விரும்பி கேட்கும் ரசிகர்களுக்கு அனுப்பி அதன்மூலம் நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இப்படிப் பாடல் பாடுவதன் மூலம் இதுவரை 1,100-க்கும் மேலான ஏழைக் குடும்பங்களுக்கு நேரடியாகக் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம்வரை நிதி உதவி செய்துள்ள பாடகி சின்மயி இந்தப் பாடல் பாடி உதவி செய்வது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
''எனது 2,050 ஆவது பாடல் வீடியோவை இன்று அனுப்பினேன். நான் இதைத் தொடங்கும்போது, இது நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. நன்கொடையாளர்களை, பயனாளிகளுடன் நேரடியாக இணைப்பது சில குடும்பங்களுக்கு நீண்ட கால தேவைக்கும் உதவியுள்ளது. ஒட்டுமொத்தமாக இது எனக்கு ஒரு தாழ்மையான அனுபவமாகும்'' எனப் பதிவிட்டுள்ளார்.