Skip to main content

நான் எப்படி இயக்குநராக மாறினேன் தெரியுமா..? - காரணம் பகிரும் நடிகர் அரவிந்த் சாமி

Published on 11/08/2021 | Edited on 11/08/2021
fxbxfbdf

 

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மனிதர்களின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களின் அடிப்படையில் 9 குறுங்கதைகள் இதில் வெளிவந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அரவிந்த்சாமி, முதல் முறையாக இந்த ஆந்தாலஜி மூலம், இயக்குநராக மாறியுள்ளார். கோபத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள "ரௌத்திரம்" பகுதியை அவர்  இயக்கியுள்ளார். "ரௌத்திரம்" பார்வையாளர்களிடம் பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில் தனது அறிமுக இயக்கம் குறித்து, நடிகர், இயக்குநர் அரவிந்த்சாமி  கூறியபோது...

 

"90களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. மணி சார் 'நவரசா' குறித்து என்னுடன் பேசியபோது, நான் அதில் பங்கேற்க முடியுமா எனக் கேட்டேன். நான் அவரிடம் இயக்குநராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குநராக எனது பயணம் துவங்கியது. இயக்குநராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்ததது தான் அதற்கு காரணம். 

 

அவர்கள்தான் என் வழிகாட்டி. ஏதாவது செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் அது குறித்து, கவனித்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மற்றும் அதற்கான வாய்ப்பு வரும்போது, தயங்காமல் ஏற்றுக்கொண்டு செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் இப்படைப்பை உருவாக்கியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான் தேர்ந்தெடுத்தேன் அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.   
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் சாமியுடன் மோத ஆர்வமாக இருக்கும் கார்த்தி

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

karthi premkumar movie update

 

ராஜுமுருகன் இயக்கும் 'ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை முடித்துவிட்டு 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ள நிலையில் அந்தப் பதிவில், "என்னுடைய அடுத்த படம் அழகான காதல் கதையை வழங்கிய 96 பட இயக்குநர், பிரேம்குமார் இயக்கத்தில் தான். இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிக்கின்றனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2டி நிறுவனம் விரைவில் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிப்பார்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த கார்த்தி பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

எனவே 2டி நிறுவனம் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், கடைக்குட்டி சிங்கம், விருமன் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

 

 

 

Next Story

'ஏகே 62' - அஜித்திற்காக ரூட்டை மாற்றிய அரவிந்த்சாமி, சந்தானம்?

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

aravind samy  and santhanam to act in ajith 62 movie reports

 

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் பொங்கலை முன்னிட்டு வருகிற 11 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'ஏகே 62' படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்திலும் சந்தானம் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 

 

'தனி ஒருவன்' படத்தின் மூலம் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால், அப்படங்கள் பலவும் ரிலீசாகாமல் கிடப்பில் உள்ளன. இதனால் மீண்டும் தனது கவனத்தை வில்லன் கதாபாத்திரம் பக்கம் அரவிந்த்சாமி செலுத்தவுள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், இப்போது மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்னதாக அரவிந்த்சாமியும் அஜித்தும் ஒரே படத்தில் நடித்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான 'பாசமலர்கள்' படத்தில் அஜித் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 'ஏகே 62' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. 

 

சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு மற்ற படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். ஆனால், 'ஏகே 62' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் இத்தகவல் ரசிகர்களைச் சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஹீரோவிலிருந்து திரும்பவும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதுகுறித்து படக்குழுவும் சந்தானமும் விரைவில் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு பட ரிலீசுக்கு பிறகு 'ஏகே 62' பட அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.