2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இம்மாதம் 23ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோ நகரில் தொடங்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இதுவரை 120க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதிபெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை இளம் பாடகி அனன்யா பாடியுள்ளார். அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.
‘இந்துஸ்தான் வே’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது... "ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனன்யா பிர்லாவின் இந்த முயற்சிக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றிணைந்து பணிபுரிவதற்கு கடினமான இந்தக் கரோனா காலகட்டத்தில், உணர்ச்சி ததும்பும் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இந்தியாவுக்காகவும் இந்திய அணிக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இந்தப் பாடலை அதிகளவில் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகிவருகிறது.