ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம், 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ஜியோ ஸ்டூடியோஸ் வெளியிடவுள்ள இத்திரைப்படத்தை ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம்.மூவிஸ், ஐடியல் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இணைந்து தயாரித்துள்ளது. ரஹ்மானின் முதல் தயாரிப்பான இப்படத்தின் கதாசிரியரும் அவரே ஆவார். ‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுக நடிகரான ஏஹன் பட்டை ‘99 சாங்ஸ்’ மூலம் ரஹ்மான் அறிமுகப்படுத்துகிறார். நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்து இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பேசியபோது.... “என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம்.மூவிஸின் சார்பாக இந்த பரீட்சார்த்தமான திரைப்படத்திற்காக ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே ‘99 சாங்ஸ்’-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட், ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது.
2010ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம். அப்போது நிறைய விஷயங்கள் நடந்தன. அவற்றை முடித்து டிசம்பரில் விமானத்தில் வந்தபோது, தேவதை கதை மாதிரி ஒரு யோசனை வந்தது. ஒரு பையன், ஒரு பெண்ணை அடைவதற்கு 100 பாட்டுக்கள் எழுதினால் எப்படியிருக்கும். இந்தக் கருவிலிருந்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு இந்தக் கதையை உருவாக்கினேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி கிடைத்தார். இதற்கு நிதியளிக்க ஐடியல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கிடைத்தது. அதன்பின் ஒவ்வொரு கூட்டாளியாக கண்டுபிடித்துதான் இந்தப் படம் உருவானது.” என்றார்.