திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். இவர்களுடன் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்தும் பங்கேற்றிருந்தார். 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தை அவரது இலக்கை நோக்கி சுட்டார்.
இதனிடையே அஜித்தை பார்க்க ரைபிள் கிளப் வளாகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களை பார்க்க ரைபிள் கிளப் மடியில் ஏறிய அஜித் அவர்களுக்கு கையசைத்து முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வந்தது.
இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற டி.ஜி.பி தேவாரம் பதக்கங்களை வழங்கினார். இதில் நடிகர் அஜித்குமார் அணி சென்ட்ரல் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், ஸ்டாண்டார்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்க பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் அணி ஆண்கள் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் என 4 தங்கம் 2 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.