சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வசூல் ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றது.
சமீபத்தில் இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சாய் பல்லவியிடம் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, "மருத்துவத்துறை என்பது கடல் போன்றது. எங்கிருந்து கேள்வி கேட்கப்படும் என்பது கணிப்பது கடினம். தேர்வு முடிவு வெளியாகும்போது மாணவர்கள் மனரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அதுபோன்ற நேரத்தில் எழும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட பெற்றோர்களும் நண்பர்களும் அவர்களுடன் பேச வேண்டும். மோசமான மதிப்பெண் காரணமாக என்னுடைய குடும்பத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எடுத்தது மோசமான மதிப்பெண்ணும் அல்ல. ஆனால், தன்னுடைய தாழ்வு மனப்பான்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை என்பது நம்முடைய குடும்பத்தினருக்கு நாமே தண்டனையளிக்கும் செயல். நேர்மறையாக பேசி தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என நான் எளிதாக கூறிவிடலாம். ஆனால், அப்படியான தருணத்தை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அதே நேரத்தில் தன்னுடைய சிந்தனையை மாற்றி எதிர்மறையான எண்ணங்களில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியும் என நான் நம்புகிறேன்" எனக் கூறினார்.