Skip to main content

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே முதல்வரானவர் கதை!  - முதல்வரைத் தெரியுமா? #10  

Published on 18/12/2018 | Edited on 23/12/2018

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்து முதல்வர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் பெரும் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழ்நிலை மட்டுமே என்றும் சிலர் கூறுகின்றனர். மோடியின் போட்டியாளர் தான் தான் என்று நிறுவியிருக்கிறார் ராகுல். இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வென்று முதல்வராகியிருப்பவர்களை தெரியுமா? தெரிந்துகொள்ள வேண்டாமா? கடந்த பகுதியில் நாம் அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் கதையைப் படித்தோம். அப்பொழுதே அடுத்த தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறைவு என்பதை பேசியிருந்தோம். அது நிகழ்ந்திருக்கிறது.  ஆனால், மக்களைப் போலவே நாமும் சச்சின் பைலட் முதல்வராவார் என்று எதிர்பார்த்தோம். இங்கோ அசோக் கெலாட் முதல்வராகியிருக்கிறார். இதுதான் காங்கிரஸ், இதுதான் அரசியல்.


 

ashok gehlot



இந்திய வரைப்படத்தில் உச்சத்தில் இருக்கும் மாநிலம் ராஜஸ்தான். ராஜஸ்தானிகள் மற்ற மாநில மக்களை விட தனித்தே தெரியும் வகையில் அவர்களது ஆடைகள் இருக்கும். அதேபோல் வீரத்திலும் அவர்கள் தனித்துவமானவர்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அங்கு தனித்துவம் நிறைந்து இருந்தாலும், அரசியல் என்பது மற்ற மாநிலங்களைப்போல்தான். தமிழகத்தில் திமுக அதிமுக போல், ராஜஸ்தானில் காங்கிரஸ் – பாஜக. மாறி மாறி ஆட்சிக்கு வரும்.

ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 199 இடங்கள். 2018 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவில் காங்கிரஸ் 99 இடத்திலும், பாஜக 73 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடத்திலும், சுயேட்சைகள் 13 இடத்திலும், மீதியுள்ள இடங்களை சிறு சிறு கட்சிகளும் கைப்பற்றின. இதில் ஆட்சி அமைப்பதற்கான இடங்களை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் பெற்றதால் அந்தக்  கட்சியே ஆட்சி அமைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவிக்கு வரப்போகிறவர் இவர்தான் என ஒருவரை ராஜஸ்தானின்பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர் எதிரான இன்னொருவரை பதவியில் அமர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை.

காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்றுமே வித்தியாசமானது. ஊழல் புகார் கூறி யாரை கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்களோ   அவரையே அழைத்து வந்து மீண்டும் பதவி தந்து சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்ப்பது அதன் வழக்கம். அந்த சிம்மாசனத்துக்காக உண்மையாக உழைத்தவர்கள் தெருவில் நிற்பார்கள். அப்படித்தான் மாநில அரசியலில் ஓரம் கட்டிவைக்கப்பட்டவர், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பதவிக்கு வருகிறார்... அசோக்கெலாட். தீவிரமாக உழைத்த இளம் தலைவரான சச்சின் துணை முதல்வராகியுள்ளார்.

 

rahul gandhi sachin pilot ashok gehlot



1951ல் இருந்து 1990 வரை ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. 1952ல் காங்கிரஸை சேர்ந்த ஹீராலால் சாஸ்திரி, அதன்பின் வெங்கடாச்சாரி, அடுத்து ஜெய் நாராயணன் வியாஸ், பின்பு   டீக்காராமன், அதற்கடுத்து மோகன்லால் சுகாத்தியா, பிறகு பர்கத்துல்லா கான், ஹரி தேவ் ஜோஷ், ஜெகன்நாத், ஷிவ் சரண் மத்தூர், ஹீரா லால் தேவ்பூரா, ஹரி தேவ் ஜோசி என மாறி மாறி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர். மோகன்லால் சுகாத்தியா 1954ல் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். அது முதல் தொடர்ச்சியாக 17 ஆண்டுகள், அதாவது 1971 வரை முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவர் காலத்தில்தான் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி பாதையில் தட்டுத்  தடுமாறி எழத்துவங்கியது. மாடர்ன் ராஜஸ்தானின் உருவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டியவர் இவர் என்கிறது ராஜஸ்தானின் வரலாறு.

இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டில் நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்டு பின் அது திரும்பப் பெறப்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய ஜனதாதளம் கட்சி, ராஜஸ்தானில் காங்கிரஸ் சரித்திரத்தை உடைத்தது. 1977ல்   ஜனதா தளத்தின் சார்பில் பைரன் சிங் ஷெகாவத் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.  30 மாதங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தார். மத்தியில் ஜனதா கட்சியில் ஏற்பட்ட தலைமை மோதலால் ஆட்சி கலைந்தது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்   1980ல் ராஜஸ்தானின் சட்டசபையை கலைத்தது, முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார் ஜனதா தளம் ஷெகாவத். அதன்பின் அவர் முறையாக பாஜகவில் இணைந்தார். அதன்பின் ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸோடு மோதிக்கொண்டு இருந்தார்.
 

bairan singh shekawat

பைரன்   சிங்   ஷெகாவத்



1989ல் பாஜக – ஜனதா தளம் கூட்டணி   138   இடங்களில்   வெற்றி   பெற்றது.  இரண்டாவது முறையாக   பைரன்   சிங்   ஷெகாவத்   முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை கலைந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒரு வருடம் ஜனாதிபதி வழியாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் 1993ல் தேர்தலை நடத்தவைத்தது. மீண்டும் பாஜக-ஜனதா தளம் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. கடந்த காலத்தை விட இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது பாஜக. வெற்றி பெற்ற 98 எம்.எல்.ஏகள் பைரன் சிங் ஷெகாவத்தை முதலமைச்சராக தேர்வு செய்ய அவர் பொறுப்பு ஏற்றார்.

இந்த முறை 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்தார் ஷெகாவத். இந்துத்துவ வெறியை பைரன் சிங் ராஜஸ்தானில்   வளர்த்தார். சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனை கச்சிதமாக அறுவடை செய்தது காங்கிரஸ் கட்சி. 1998ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் இருந்த அசோக்கெலாட்டை மாநில அரசியலுக்கு அனுப்பி அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை தந்தது. அப்போது ஒரு முறை கூட எம்.எல்.ஏ ஆகாமலேயே முதல்வர் வாய்ப்பைப் பெற்றார் அசோக் கெலாட். இப்போதும் அவர்தான் முதல்வராகியிருக்கிறார். 

அந்த அளவுக்கு இவர் மதிக்கப்பட காரணம் என்ன? அரசியலில் இவர் வளர்ந்து வந்த கதை என்ன?  அப்போது முதல்வராக என்ன சாதித்தார், இப்போது முதல்வராக இவரிடம் என்ன எதிர்பார்க்கலாம்? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.     

முந்தைய பகுதி :

முத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்! முதல்வரைத் தெரியுமா #9 

அடுத்த பகுதி:

பாஜகவை சமாளிக்க இவர்தான் சரி? - முதல்வரைத் தெரியுமா? #11 

 

 

 

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.