Skip to main content

நேசித்தான் என்று எழுதலாமா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 27

Published on 30/11/2018 | Edited on 12/12/2018

திருத்தமான ஒரு சொல்லைப் பிறழ்ச்சியாகப் பயன்படுத்துவதில் நானிலத்தில் நம்மை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. தூய தமிழ் வடிவம் ஒன்றாக இருக்கையில் பேச்சில் பயன்படுத்தப்பட்ட அதன் கொச்சை வடிவத்தையே எழுத்து வரைக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்துவோம். திரைப்பாடல்களில் இந்தப் போக்கு முதலில் தலை தூக்கிற்று. ஆயிற்று, போயிற்று என்று அவர்கள் எழுதவே இல்லை. ஆச்சு, போச்சு என்ற பேச்சு வழக்கினையே பாடல்களில் பயன்படுத்தினார்கள். பிற சொற்கள் அனைத்தையும் எழுத்து வழக்கப்படி எழுதிவிட்டு இடையிடையே ‘ஆச்சு, போச்சு’ என்று எழுதிச் செல்வார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று ஆச்சுது, போச்சுது என்றும் எழுதினார்கள்.

 

 

ss

 

 

எழுத்தின் திருத்தமான வழக்கு ஒன்றாக இருக்கையில் பேச்சில் அதனைச் சற்றே திரித்துச் சொல்வோம். பேச்சு முறையின் வழுக்கல் போக்கில் ஒரு சொல் அவ்வாறு அசை விடுபட்டோ, ஈற்றொலி விடுபட்டோ, இடையோசை மருவியோ ஒலிக்கும்தான். அந்தத் தன்மைகளால் ஏற்படும் நிலையைத்தான் கொச்சை என்கிறோம். ‘பாடடி’ என்பது தூய வழக்கானால் ‘பாடுறி’ என்பது கொச்சை வழக்கு. ‘வந்துவிட்டான் ஐயா” என்பது தூய வழக்கானால் “வந்துட்டான்யா” என்பது கொச்சை வழக்கு.

 

 

தமிழ் இலக்கணம் இத்தகைய சில நிலைமைகளைக் கருத்தில்கொண்டு கூறுகிறது. அவ்வாறு ஒரு சொல்லின் ஒலிப்பில் ஏற்படும் மாறுதலைப் ‘போலி’ என்று வகுத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஞகர வரிசை எழுத்துகள் ஒரு சொல்லின் முதலெழுத்தாக வருகையில் ஞகரம் நகரமாக ஒலிப்பது இலக்கணப்போலி ஆகும்.

 

ஞெகிழ்ந்தது என்பதுதான் தூய தமிழ்ச்சொல் வடிவம். அதனை நெகிழ்ந்தது என்று நாம் கூறுகிறோம். அவ்வாறே எழுதுகிறோம். இங்கே ஞெ என்ற எழுத்துக்குப் போலியாக நெ வந்தது. இது பிழையில்லை. ஆனால், ‘ஞாயிறு’ என்ற சொல்லை ‘நாயிறு’ என்று பேச்சு வழக்கில் கூறுவது அரிதுதான். பெரும்பாலானோர் ‘ஞாயிறு’ என்றே பேச்சிலும் கூறுகிறார்கள். அவ்வாறே எழுத்திலும் ஆள்கிறோம். 

 

‘பிளாஸ்டிக்’ என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லாக ‘ஞெகிழி’யைக் கூறினர். ஞெகிழி இல்லை, நெகிழிதான் சரியென்றனர் சிலர். இதுவும் ஞெகிழ்ந்தது, நெகிழ்ந்தது போன்ற வழக்குத்தான். ஞெகிழி என்பதே மூத்த தமிழ்ச்சொல். அதன் போலிப்பயன்பாடாக நெகிழ் வந்தது. இப்போது நெகிழ் நிலைத்துவிட்டது. ஞெகிழ் அரிதாகிவிட்டது. இவ்வொரு சொல் மட்டுமில்லை, ஞகரத்தில் இருந்த சொற்கள் பலவும்  போலியுருப்பெற்று நிலைத்துவிட்டன. ஞாண் என்பது நாண் ஆகியிற்று. ஞண்டுதான் நண்டு. ஞமன் என்பவன்தான் நமன். பின்பு அவன் எமன் ஆகிவிட்டான். நாடு என்பதற்கு ‘ஞாடு’ என்ற சொல்லும் பயின்றிருக்கிறது. ஞிமிர்தல் என்பதுதான் ‘நிமிர்தல்’ ஆகிவிட்டது.

 

 

ss

 

ஞேயம் என்ற சொல்லை நாம் கேள்வியுற்றிருக்க மாட்டோம். ஞேயம் என்றால் அன்பு. அந்தச் சொல்தான் பிற்காலத்தில் ‘நேயம்’ என்று ஆனது. நேயம் என்ற சொல்லினைக்கூட எல்லாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘நேசம்’ என்று கூறினால் அனைவர்க்கும் விளங்கிவிடும். இங்கே மேலும் ஓர் இலக்கணப்போலி எழுத்து உள்ளே வருகிறது. சொல்லுக்கு இடையில் வரும் யகர ஒலியானது சகர ஒலியாகத் திரியும். அதனால்தான் ‘தேயம்’ என்ற தூய தமிழ்ச்சொல் ‘தேசம்’ ஆனது.  

 

ஞகரத்துக்கு நகரம் பெற்று உருவான ‘நேயம்’ என்னும் சொல், யகரத்துக்குச் சகரம் பெற்று ‘நேசம்’ ஆகிவிட்டது. அடையாளமே தெரியவில்லை. வானொலி நிலையம் இருந்தவரைக்கும் ‘நேயர்கள்’ இருந்தார்கள். ஞேயம் நேயம் ஆனதற்கு இலக்கணத் துணை இருக்கிறது. அதற்கும் மேற்பட்டுத் திரிந்தபோது இலக்கணம் உடன்வருவதில்லை. நாம் பிழைப்பயன்பாடுகளைத் தூக்கிச் சுமக்கிறோம். ’தமிழ் நேயம்’ என்ற இதழைக் கோவை ஞானி வெளிக்கொணர்ந்தார். தமிழாய்வில் ஈடுபட்டிருந்த பெரியவர் பெயர் ‘தேவ நேயப் பாவாணர்’. 

 

நேயம் நேசம் ஆன பிறகு நேசித்தான் என்று எழுதினார்கள். ‘நேசி’ என்று கவிதையில் கெஞ்சினார்கள். நேசித்தான் என்ற சொல்லை அதன் தூய வடிவத்திற்கு மாற்றினால் ஞேயித்தான் என்று வருகிறது. நேசி என்ற ஏவல் வினையை ஆக்க முடிந்தமையால் அதனை ‘நேசிப்பு’ என்று தொழிற்பெயராக்க முனைந்தார்கள். நேசித்தான், வாசித்தான், பூஜித்தான், பிரகாசித்தது, ஜொலித்தது, தீர்மானித்தான் என எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் பிற்காலத்தில் தோன்றிய பிழை வழக்குகளை அடியொற்றுகிறீர்கள் என்று பொருள். ஏனென்றால் ஒரு சொல்லின் வேர் வேறாக இருக்கையில் அதன் பிழை வழக்குகளை அறியாமல் எடுத்தாள்கிறோம். ஞேயம் என்பதனை நேயம் என்று பயன்படுத்துவதுதான் வரம்பு. அதனை நேசம், நேசித்தான், நேசிப்பு, நேசன் எனல் பிழை வழக்குகள் ஆகும். 

 

முந்தைய பகுதி:


பூ என்பதும் சொல்தான், கு என்பதும் சொல்தான் - அவற்றுக்கு என்னென்ன பொருள்கள் தெரியுமா...? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 26

 

அடுத்த பகுதி:

 ஒருநாளா ? ஒரு நாளா ? ஒருமுறையா ? ஒரு முறையா ? கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 28

 

 

 

 

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.