Skip to main content

சண்டமாருதம் என்றால் என்ன??? சரிகமபதநி-யின் தமிழ் பொருள் இதுதான்... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 25

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
soller uzhavu


 


அண்மையில் ஒருவர் என்னிடம் வினவிய ஐயம் இது. “ஐயா… சண்டமாருதம், பிரசண்டமாருதம் என்கிறார்களே… அவற்றுக்கு என்ன பொருள் ?” நல்ல கேள்விதான். தமிழகத்தின் முதற்பெரும் திரைப்பட நிறுவனமான ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தார் ‘சண்டமாருதம்’ என்ற பெயரில் இதழொன்றையும் நடத்தினார்கள். அவ்விதழின் உதவி ஆசிரியராகச் சென்று சேர்ந்து தொழில்கற்று வளர்ந்தவர்தான் கண்ணதாசன். 


ஒரு சொற்றொடரின் பொருள் நமக்கு உடனே விளக்கமாகவில்லை எனில் அத்தொடர் பிறமொழித்தொடராக இருக்கலாம். சண்டமாருதமும் வடமொழித் தொடர்தான். மாருதம் என்பது காற்று. தென்றல் காற்றினை வடமொழியில் மந்த மாருதம் என்கிறார்கள். நறுமணக்காற்றினை ‘சுகந்த மாருதம்’ என்பார்கள். சண்டமாருதம் என்பது பெருங்காற்று. பிரசண்ட மாருதம் என்பது பலத்த காற்று. சூறாவளி, பெருஞ்சூறாவளி என்று பொருள்கொள்ளலாம்.
 

வடமொழிக்கு நேரான பல தமிழ்ச் சொற்கள் அறியப்படவில்லை. எடுத்துக்காட்டாக, பண்ணின் ஏழு பெயர்களுக்கு உரிய தமிழ்ப்பெயர்களை நாம் அறிந்திருக்க வேண்டும். சரிகமபதநி என்னும் முதலெழுத்தின்படியே அவற்றின் வடமொழிப் பெயர்களை நினைவிற்கொள்ளலாம். சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சம், தைவதம், நிசாதம் என்பவை அவை. அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவை.
 

எல்லாத் துறைசார்ந்தும் வடமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. பண்களும் அப்பெயர்களும் தமிழ்த்தோற்றுவாயுடையன என்று தமிழறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். மேற்காணும் பெயர்களில் வடமொழிக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிந்தோமே தவிர, அவற்றின் பொருள்களை அறியவில்லை. அதனை அறிதற்கு தமிழின் முதல் மொழிநூலை ஆக்கியளித்த மாகறல் கார்த்திகேய முதலியார் வழிகாட்டுகிறார்.
 

 

soller uzhavu



 

சட்ஜம் (குரல்) என்பது மயிலின் ஒலி.

ரிசபம் (துத்தம்) என்பது எருத்தொலி.

காந்தாரம் (கைக்கிளை) என்பது யாட்டொலி.

மத்திமம் (உழை) என்பது கிரவுஞ்சவொலி.

பஞ்சமம் (இளி) என்பது குயிலொலி.

தைவதம் (விளரி) என்பது குதிரையொலி.

நிசாதம் (தாரம்) என்பது யானையொலி.

 
மேற்சொன்ன ஒவ்வொரு ஒலித்தன்மையையும் பண்ணொலியோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். இடையில் யாட்டொலி, கிரவுஞ்சவொலி என்பன யாவை என்ற ஐயமும் தோன்றலாம். ஆடு என்பதுதான் யாடு எனப்பட்டது. ஆறு, ஆடு போன்றவற்றை முற்காலத்தில் யாடு, யாறு என்று வழங்கினர். ஆட்டொலி என்பதைத்தான் தமிழறிஞர் மாகறல் கார்த்திகேய முதலியார் யாட்டொலி என்று துலக்கமான தமிழில் வழங்குகிறார். கிரவுஞ்சம் என்பது கோழியைக் குறிக்கும். 


மயில், எருது, ஆடு, கோழி, குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஒலிப்பு அடிப்படைகள் பண்ணொலிகளாகத் திகழ்கின்றன. தமிழ் மொழிநூல்களில் ஒன்றேயொன்றையேனும் படித்துவிட வேண்டும் என்ற வேட்கை தோன்றினால் மாகறல் கார்த்திகேய முதலியார் எழுதிய “மொழிநூல்” என்னும் நூலைத் தேடிப்பிடித்துப் படித்துவிடுங்கள். நூற்றாண்டுக்கு முந்திய தெள்ளுதமிழ் எத்தகையது என்பதனை அந்நூல் விளக்கும். இணையத்திலேயே ‘பெயர்நிலைத் தாள்கோப்பு’ (pdf) வடிவத்தில் அந்நூல் கிடைக்கிறது. 
 

வடமொழித் தனிச்சொற்கள் இவ்வாறு இருக்கையில் அவற்றின் சொற்றொடர்கள் பல தமிழாக்கப்படமாலும் பொருளுணரப்படாமலும் தேங்கி நிற்கின்றன. மன்மதனைத் தமிழில் எவ்வாறு அழைப்பது என்று ஒருவர் கேட்டார். “ஐங்கணையன்” என்று அழைக்கலாம். ”முத்திரை மோதிரம்” என்று ஒரு சொற்றொடர் இருப்பதாகக் கொள்வோம். அது வடமொழிச் சொற்றொடர். அதனை எவ்வாறு தமிழில் வழங்குவது ? மோதிரத்தைக் குறிக்கும் தூய தமிழ்ச்சொல் ‘ஆழி’ என்பது. பொறியாழி என்று முத்திரை மோதிரத்தைக் குறிப்பிடலாம். கணையாழி என்பதும் அதனைக் குறித்த சொல்தான். ’தருமசாஸ்திரம்” அறநூல். “அர்த்தசாஸ்திரம்” பொருள்நூல். ‘சுதந்திரம்’ என்றால் உரிமை என்பது விளங்குகிறது. ‘சர்வசுதந்திரம்’ என்றால் என்ன ? முற்றுரிமை. இப்படிச் சொற்றொடர்கள் பலவும் மொழிக்கலப்பில் பொருளறியாதபடி தேக்கமுற்றுக் கிடக்கின்றன. பாரதியார் சுதேசகீதங்கள் என்று எழுதிய பாடல்களை “நாட்டுப்பாட்டு” என்று முறையாய்த் தமிழாக்கி வெளியிட்டார் பரலி. சு. நெல்லையப்பர். அத்தகைய ஆர்வலர்கள் இன்றைக்கு அரிதாகிவிட்டனர். அதனால் ஏற்பட்ட தேக்கநிலைதான் இது. 

 

முந்தைய பகுதி:


‘ஆச்சி’க்கு இத்தனை அர்த்தமா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 24
 

 

 

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.