Skip to main content

துரோகிக்கு என் தண்டனை என்ன தெரியுமா? ஆட்டோ சங்கர் #17

Published on 09/09/2018 | Edited on 16/09/2018
auto sankar 17 title

 

சில வருஷங்கள் கழித்து மிக தற்செயலாக மறுபடி தேவியை மவுண்ட் ரோட்டில் சந்தித்தேன். இதயத்தை ஒரு டஜன் இடி ஒரே சமயம் தாக்கியது. ஆடிப்போனேன். அவள் தேக்கி வைத்திருந்த அழகும் இளமையும் அதற்குள் எங்கே போயிற்று? ஐஸ்வர்யாராய் வயதில் ஔவையார் தோற்றம் தருகிறாளே ஏன்?

கதறி அழுதாள் அந்தப் பெண். தனது ப்ளாஷ்பேக்கை கதை கதையாக சொன்னாள். அந்த கோடம்பாக்க கேசவனுக்குக் கல்யாணம் என்பது தினசரி அலுவலாம். ஒவ்வொரு பெண்ணாகக் கட்டிக்கொண்டு அலுத்து சலித்ததும் பம்பாயில் விற்றுப் பணம் பார்த்து விடுவானாம்.

தேவியும் அப்படித்தான் விற்கப்பட்டாள். அங்கே "ஒர்க்லோடு' ஜாஸ்தி. கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லைதான்... மற்ற விஷயத்தில்! ஆனால், அவளது உத்தியோகத்தில்...? வீ.டி.யாக விஸ்வரூபம் எடுத்தது... எந்த வைத்தியத்துக்கும் வசியப்படாததால் பம்பாய் இவளை ரயிலேற்றிவிட்டது. கண்ணைக் கசக்கினாள். அதோடு என் மனசை கசக்கினாள்.
"சரி... இனிமே என்ன செய்யப்போறே?''

"தெரியலைங்க...''

"நீ எதுவும் செய்ய வேணாம்... தனியா ஒரு வீடு பார்த்து குடிவைக்கிறேன்... டாக்டரையும் அனுப்பறேன்.... கவலைப்படாம இரு.''

கண்கலங்க  அந்தப் பெண் நன்றியுடன் கை தொழுதது. இத்தனை இழி நிலையில் கூட தனக்கு ஒருவன் சோறு போட்டு காப்பாற்ற சம்மதிக்கிறானே என அவளுக்கு ஆச்சரியம். வாழ்வில், இதைவிடவும் ஆச்சரியமெல்லாம் காத்திருக்கிறது. நாம் பிச்சையெடுத்து, இந்த பணக்காரனுக்கு பின்னால் சோறு போட வேண்டிய தினமெல்லாம் வரும் என அப்போது அவள் நினைத்திருக்கமாட்டாள்.

 

auto sankar 17-2



இன்னொரு புறம்...

என்னிடம் இருந்த பெண்களிலேயே அழகியான உபத்திராவை தன்னோடு கூட்டிக்கொண்டு ஓடிய சுடலை இருக்குமிடம் தெரிந்தது. நானே அங்கு கஸ்டமர் போல போனேன். என்னைப் பார்த்த அவன் அதிர்ச்சியடைந்தான். புதுமணப்பெண் போல தலைகுனிந்தான்.

"செய்றது ப்ராத்தல்னாலும் தொழில்ல ஒரு நேர்மை வேணாமாடா நாயே?"

அவனிடம் பதிலில்லை. மன்னிப்புக் கேட்க வாய் திறந்தான். "எதுவும் பேசாம ஏறுடா வண்டியில" என்றேன். ஸ்கூட்டரை நான் ஓட்ட பின்னே அவன். வழியில் சிக்னலில் வண்டி நிற்க நொடியில் வண்டியிலிருந்து இறங்கி ஓடி, பல்லவன் பஸ்ஸில் ஏறி மறைந்தான். பாவம் அவன் நினைக்கவில்லை, அவன் மனைவி உபத்திரா இருக்குமிடத்தையும் தெரிந்துகொண்டுதான் நான் வந்தேன் என்று.

கையில் சிக்கியும் எஸ்கேப் ஆகிவிட்டான். ஆனால்,   உபத்திராவை   பகடையாக்கியதில், சுடலை தானாய் எனக்கு ஃபோன் செய்தான். உபத்திராவை வீட்டுக்கு அனுப்பினேன். "அவரை மன்னிச்சுடுங்கண்ணே" என்று கெஞ்சினாள். "அவனை நான் மன்னிச்சா என்னை இங்க இருக்கவங்க மன்னிக்க மாட்டாங்களே... அப்புறம் கூட்டத்துல அவன் அவன் 'தப்பு பண்ணுனாலும் அண்ணன் மன்னிச்சுருவாரு'ன்னு நினைச்சு ஆட ஆரம்பிச்சுருவான். ஆறு மாசமாவது அவனை ஆஸ்பத்திரியில் படுக்க வச்சாதான் என் மனசு ஆறும். அவனை உயிரோட விடுறேன். அவ்வளவுதான் உனக்கு நான் செய்ய முடியும்", அவள் பதிலை எதிர்பார்க்காமல் அனுப்பிவிட்டேன்.

சுடலை   இருக்கும் இடம் தெரிந்துவிட்டதாக கையாட்களிடம் பரபரத்தேன்.

"என்னண்ணே சொல்றீங்க! அந்த துரோகி இருக்கிற இடம் தெரிஞ்சு போச்சா... சொல்லுங்க! எங்கே இருக்கான்... இப்பவே போய் கொத்துக்கறி போட்டுறுவோம்...''

"சரி புறப்படு'' என்றேன்.

"ம்ஹும்! நீங்க அங்கே வரவேணாம். நாங்க பாத்துக்கறோம்.''

"சரி... நான் வரலை! ஆனா நான் சொல்றதைக் கேளு... யாரும் அவனை அடிக்க வேணாம். ரெண்டு கைகளையும் கட்டி கைவிரல்களில் பத்துவிரலுக்கும் மொத்தமா துணி சுற்றி கிருஷ்ணாயில் ஊற்றி கையைமட்டும் கொளுத்திவிடு பாபு... இதைத் தவிர அவன் மேலே உன்னோட விரல்கூட படக்கூடாது! சரிதானா? அதுமட்டுமில்லை. கொளுத்துறதுக்கு முன்னாலே நான் அவன்கிட்டே ஃபோன்ல பேசணும். அவனைப் பேசச் சொல்லுங்க.''

ஆட்டோ புகை கக்கினபடியே புறப்பட்டுப் போனது. பாபுவைப் பார்த்ததுமே பேயறைந்தாற் போல் ஆனான் சுடலை. ஒன்றுக்கு முட்டிக்கொண்டு நெருக்கினது. "சங்கரண்ணன் வரலையா?'' என்றான் பலவீனமாக.

 

auto sankar 17-3



பாபு முகத்தில் விஷச் சிரிப்பு! சுடலையைத் தன் ஆட்கள் சூழ வண்டியில் ஏற்றிக் கொண்டான்.

"சங்கரண்ணன் வரமாட்டாரா பாபு?'' -கேட்ட சுடலையை நோக்கி முஷ்டியை வீசினான் பாபு. தாடையில் வெடித்தது. உதட்டோரம் ரத்த நூல் தொங்கிய வாயுடன் கூப்பாடு போட்டான் சுடலை. உடம்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் தாக்குதல் நடந்தது. கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.

"சங்கரண்ணன் இப்படியெல்லாம் அடிக்கச் சொன்னாரா பாபு?'' -முக்கலும் முனகலுமாய் வேதனையுடன் கேட்டான்.

"அடப் போடா... நீ மன்னிப்பு கேட்டமாதிரி நானும் கேட்டுட்டுப் போறேன்! துரோகம் பண்ணிப்பிட்டு கேள்வி வேறயாடா மவனே!''

 

auto sankar ad


பற்களைக் கடித்தபடி காலை மடக்கி முழங்கால்களால், சுடலையின் ரெண்டு கால்களுக்கும் இடைப்பட்ட உறுப்பில் உக்கிரமாகத் தாக்கினான். படாத இடத்தில் பட்ட அடி! போக உறுப்பில் பிசகாய் விழுந்த தாக்குதல்!

அதிபயங்கரமான வலியை வெளிப்படுத்த நினைத்த சுடலை, வாயைத்திறந்த அடுத்த செகண்ட் விறைத்துப்போய் நின்றான். கண்கள் நிலைகுத்தினது. சப்தமில்லாமல் செத்துப் போனான்.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

முந்தைய பகுதி:

உன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை! - ஆட்டோசங்கர் #16   
 

அடுத்த பகுதி:

உபத்திராவுக்குக் கொடுத்த வாக்கு... ஆட்டோ சங்கர் #18

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.