Skip to main content

உபத்திராவுக்குக் கொடுத்த வாக்கு... ஆட்டோ சங்கர் #18

Published on 15/09/2018 | Edited on 30/09/2018
auto sankar 18



ஒரு புறம் பாபுவின் முகத்தைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. இன்னொரு புறம் மூலவியாதி வந்தவன் போல் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
 
"சுடலை இன்னும் ஏன் போன் செய்யவில்லை”, அங்கிருந்தும் தப்பித்துவிட்டானா, என்ன? தன் மீது சுடலைக்குக் கோபம்   ஏற்பட்டிருக்குமா என்ன? என்ன, என்ன, என்ன என்று நெஞ்சம் நெடுக கேள்விகள் பிறந்துகொண்டே இருந்தது.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக பைக்கை உசுப்பி, உபத்திராவை தேடிக்கொண்டு போனேன். உபத்திரா வீட்டில் இன்னமும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முதல் தட்டிலேயே கதவு கொட்டாவி விட்டது. உபத்திரா வெளிப்பட்டாள்.


"சுடலை இன்னும் வரலையா” என்று கேட்க நினைத்து, "இ... இன்னும் தூங்கலை?'' என்றேன். ம்ஹும்... கூடாது. இப்போது போய்   அப்படிக் கேட்டால் இவள் கலவரம் அதிகமாயிடும். அரண்டு விடுவாள்.

"எப்படிண்ணே தூக்கம் வரும். அ... ஆமா அவர் எங்கே?''

சிரமப்பட்டுச் சிரித்தேன்.

"வந்துடுவான், நீ சாப்பிட்டாச்சா?''

"சாப்பாடு, தூக்கம் எல்லாம் அவரைப் பார்த்தப்புறம்தாண்ணே... அடிச்சு முடிச்சிட்டீங்களா? இன்னும் முடியலையா?'' -அவளுக்குக் கண்ணீர் ததும்பினது.

"கவலைப்படாதே! சுடலையைக் கூட்டிக்கிட்டு  திரும்பி வரேன்... நீ போய் படுத்துக்க! அவனுக்கு எதுவும் ஆகாது. நான் பொறுப்பு!   போதுமா? போய் நிம்மதியா தூங்கு! காலையிலே ஆறுமணிக்குச் சுடலையைக் கூட்டிட்டு வந்து உன் முன்னாலே நிப்பேன்.''

புருபுருவென சீறிக்கொண்டு பறந்தது பைக். கவலை ஆக்ஸாப்ளேடாக சன்னம் சன்னமாக மனதை அரித்தது.

வீட்டு வாசலில் திடும்மென்று பாபுவைப் பார்த்ததும் பரவசப்பட்டேன். கூடவே மெலிந்த நூலான கோபமும் கிளம்பிற்று.

"போனதும் போன் பண்ணச் சொன்னேனில்லே... பண்ண வேணாமா? இப்ப உங்களைப் பார்க்கத்தான் நான் கிளம்பிக்கிட்டிருக்கேன். "ஆள் அகப்பட்டானில்ல?'', "இப்ப சுடலை எங்கே இருக்கான்?'' என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தேன்.

பாபு எச்சிலையும் உண்மையையும் ஒரே சமயம் விழுங்கினான்.
 

 

ad



"நம்ம குடோன்லே கிடக்குதுண்ணே!''

"அப்படியா...?'' -மலர முயன்ற புன்னகை, ஜனனத்திலேயே செத்தது.

"கி... கிடக்கிறானா? கிடக்குதா? எ...ன்...ன... சொ...ல்...றே... பாபு?'' என்றேன் நடுக்க வார்த்தையில்.

"அ... ஆமா... சங்கரண்ணே! அவன் சாகப்போறான்னு எதிர்பார்க்கவே இல்லை, நான்...'' -பாபு பேசிக்கொண்டே போக என் முதுகில் தண்டுவடத்தில் ஓர் ஐஸ் கட்டி ஸ்லோமோஷனில் வழுக்கினது.


குவாட்டர் அடித்துக் குப்புறப்படுத்திருந்தவன் தலையில் குதுப்மினார் விழுந்த அதிர்ச்சி. நெற்றிக்கு முன்னால் நினைவுகளில்   உபத்திராதேவி ஒரு நிமிடம் தொழுத கைகளுடன் தோன்றி "அ...வ...ரை... அடிச்சு முடிச்சுட்டீங்களா... இன்னும் முடியலையா   அண்ணே?” என்றாள்.

"கடவுளே... கடவுளே...'' முகத்திலே அறைந்துகொண்டு அரற்றினேன்.

வெளிச்சம் வேண்டும் என்பதற்காகக் கூரையைக் கொளுத்தின காரியம் செய்துவிட்டான் பாபு. இது ஒருவித எஜமான விசுவாசத்தின் வெளிப்பாடு. தவிர சாகப்போவதை அவனும் எதிர்பார்க்கவில்லை என்கிறானே? இப்போது உபத்திராவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன். முட்டை மீது இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டதே!

 

 

burning 1



"அண்ணே... பாடி குடோன்ல கிடக்குது. காலைல யாவாரத்துக்கு ஆட்களெல்லாம்... வந்துடுவாங்க! அதுக்குள்ள டிஸ்போஸ்    பண்ணணும்...'' என்று இழுத்தான் மோகன்.

பாபு குற்ற உணர்ச்சியுடன் பூமி பார்த்தான். எனக்குள் பரபரவென ஒரு மின்சாரம் பரவியது. சுடலையின் சாவில் எனக்கு விருப்பம்   உண்டோ, இல்லையோ சம்பந்தம் உண்டு. அவன் அதற்குக் காரணமில்லை என்றாலும் சகலரும் இதில் குற்றவாளிதான். பாபு கூட   எனக்காகத்தான் கொலையே பண்ணியிருக்கிறான். அதனால் பிணத்தை அப்புறப்படுத்துவதில் விரைவு காட்டத்தான் வேண்டும்.   முன்பு லலிதாவை அவன் கொலை செய்தபோது கேள்வியே கேட்காமல் அவர்கள் உதவவில்லையா, அதுமாதிரி.

சுடலையைப் புதைக்க வேண்டாம் என்று தீர்மானமாயிற்று. தரையைத் தோண்டவும் சமாதி கட்டவும் நேரம் கிடையாது. ஈர மணல் பார்த்து காலையில் கேள்வி எழும்! சாராயப்பிரியர்கள் சந்தேகப்படுவார்கள். மண்ணெண்ணெய் வாங்கி, சுடலையைக்   குளிப்பாட்டினோம். தீக்குச்சி உரசி எறிய... சுடலை கூரை விட்டம்வரைக்கும் எரிந்தான். வெப்பம் தாங்காமல் அறையைப்   பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

சாம்பலை மூட்டை கட்டினோம். வண்டியில் ஏற்றி கடலுக்குச் சென்றோம். இடத்தை சுத்தப்படுத்தும் பொறுப்பை எல்டின்   ஏற்றுக்கொண்டான். முட்டுக்காடு கடற்கரையில் மூட்டையை இறக்கினோம். தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத   விக்கிரமாதித்தனாக கரைக்கு மீண்டும் மீண்டும் படையெடுத்தது அலைகள்.

சொல்லமுடியாத சங்கடம் பரவிற்று. சுடலையின் அஸ்தியை என் கைகளாலேயே கடலுக்குள் கரைத்தேன். மீண்டும் உபத்திரா    நினைவுகளில் தோன்றினாள். உள்ளுக்குள் ஊமை ரணத்துடன் சாம்பலின் கடைசி பகுதியைக் கடலில் கரைத்துவிட்டு, பாபுவிடம் "மணி என்ன?” என்று கேட்டேன்.

"ஆறு மணி ஆகுதுண்ணே!'' என்றான் பாபு.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

 

அடுத்த பகுதி:

"ரெண்டு லட்ச ரூபாய் கொடுங்க, எதையும் வெளிய சொல்லமாட்டேன்!" - மிரட்டிய துரோகி! ஆட்டோ சங்கர் #19

முந்தைய பகுதி:

துரோகிக்கு என் தண்டனை என்ன தெரியுமா? ஆட்டோ சங்கர் #17

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23