Skip to main content

உலக சண்டியரான அமெரிக்காவின் முகத்தில் குத்துவிட்ட கலகக்காரன்! முகமது அலி | வென்றோர் சொல் #41

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

Muhammad Ali

 

இந்தியாவில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளுக்குச் சற்றும் சளைத்ததில்லை அமெரிக்காவில் நிலவிய கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி ஒடுக்குமுறை. அந்த ஒடுக்குமுறைகளின் பிடிகளுக்கு ஊடாகவே குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தான் காஸ்சியஸ் கிளே எனும் அந்த இளைஞன். கறுப்பினத்தவரான அவனுக்கு 18 வயதில் அமெரிக்காவின் பிரதிநிதியாக ஒலிம்பிக் மேடையை அலங்கரிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 1960ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக் தொடரில் மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புகிறான். தங்கப் பதக்கம் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. அதை, தனக்குக் கிடைத்த கௌரவம் என்பதைவிட உலக அரங்கில் அமெரிக்காவிற்குக் கிடைத்த கெளரவமாகக் கருதுகிறான். கழுத்தில் அணிவிக்கப்பட்ட பதக்கத்தைக் கழட்ட அவனுக்கு மனமில்லை. சில நாட்கள் கழித்து அப்பதக்கத்தோடு காஸ்சியஸ் கிளே அமெரிக்கா திரும்புகிறான். வழக்கமான வரவேற்பு, பாராட்டுகளுக்குப் பிறகு உணவருந்துவதற்காக ஓர் உணவகத்திற்குச் செல்கிறான்.

 

ஒலிம்பிக் தொடருக்குத் தயாராவதற்காகக் கடந்த சில மாதங்களாகக் கட்டுக்கோப்பான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்துவந்த காஸ்சியஸ் கிளே, தற்போது விரும்பியபடி உண்ண நினைத்து உணவுகளை ஆர்டர் செய்கிறான். ஆர்டரைக் குறித்துக்கொண்டு உள்ளே சென்ற சர்வர், நீண்ட நேரமாகத் திரும்பிவரவில்லை. உணவு தயாராகத் தாமதமாகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தான் காஸ்சியுஸ் கிளே. அருகே வந்த அந்த உணவகத்தின் மேனேஜர், கறுப்பினத்தவர்களுக்கு உணவு பரிமாறும் வழக்கம் கிடையாது என காஸ்சியஸ் கிளேவிடம் தயக்கத்துடன் கூறுகிறார். "நான் இந்த நாட்டிற்காகத் தங்கம் வென்றவன்... நான் கோல்ட் மெடலிஸ்ட்" என்கிறான் காஸ்சியஸ் கிளே. இருப்பினும், அந்த மேனேஜர் தயங்கிக்கொண்டே இருக்க, ஆவேசத்துடன் அங்கிருந்து வெளியேறிய காஸ்சியஸ் கிளே, ஓகியோ நதிக்குச் சென்று தன்னுடைய தங்கப் பதக்கத்தைத் தூக்கி எறிகிறான். என்னை மதிக்காத நாட்டிற்காக இனி நான் விளையாட மாட்டேன் என முடிவெடுத்த காஸ்சியஸ் கிளே, அதன் பிறகு தொழில்முறைக் குத்துச்சண்டை போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்த காஸ்சியஸ் கிளே, இஸ்லாம் மதத்தைத் தழுவி தன்னுடைய பெயரை முகமது அலியாக மாற்றிக்கொண்டான். நிறவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறுவதே தீர்வு என நம்பிய முகமது அலி, அதற்கான பிரச்சாரங்களையும் முன்னெடுத்தான். அதன்பிறகு, உலக குத்துச்சண்டையின் முகமாக முகமது அலி எழுச்சி பெற்ற வரலாறு நாமறிந்ததே.

 

முகமது அலியாக அறியப்படும் காஸ்சியஸ் கிளே, 1942ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்டகி நகரில் லூயிஸ்வில்லே எனும் இடத்தில் பிறந்தார். தந்தை பெயர்ப் பலகைகள் எழுதும் பெயிண்டர். தாய் இல்லத்தரசி. 12 வயதிற்குப் பிறகே முகமது அலிக்கு பாக்ஸிங் அறிமுகமாகியது. முகமது அலிக்கு 12 வயது இருக்கும்போது திருடன் ஒருவன் அவரது சைக்கிளைத் திருடிவிடுகிறான். என் சைக்கிளைத் திருடியவனைப் பிடித்து அவன் கைகால்களை முறிக்க வேண்டும் என முகமது அலி ஆவேசமாகக் கத்த, அருகே இருந்த போலீஸ்காரர் ஜோ மார்ட்டின் 'அதற்கு நீ குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதன் பிறகு, முகமது அலிக்கு குத்துச்சண்டை பக்கம் கவனம் திரும்புகிறது. காவலர் ஜோ மார்ட்டின் குத்துச்சண்டை பயிற்சியாளர் என்பதால் பின்னாட்களில் அவரிடமே சில காலம் பயிற்சி பெற்றார் முகமது அலி. தன்னுடைய 12 வயதிற்குப் பிறகே குத்துச்சண்டை பக்கம் கவனத்தைத் திருப்பிய கறுப்பினத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், நிறவெறி தாண்டவமாடிக்கொண்டிருந்த அமெரிக்காவிற்காக 18 வயதில் ஒலிம்பிக் மேடையேறிய அதிசயமே முகமது அலியின் திறமைக்குச் சான்றாகும்.

 

Muhammad Ali

 

"எனக்கு சிறுவயதாக இருக்கும்போதிலிருந்தே ஏன் அனைத்தும் வெள்ளையாக இருக்கிறது என்ற சந்தேகம் அடிக்கடி எழும். 'ஜீசஸ் வெள்ளையாக இருக்கிறார். புகைப்படத்தில் உள்ள தேவதைகள் அனைவரும் வெள்ளையாக இருக்கிறார்கள். கறுப்பு தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டார்களா? மிஸ் அமெரிக்கா, மிஸ் வேர்ல்டு, மிஸ் யூனிவர்ஸ் வெல்பவர்கள் அனைவருமே வெள்ளையாக இருக்கிறார்கள். அதிபர் வெள்ளை மாளிகையில்தான் இருக்கிறார். அதிர்ஷ்டத்தின் நிறமாக வெள்ளை இருக்கிறது. துரதிர்ஷ்டத்தின் நிறமாக கறுப்பு அடையாளப்படுத்தப்படுகிறது. ஒருவரை மிரட்டுவதைக்கூட பிளாக்மெயில் என்கிறார்கள். ஏன் ஒயிட்மெயில் எனக் கூறுவதில்லை?' ஆகிய சந்தேகங்களை என் அம்மாவிடம் அடிக்கடி கேட்பேன். சிறு வயதிலேயே நீக்ரோக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று திரும்பிய பிறகு ஓர் உணவகம் சென்றேன். நான் கறுப்பினத்தவன் எனக்கூறி எனக்கு உணவு கொடுக்க மறுத்தனர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவன் எனக் கூறியும் எனக்கு உணவு பரிமாற முடியாது என்றனர். வெள்ளைக்காரர்களின் அச்செயல் எனக்கு ஆத்திரமூட்டியது. நேரே ஓகியோ நதிக்குச் சென்று ஒலிம்பிக்கில் நான் வென்றபோது இசைக்கப்பட்ட அமெரிக்க தேசிய கீதத்தையும் பறந்த தேசியக் கொடியையும் மனதில் நினைத்துக்கொண்டே பதக்கத்தைத் தூக்கி ஆற்றில் எறிந்தேன். உலக அரங்கில் அமெரிக்காவைப் பெருமைப்படுத்தியும் எனக்கான மரியாதை அமெரிக்காவில் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பதக்கத்திற்கு எந்த மதிப்பும் இல்லை." இவ்வாறாக தனக்குள் எழுந்த கேள்விகளையும் அவற்றிற்கு இந்த சமூகம் கொடுத்த பதில்களையும் அந்த பதில்கள் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரிக்கிறார் முகமது அலி.

 

அதன் பிறகு, தனிப்பட்ட தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த முகமது அலி, பல முன்னணி வீரர்களை வீழ்த்தி மூன்று முறை மிகுஎடை பிரிவில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் முகமது அலி வசமானது. எதிர்கொள்ள ஆபத்தான குத்துச்சண்டை வீரராக உருவெடுத்து வந்த முகமது அலியை அமெரிக்கா மீண்டும் சீண்டியது. வடக்கு வியட்நாம் மற்றும் தெற்கு வியட்நாமிற்கு இடையேயான யுத்தத்தில் தெற்கு வியட்நாமிற்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் 1965ஆம் ஆண்டு களத்தில் குதித்தன. உலகம் முழுவதும் நடக்கிற யுத்தங்களில் தன்னுடைய ராணுவக் கைவரிசையைக் காட்டி மறைமுக ஆதாயம் அடையும் அமெரிக்கா, வழக்கத்திற்கு மாறாக வியட்நாம் மண்ணில் கடுமையான இழப்பைச் சந்தித்தது. இதனால் வியட்நாம் மண்ணில் படையை அதிகரிக்க முடிவெடுத்து, அமெரிக்கர்கள் கட்டாயம் ராணுவச் சேவையாற்ற வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்த முகமது அலி, அமெரிக்கப் படையில் சேர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, முகமது அலியின் உலக சாம்பியன் பட்டத்தைப் பறித்தது. அத்தோடு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய முகமது அலி, நான்கு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் வெற்றிபெற்றார்.

 

"இதுவரை வியட்நாமைச் சேர்ந்த எவரொருவரும் என்னைக் கறுப்பினத்தவன் என்று கூறி பாரபட்சமாக நடத்தியதில்லை. அவர்களோடு எனக்கு எந்த முரண்பாடும் இல்லாதபோது, நான் ஏன் அவர்களை எதிர்த்துச் சண்டைபோட வேண்டும். அதுமட்டுமில்லாமல், போர் என்பது நான் ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாத்திற்கு எதிரானது" என ஏகாதிபத்திய அமெரிக்காவை எதிர்த்து அவர் எழுப்பிய குரல், உலகின் பல மூலைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குத்துச்சண்டை களத்தில் முகமது அலி பெற்ற வெற்றிகளைவிட, கறுப்பினத்தவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர் பெற்ற வெற்றிகள் அதிகம். மால்கம் எக்ஸ் போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் கடும் சிரமப்பட்டு ஏற்படுத்திய விழிப்புணர்வுகளையும் உடைத்தெறிந்த அடிமைவிலங்குகளையும் தன்னுடைய குத்துச்சண்டை புகழ் மூலம் எளிமையாகச் செய்தவர் முகமது அலி. ஆக, முகமது அலி குத்திய ஒவ்வொரு குத்தும் அரசியல் ஆய்வாளர்களால் உலக சண்டியர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் போலி மேன்மைவாதத்தின் மீது விழுந்த குத்துகள்தான்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

 

அன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்! தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.