Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #25

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

maayapura part 25

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சொல்லச்சொல்ல அனைவரின் உறைந்த ரத்த நாளங்களும், உலர்ந்த நாக்குகளும் மருத்துவரிடம் விளக்கம் கேட்கத் திராணியற்று நின்றன. செவிகள் மட்டும் தன் வேலையைச் செவ்வனே செய்தது. மருத்துவர் சொன்னதின் சாராம்சம் என்னவெனில் மல்லிகாவின் கர்ப்பப்பை பலவீனமாக உள்ளதால் கருவைச் சுமக்கும் சக்தி அந்த கருப்பைக்குக் குறைவாக உள்ளது. கீழே விழுந்ததில் கருக்  கலைந்து போகும் நிலையில் உள்ளது. அதனால் கருவுக்கு அதிக அதிர்ச்சி தராமல் கவனித்துக் கொள்ள வேண்டும். மல்லிகா படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது இயற்கை கழிவுகளைக் கூட படுக்கையிலிருந்தபடியே தான் நீக்கவேண்டும். கட்டிலிலிருந்து கால் தரையில்  படக் கூடாது. பிறந்த குழந்தை போல மல்லிகா படுத்துக் கொண்டே இருந்தால் அவளுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்று சொன்ன  புண்ணியவதி கூடவே ஒரு வெடியையும் கொளுத்திப் போட்டார். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாய்ப்புகள் இருக்கிறது என்று தான் கூறுகிறேனே தவிர அப்படி தான் பிறக்கும் என்று உறுதியாகக் கூறவில்லை  என்று மருத்துவர்களின்  பழியைக்கழித்துக் கொண்டார்கள். மருத்துவர் சொன்னதும் வெடித்துச் சிதறிய பாறைத்  துண்டுகளாக அனைவரின் மனமும் எண்ணங்களால் சிதறியது.

"பத்து நாளாவது மல்லிகா இங்கு தங்கியிருக்க  வேண்டும். அப்போதுதான் கருக் கலையாமல் நிலைக்குமா  என்று உறுதியாகக் கூற முடியும். அதற்கான செலவு, தங்குவதற்கான இடவசதி அனைத்தையும் யோசித்து உங்க முடிவை சொல்லுங்க. சீக்கிரம் முடிவு சொல்லுங்க அப்பதான் உடனே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்." என்று   சர்வசாதாரணமாகச்  சொன்னார்  மருத்துவர். அவர்களைப் பொறுத்தவரை மல்லிகா  ஒரு  நோயாளி. இது மாதிரி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கேஸ் வந்து போகிறது. யோசித்துப் பார்த்தால் மருத்துவர்கள் வாழ்க்கை ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாகத்  தான் இருக்கிறது.  ரத்தமும் சதையும் உள்ள ஒரு உயிருள்ள பொம்மையாகத்  தான் நோயாளியை  மருத்துவர்கள்  நினைக்க முடிகிறது. பொம்மையைப் பிரித்துப் போட்டு இணைப்பது போல நோயாளியைச் சோதிக்கிறார்கள்.

 

இங்கே உணர்வுகள் மரணித்து விடுகின்றன. அவர்களுக்கு ஆண் பெண் பேதம் தெரிவதில்லை, வயது வித்தியாசம் தெரிவதில்லை, ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் என்ற பேதமும் இல்லாத தன்னலமற்ற ஒரு சேவை. ஒரு நொடி பிறப்பையும்  மறு நொடி இறப்பையும் பார்க்கும்போது பிறப்பதற்கும் இறப்பதற்கும் வருந்துவார்களா? அவர்களின் உணர்வு நரம்புகள் மூளைக்குச் செல்லாமல் துண்டிக்கப்பட்டு விடுமோ? என்று நினைக்கக் கூடும். ஆனால் பிறப்பையும் இறப்பையும் பார்த்துப் பார்த்து மரத்துப்போன உணர்வுகளால், பிறப்பின் சிரிப்பொலியும் இறப்பின் அழுகை ஒலியும் மருத்துவரின் காதுகளில் விழுவதில்லை. மருத்துவர்களுக்கு  ஒரே உணர்வு மட்டும் தான். உயிரைக் காப்பாற்ற வேண்டும்  என்பது  மட்டும் தான்  அவர்களின்  உயிர்மூச்சு. அந்த உயிரானது  யாருமற்ற அனாதையோ, அம்பானியோ அவர்களைப் பொறுத்தவரை உன்னதமானது. உயிர், அதைத்  துடிக்க வைப்பது அவர்களின் சேவை.

 

மக்களின் கண்களுக்கு மருத்துவர்களின் வசதியான வாழ்க்கை மட்டும் தான் தெரிகிறது. அவர்களின் இழப்புகள் தெரிவதில்லை. குடும்பத்துடன் நல்லது, கெட்டதுகளில்  கலந்து கொண்டு மகிழ்வையும், துக்கத்தையும் வெளிப்படுத்த முடிவதில்லை. மருத்துவர்களால் சாதாரணவர்கள் போல நிம்மதியாக உறங்க முடியுமா? உயிரைக் காப்பாற்றும் போது "சந்ததிகள் செழிக்கச் சந்தோசமாக வாழ்க "என்று ஆசீர்வாதம் செய்கிறார்கள். அடுத்த நொடியே உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனும் போது அவர்களின் சாபத்தைப் பெறுகிறார்கள். மருத்துவர்களுக்கு உணர்வுகள்  இருந்தால்  இரண்டிற்கும் மகிழ்வும் வருத்தமும் வந்திருக்கும். அதனால் தான் உணர்வுகள் மரணித்துப் பயணிக்கிறார்கள்.

 

ஆண் பெண் பேதம் சொல்லும் உணர்வுகள் அவர்களுக்கு இருப்பதில்லை. உணர்ச்சிகளற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள். மருத்துவர்களின் மெழுகுவர்த்தி வாழ்க்கையில்  அவர்களை  உருக்கிக் கொண்டு உயிர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களின் வார்த்தையை மீற முடியாமல் தங்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவும் இயலாமல் தயங்கிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தனர். 

"என்னமா செய்வது" என்று ஓட்டிற்குள் மறைந்த நத்தை போல சகலமும் ஒடுங்கி கேட்டான் மணி.

 

மணியின்   கண்கள் அசோக்கையும்  சங்கவியையும் பார்த்தது .அந்த பார்வை எப்படியாவது என் குழந்தையைக் காப்பாற்று என்று கெஞ்சுவது போல இருந்தது.

" மனசை கல்லு மாதிரி வச்சுகிட்டு கருவைக் கலைத்து விட வேண்டியது தான்" என்று தங்கம் தயங்கிக் கொண்டே சொன்னாள்.

"அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம்" என்று சீறினான் அசோக்.

"மல்லிகாவை இங்கேயே வைத்து  வைத்தியம் பார்க்கலாம்னு சொல்றியா" என்று குரல் உயர்த்தி கேட்டாள்  தங்கம்.

" வேற வழி இல்லை மா, மணியும், மல்லிகாவும் பாவம்  மா, உங்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தா  கருவைக் காப்பாற்ற போராடிதானே இருப்பீங்க" என்று  அம்மாவிடம் மன்றாடினான் அசோக். "பணத்துக்கு என்ன பண்ணுவ "என்று தங்கம் அக்கறையுடன் கேட்டாள்.

" சங்கவியின் நகை வித்த பணம் இப்ப கொஞ்சம் கையில் இருக்கு. அதை வைத்து சமாளிச்சுக்கலாம். ஊருக்குப்  போனதும் நெல்லை வித்து ஏதாவது ரெடி பண்ணலாம்" என்று தைரியம் சொன்னான் அசோக்.

"மல்லிகா கூட யார் இருக்கிறது "என்று அடுத்த பிரச்சனையைக்  கிளப்பினாள் தங்கம். "நீங்கதான் பெரியவங்க நீங்க தான் கிட்ட இருந்து பார்த்துக்கணும்" என்று அசோக் சொன்னான்.

" அங்கே அப்பா தனியாகத் தவித்துக் கொண்டிருப்பார். வயல் வேலையெல்லாம் அப்படியே கிடக்குது, அதெல்லாம் பார்க்கணும் ஆம்பள  பசங்க  நீங்க மட்டும் என்ன பண்ணுவீங்க.  நான் அப்பாவை பார்த்துக்கிறேன்" என்று தங்கம் சொன்னாள்.

"அம்மா சங்கவி சின்ன பொண்ணு அவளுக்கு என்னமா தெரியும்?" என்று தயங்கினான் அசோக்.

"சங்கவி படிச்சவ. டாக்டர் கிட்ட நல்லா பேசுவா நான் படிக்காதவ " என்று தன் நிலையைச் சொன்னாள் தங்கம். அம்மா சொல்றதில்  நியாயம் இருப்பதை உணர்ந்தான் அசோக். ஆனால் மனைவி என்று வரும்போது தனியாக விடுவதற்கு பயந்தான் அசோக்.

"சங்கவி என் கூடவே இருக்கட்டுமே" என்று மல்லிகாவும் சொன்னாள். வேறு வழியில்லாமல் சங்கவி அங்கே இருப்பதற்கு ஒத்துக்கொண்டான் அசோக்.

 

மருத்துவரைப் பார்த்து மீண்டும் தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி மல்லிகாவை மருத்துவர்  லீலாவிடம் ஒப்படைத்தனர். மல்லிகாவிற்கு  என்று  தனி அறை ஒதுக்கப்பட்டது. அந்த  அறையில்  சங்கவியும்  தங்கிக் கொள்ளலாம். சங்கவி மல்லிகாவின்  இயற்கை கழிவுகளை பெட்பேன் வைத்து எடுத்து அவளைச் சுத்தப்படுத்தினாள். அந்த மருத்துவமனையில் தங்குவதற்கும் மருத்துவச் செலவிற்கும் ஒரு நாளைக்கு 50 ரூபாய் செலவாகும் என்று டாக்டர் எல்லா விவரங்களையும் சொன்னார். கையிலிருந்த பணத்தை   சங்கவியிடம் கொடுத்து பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு அசோக் ,மணி, தங்கம் மூவரும் கிராமத்திற்குச் சென்றார்கள். சென்னையில் சங்கவி மட்டும் மல்லிகாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னை சங்கவி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையுமா? இல்லை பிரச்சனையாக அமையுமா? காலத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறாள் சங்கவி.

 

(சிறகுகள்  படபடக்கும்)
 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)