Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #10

Published on 02/06/2022 | Edited on 03/06/2022

 

iraval ediri part 10

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

சுற்றிலும் செடிகளுக்கு நடுவில் வெயிலுக்குப் பயந்து நிழல் போர்வையைச் சுற்றிய பெண்ணைப் போல தனித்து ஒதுங்கியிருந்தது அந்த வீடு. வீரகுமார், ரிடையர்ட் ஏசி என்ற பெயர் பலகையைத் தாங்கியபடி இருந்த கதவுக்கு பக்கத்தில் அனாதையாய் நின்ற காலிங்பெல்லை அழுத்த, இரண்டு பறவைகள் எட்டிப் பார்த்து தங்கள் தனிமையைக் கலைத்து விட்டாயே என்பதைப் போல கோபமாக கத்திவிட்டு மீண்டும் குடிலுக்குள் புகுந்து கொண்டது.

 

கதவின் மினி டோர் சங்கிலியின் உபயத்தில் நாசூக்காய் விலக்கப்பட்டு அவள் முகம். பால் போல் அத்தனை வெண்மையான அம்முகத்தில் கருப்பாய் ஒரு ஸ்டிக்கர் தனியாய்த் தெரிந்தது செர்ரிப் பழத்தை ஒட்ட வைத்திருந்தாற் போன்ற இதழ்களைத் திறந்து,

“எஸ்” என்றாள்.

“மாறன் ஃப்ரம் சிபிஐ.... ஒரு கேஸ் விஷயமாக ஸாரைப் பார்க்கணும்.” என்றதும் சங்கிலியை நீக்கி கதவை அகலத் திறந்தாள். மிடியும் டாப்ஸூமாய் கல்லூரிப் பெண்மைத் தனம் காட்டினாலும் முகத்தில் ஒரு கம்பீரம் இருந்தது.

“உட்காருங்க அப்பா வருவாங்க.” என்று மாறனுக்கு இருக்கையைக் காட்டிவிட்டு, “அப்பா” என்ற அழைப்பின் நான்காவது நிமிட முடிவில் அவர் வெளிப்பட்டார். வழுக்கைத் தலை, சரிந்த தொந்தி என்று வழக்கமான போலீஸாக இல்லாமல் டிரிம்மாக இப்போதும் 40 வயது மதிக்கத்தக்க நடுத்தர மனிதரின் தோற்றத்தில் வெளியே வந்தார் ஆரல்வாய் ஏசி வீரகுமார்.

“வெல்கம் மிஸ்டர் மாறன்.” என்று கை குலுக்கலை செலவழித்துவிட்டு, 

“என்ன சாப்பிடறீங்க என்றார் ?”

மாறன் மறுப்பதற்குள் லைம் ஜூஸ் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அந்த மிடியை நன்றியுடன் பார்த்தான் அவன்.

“நீங்கதானே அந்த குழந்தைகள் கிட்நாப் கேஸை விசாரிக்கிறீங்க ? என்ன இம்ப்ரூவ்மெண்ட் ?”

சொன்னான்.... லைம் ஜூஸிற்கு நன்றி சொல்லிவிட்டு “உங்ககிட்டே கொஞ்சம் பேசணும் ஸார்.”

“நோ பார்மாலிட்டிஸ். பை தி வே இது என் டாட்டர் மாயா. நம்ம டிப்பார்ட்மெண்ட் தான் சைபர் கிரைம். உங்க கேஸில் அவளுக்கு ரொம்பவும் விருப்பம்.” என்று பேசிவிட்டு மாறன் பேசட்டும் என்று காத்திருந்தார்.

தன் சட்டைப்பையில் டெவலப் செய்யப்பட்ட புகைப்படங்களைக் காட்டினார். “ஸார் சிறுவன் ரவி கடத்தப்பட்ட அன்று ஜஸ்டிஸ் சபேசன் அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் ரொம்ப நேரமாக ஒரு கருப்பு காண்டஸா நின்று இருக்கு, இப்போதைய விசாரணையில் அது தெரிய வந்தது. பாதி மூடிய நிலையில் முன்சீட்டில் ஒருவனின் முகம் பதிவாகியிருக்கு இன்னொரு போட்டோவில் அரைகுறையா நம்பர் ப்ளேட், ஆர்.டி.ஓ வில் விசாரித்ததில் அது உங்க வண்டின்னு....” அவன் இழுக்க,

“மை காட்... மாறன் இது என் வண்டி நம்பர்தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம். தப்பு செய்யறவன் ஏதாவது ஒரு விதத்திலே தானே அறியாமல் ஒரு தப்பை செய்வான் சில கேஸில் அதுதான் நமக்கு லீட் பாயிண்ட்டா இருக்கும். என் கூட வாங்க...” 

 

அவர்கள் இருவரும் வீட்டின் பின்பக்கம் செல்ல அந்த மிடி டாப்ஸும் தொடர்ந்தது. அங்கே தன் ஷட்டரை நோக்கி சென்று அதை விலக்கினார் வீரகுமார். பெட்ரோல் வாசனை மூக்கை நிறைக்க, எத்தனை சுத்தமாக இருந்தாலும் என் வரவை நீ தடுக்க முடியாது என்று வம்பிழுப்பதைப் போல ஒரு எலி அவர்களின் காலைத் தாண்டி ஓடியது.

 

அங்கே மாறனின் புகைப்படத்தில் இருந்ததைப் போன்ற அதே கருப்பு காண்டஸா. புகைப்படத்தில் பார்த்ததற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

“உங்க போட்டோவில உள்ள நம்பர் ப்ளேட்டை காட்டுங்க.”  என்றார் வீரகுமார்.

 

வண்டியின் முன்பக்கமும் பின்பக்கமும் உள்ள நெம்பர் ப்ளேட்டுகளைப் பாருங்க என்றார். இரண்டிலும் எண்கள் ஒன்றுதான் ஆனால் ஒவ்வொரு வண்டியின் எண்ணிற்கு மேலும் அரசின் எம்பளமும் சின்ன உருவத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது. 

“மாறன் இது என்னோட முதல் வண்டி, ரொம்பவும் ராசி பேவரைட் அதற்கு இணையாக நான் நேசிச்சது என்னோட டிப்பார்ட்மெண்டை... ஸோ இந்த வண்டியோட எண்ணில் சின்ன மாற்றம் ஸ்பெஷலா இருக்கும், தவிரவும் கிரிமினல் பயன்படுத்திய வண்டியில் காரின் கண்ணாடிகளில் பிளாக்ஷீட் ஒட்டப்பட்டு இருக்கு. கண்ணாடியின் பாதி திறந்திருந்த சைட் டோரில் அது தெரியுது பாருங்க. கவர்மெண்ட் ரூல்ஸ்படி வண்டியை எடுக்கலைன்னாலும், நான் கருப்பு திரைகள் ஒட்டவில்லை, கிரிமினல் இந்த இரண்டு விஷயத்தில் கோட்டை விட்டு இருக்கான்.”

“இன்னொரு விஷயமும் இருக்கு டாடி.” என்றாள் மாயா.

“என்ன ?” 

“மாறன் ஸார் கிட்டே இருக்கிற போட்டோவில் காரின் ஹெட்லைட்டுக்கு மேல கருப்பு நிறம் மூன்று லேயர்களாக பெயிண்ட் அடிக்கப்பட்ட அடையாளம் இருக்கு, இந்த காரோட உண்மையான நிறம் வேறயா இருக்கும் அவசரத்திலேயோ அல்லது அலட்சியமாகவோ இந்த வண்டியை கலர் மாத்தியிருக்காங்க. அப்போ இலேசா பெயிண்ட் வடிசல் இந்த ஹெட்லைட்டுக்கு மேல கோடுகளா வழிந்திருக்கு. அதை துடைக்காம விட்டதும் நமக்கு ஒரு ஆதாரம்.” மாறன் ஒப்புக் கொண்டதாய் தலையசைத்தான்.

“கிரிமினல்ஸ் உங்க வண்டியின் நிறத்தையும் நம்பர் ப்ளேட்டையும் பயன்படுத்தியிருக்காங்கன்னு நானும் ஊகித்தேன் ஸார். இருந்தாலும் தெளிவு படுத்திக்கொள்வது நல்லதுன்னுதான்... டோண்ட் மிஸ்ட்டேக் மீ சார்.”

“நோ...நோ... ஒரு போலீஸ்காரன் தன் சந்தேகத்தை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம் மாறன். நமக்கு விரோதிகள் அதிகம். ஒரு வகையில் எனக்கே தெரியாம நான் அவனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் விரோதியா இருந்திருக்கலாம். கார் எங்கேயிருந்ததுன்னு சொன்னீங்க ?”

“ஜஸ்டிஸ் சபேசன் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில்!”

“அவர்கிட்டே விசாரிச்சீங்களா?”

“ஆரம்பக்கட்ட விசாரணையில் அந்த வண்டியை பற்றி பெரிதா எந்தத் தகவலும் இல்லை ஸார். யாருக்கும் சரியா தெரியலை. அவங்க வீட்டுலே பாதுகாப்பிற்காக இருந்த சார்ஜன்கிட்டே விசாரிச்சேன். சிசிடிவி அன்றைக்கு பழுதாகியிருந்தாகவும் அதற்காக சர்வீஸ்க்கு ஆட்கள் வந்தாங்கன்னும், மறுநாள் சபேசன் அவர்களின் மகள் வளைகாப்பு இருந்ததால் விழா தொடர்பான பலவேலைகளில் இந்த வண்டி பற்றிய விவரம் தெரியலைன்னும் சொல்லியிருக்காங்க.”

“நோ.... நோ... ஒரு ஜஸ்டிஸ் வீட்டுக்குப் பக்கத்தில வண்டியை நிறுத்தியிருந்திருக்கான்னா நிச்சயம் அவங்க பார்வையிலே ஏதாவது வித்தியாசம் இருக்கும், நீங்க இன்னமும் கொஞ்சம் அந்த ஏரியாவில் ஆழமா விசாரிச்சா நல்லதுன்னு என் மனசுக்குப்படுது.”

“எஸ் ஸார். உங்க ஒத்துழைப்பிற்கு மிகவும் நன்றி, டிராபிக் டோல் ரூட் பிரகாரம் வண்டியோட கடைசி பதிவு சோலிங்கநல்லூரில் ஒரு சிக்னலில் கிடைச்சிருக்கு அங்கிருந்து வேற எந்த டோல்கேட்டிலேயோ, சிக்னலிலோ வண்டி நின்னதுக்கான அடையாளம் இல்லை. ஸோ அவனோட எண்டிங் பாயிண்ட் சோலிங்கநல்லூர். அங்கே ஸ்டேஷனில் பக்கத்துலே யாராவது இந்த வண்டியைப் பார்த்தாங்களான்னு விசாரிக்கச் சொல்லியிருக்கேன்.”

“நல்ல விஷயம் மாறன் உங்களுக்கு எந்த உதவி தேவைன்னாலும் எனக்குத் தகவல் தெரிவியுங்கள். எனக்கு தெரிந்த சோர்ஸ் மூலம் உதவி செய்யறேன்.” என்றார் வீரகுமார்.

 

அவருக்கும் மாயாவிற்கும் நன்றி சொல்லிவிட்டு தன் வண்டியை எடுத்தான் மாறன். எந்தப் பக்கத்தில் இருந்தும் ஒரு தெளிவில்லாததைப் போல இருந்தது அவனுக்கு.

 

மேகா அறையில் சுருண்டுப் படுத்திருந்தாள். உடல் நெருப்பாகக் கொதித்துக் கொண்டு இருந்தது. அதைவிடவும் மனது. பல வேறான குழப்பங்களில் அவள் தன்னை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறாள் என்று தோன்றியது கெளரிக்கு. மேகாவிற்கென இரவு உணவிற்கு கஞ்சியைத் தயாரித்துக் கொண்டு இருந்தாள்.

 

வெதுப்பான சூட்டில் அதை எடுத்துக் கொண்டு மேகாவின் அறைக்குள் நுழைந்தாள் கெளரி. 

“மேகா எழுந்திரும்மா இந்த கஞ்சியைக் குடிச்சிட்டு படுத்துக்கோ.” என்றாள்.

“வேண்டாமே அண்ணி ?!” 

“மூச்...நல்ல காய்ச்சல். அங்கே போயிட்டு வந்ததில் இருந்தே நீ சரியில்லை, உன் மனசு எதையோ நெனைச்சு பயந்துகிட்டு இருக்கு. இது பெங்களூர் இல்லை, சென்னை. இங்கே உனக்கு ஒண்ணுண்னா ஏன்னு கேட்க நாங்க இத்தனை பேரு இருக்கோம். இன்னும் நீ அந்நியமாக உணரவேண்டாம் மேகா.”

“புரியுது அண்ணி ஆனா.....! அந்த பையனைப் பார்த்ததும் விஷ்வா நினைவுக்கு வந்திட்டது எனக்கு. அங்கே அவனும் இப்படித்தான் கவனிக்க ஆள் இல்லாம இருந்தான்.”

“அதான் சரியான நேரத்திற்கு வந்திட்டியே ? அத்தை, நான், எல்லாத்துக்கும் மேல உங்க அண்ணன்... இன்னும் என்ன பயம் உனக்கு. நாங்க இருக்கோம் மேகா உன்னைத் தாங்க. ஏதோ தனிமையிலே சில கெட்டப் பழக்கங்கள் விஷ்வாவுக்கு இருந்திருக்கலாம். ஆனா போகப் போக அவன் சரியாயிடுவான். பரிதி கூட சேர்ந்து படிக்க ஆரம்பிச்சாச்சு, ஓய்வு நேரங்களில் தாத்தாவோட வாக்கிங், அத்தையோட கோவில், உங்க அண்ணன் கூட அவுட்டிங்குன்னு அவன் இந்த ஒரு வாரத்தில தன்னோட ரொட்டீனை மாத்திக்கிட்டான். இப்போ அதிகமா மொபைலை யூஸ் பண்றதே இல்லை, ஆன்லைன் கிளாஸ் தவிர்த்து !”

“விஷ்வா மட்டும்தான் உன்னோட பயம்னா அதுக்கு மருந்து எங்ககிட்டே இருக்கு.” கஞ்சியைப் புகட்டிவிட்டு மாத்திரைப் பட்டையைப் பிரித்து ஒரு டோலோவைத் தந்தாள். 

“நல்லா தூங்கு காலையிலே பேசிக்கலாம். நாளைக்கு சண்டேதானே.”

“ஆமாம் பட் எனக்கு முக்கியமான வேலைகள் எல்லாம் இருக்கு ?!”

“ஓய்வெடுக்கலாமே மேகா ?”

“இல்லைண்ணி என்னோட வெறுமையை நான் வேலையிலேதான் போக்கிக்க முடியும். வீட்டிலே இருந்தா பைத்தியமே பிடிச்சிடும்.” அவளுக்கு தேவையான உதவிகளைச் செய்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கதவைத் தாழிட்டு தங்கள் அறைக்கு வந்தாள் கெளரி.

 

கேசவன் விழித்துக் கொண்டு இருந்தான். 

“என்னாச்சு இத்தனை நேரம்....?!”

“மேகாவுக்கு நல்ல ஜீரம் ஹாஸ்பிட்டல் கூப்பிட்டேன் வரலை. கஞ்சியும் மாத்திரையும் கொடுத்திட்டு வர்றேன்.?”

“மைகாட், நான் போய் பார்த்திட்டு வர்றேன். அங்கே டெத் வீட்டுக்கு வந்ததில் இருந்தே அவ சரியில்லை....” கிளம்பிய கணவனைத் தடுத்தாள் கெளரி.

“அவளோட பயத்துக்கு அதுவும் ஒரு காரணங்க.”

“அதுவும்னா வேற ஏதாவது இருக்கா?!”

“ம்... ஏற்கனவே விஷ்வாவோட நடவடிக்கைகளில் அவளுக்கு ஒரு அதிர்ச்சி, அந்த பையன் இறந்ததை விசாரிக்க மாறன் வந்திருந்தார். அவரை எதிர்பாராம பார்த்ததுதான் இந்த ஜீரத்திற்குக் காரணம்.”

“மாறனா ?”

“ம்... அவர் இவளைப் பார்க்கலை, மேகா மனதளவில் ரொம்பவே தளர்ந்து போயிருக்காங்க, மாறனை வெளியே வெறுக்கிறா மாதிரி காட்டினாலும் உள்ளே அவரை அவ இன்னமும் மறக்கலை. தான் செய்தது தப்போன்னு அவங்களுக்குள்ளே விலகலைப் பற்றி இப்பத்தான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கா.”

“ம்...மாறன் ரொம்பவும் நல்லவர் கெளரி. மேகா ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸாண்டிங்கை பெரிசாக்கிட்டா. சின்ன வயசிலே இருந்தே அவளுக்கு பிடிவாதம் அதிகம். விளையாட்டுக்கு கூட ஏமாத்தினா அவளுக்குப் பிடிக்காது. இதே மாறனை வேண்டான்னு அப்பா சொன்னப்போ எத்தனை ஆர்க்கியூ பண்ணாத் தெரியுமா ?”

“நீங்க ஏன் மாறனைப் பார்த்துப் பேசக் கூடாது ? மாறன் நல்லவர்ன்னு சொல்றீங்க. மேகாவும் அவரும் இன்னமும் விவாகரத்து வாங்கலை, சட்டபூர்வமா இப்பவும் அவங்க கணவன் மனைவிதான். அவதான் கோபமா இருந்தான்னா நீங்க தலையிட்டு இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைத்திருக்கலாமே ?!”

“நான் அதுக்கான நிறைய முயற்சிகள் எடுத்தேன் கெளரி, மாறன் இறங்கிவந்தாலும் மேகா பிடிவாதமா பெங்களூர் கிளம்பிட்டா, அவ அங்கே போனதும்தான் பிரக்னென்ட்டா இருக்கிற விஷயமே தெரியும். குழந்தை பிறந்தப்ப கூட எங்களைக் கூப்பிடலை, அத்தனை பிடிவாதம். நானும் அம்மாவும் அவளைப் பார்க்க போனப்போ விஷ்வா பிறந்து முப்பதாவது நாள். கைக்குழந்தையோட தனியா இருக்க வேண்டான்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம்.

 

தனக்கு குழந்தை பிறந்ததையோ நான் பெங்களூரில் இருப்பதையோ மாறனுக்கு தெரியப்படுத்தினா இங்கிருந்தும் போயிடுவேன், அப்பறம் உங்களுக்கு கூட நான் இருக்கிற இடம் தெரியாம போயிடுன்னு சொன்னா. அவளோட பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமா தளருன்னு நாங்களும் காத்திருந்து கடைசியிலே விட்டுட்டோம்.”

“மாறன் அதுக்குப்பிறகு வரவேயில்லையா ?”

“ஏன் வரலை ? எத்தனையோ முறை கேட்டார். என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிறீங்களான்னு கத்தினார். ஆனா அவளோட பிடிவாதத்தைப் பற்றி சொன்னப்போ அவரும் ஒரு கட்டத்தில் அமைதியாயிட்டார். ஆனா விஷ்வாவைப் பற்றி இப்ப கூட நான் சொல்லலை.”

“தப்புங்க. இது சாதாரண சண்டைதான் யாரும் இறங்கிவரத் தயாரா இல்லை. சின்ன பிரிவு பேசத் தயங்கியே பெரிசாப் போய், பெரிய பிளவாகிப் போயிட்டது. விஷ்வா வளர்ந்திட்டான். பரிதி கூட நீங்க பேசும் போது விஷ்வாவின் முகத்தில் ஒரு வலியைப் பார்க்க முடியுது. இந்த சின்ன வயசிலே இது தேவையா ? மறுபடியும் உங்க தங்கச்சிகிட்ட பேசி புரயோஜனம் இல்லை. ஏன்னா இன்னைக்கு மாறனைப் பார்த்ததைக் கூட அவ என்கிட்டே சொல்லலை. ஆனா மாறன்கிட்டே பேசலாம். நீங்க நேசிச்ச மனைவி உங்க வாரிசு இத்தனை வளர்ந்து நிக்கிறான்னு! பிள்ளைக்காகவாவது இரண்டும் பேரும் மனசு மாற வாய்ப்பிருக்கு.”

 

கேசவன் ஒருமுறை யோசித்துவிட்டு சரி என்பதைப் போல தலையசைத்தான்.

 

தொடரும்...

-லதா சரவணன்

 

 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #14

Published on 25/07/2022 | Edited on 04/08/2022

 

iraval edhiri

 

வெல்கம் டூ அலைகள் நியூஸ் சானல் நான் உங்கள் ஷோபா இன்னைக்கு நாம பேசப்போறே விஷயம் அவசியமானது மட்டுமல்ல கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட, இக்கட்டான ஒரு காலகட்டத்தை கடந்து வந்தாலும் அதோட வடுக்கள் ஆழமாக இறங்கியிருக்கிறது. அது ஒரு பக்கம் பொருளாதாரம், மனசிதைவு, சிறுதொழில் இழப்புன்னு நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறோம். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நம்ம எல்லாருக்கும் பெரிய சவாலா அமைந்த பல விஷயங்களில் ஒன்று ஆன்லைன் பள்ளிக் கல்லூரிப் படிப்புகள்.

 


அதை பேஸ் பண்ணி ஆன்லைன் அலப்பறைகள்ன்னு நிறைய வீடியோஸ் நகைச்சுவையா வந்தாலும் உண்மையில் இந்த ஆன்லைன் படிப்புகள் மாணவர்கள் மத்தியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எதை அவர்கள் கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதையே கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட பெற்றோர்கள் 
மன அழுத்தத்திற்கு நிறைய மாணவர்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் பிரபாகர் அவர்கள் வணக்கம் சார்.

 

பிரபாகர் அந்தக்கால கமலஹாசனை நினைவு படுத்தினார். வசீகரக் கண்களை மறைக்க கண்ணாடி அணிந்திருந்தாரோ என்னமோ ?! அடிக்கடி அதை மூக்கின் மேல் தூக்கிவிட்டு கொண்டது கூட ரசனையாய் இருந்தது. 

 

வணக்கம் என்று கேமிராவைப் பார்த்து கையை குவித்தவர். ஷோபாவைப் பார்த்து பேச ஆரம்பித்தார். எதையும் தொட்டு உணரும் நிலை உன்னதமானது இல்லையா ?! பல வார்த்தைகள் பேச முடியாத விஷயத்தை ஒரு மெளனமும் தொடுதலும் கொடுத்துவிடும் ஆனா ஆன்லைன் கலாச்சாரம் உள்ளே நுழைந்ததும், எல்லாம் மாறிப்போனது. ஒரு பெட்டிகடையை எடுத்துக்கோங்க அந்த தெருவில் உள்ள அத்தனை பேரையும் அந்தக் கடைக்காரருக்கு தெரியும், இன்றைய கூகுள் மாதிரி எந்த வீட்டில் யார் இருக்காங்க என்ன செய்யறாங்கன்னு நிறைய தகவல்கள் மனிதர்களைப் படித்து வைத்திருந்தாங்க ஆனா எல்லாமே ஆன்லைன் ஆனபிறகு, நான் ஆன்லைனில் வாங்கினேன் இப்போ எல்லாம் நேரா யாருப்பா நேரத்தை செலவு பண்ணிட்டுப் போறாங்க ரிலாக்ஸா எல்லாத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கிக் கொள்றது எத்தனை செளகரியம்ன்னு பேசறது பெரிய பேஷனும் கெளரவமும் ஆகிட்டது. 

 

இப்போதைக்கு உலகமே இதில் தான் இயங்கிட்டு வர்றது இந்த வசதிகள் தப்புன்னு சொல்றீங்களா ஸார் ?

 

விஞ்ஞானம் வளரவளர மனிதம் சுருங்குது பார்த்தீங்களா ? வெறும் தொடுதிரையில் ரசிக்கும் பழக்கம் விடுத்து நாலு கடை ஏறி இறங்கி காய்கறியோ பொருளோ வாங்குங்க அங்கே எத்தனை வார்த்தைகள் வலம் வரும். நம்மையும் அறியாம எத்தனையோ கற்றுக் கொள்ளலாம் ஆனா அதுக்கெல்லாம் இப்போ நேரம் இருக்கலை. அதனாலதான் வளரும் சமுதாயம் வெளிப்படையா பேச தயங்குது. தனக்கு என்ன வேணுன்னு கூட கேட்கத் தெரியாத மனித குலம் உருவாகுது. அதைச் சுற்றிலும் விளம்பர விரல்கள் ஆக்கிரமிக்கிறது. என் தேவைகள் அடுத்தவனின் விருப்பமாக போகிறது. அப்பா அம்மா சொன்னா அநேக விஷயங்களில் எதிர்த்துப் பேசும் பிள்ளைகள் முகம் தெரியாத யாரோ ஒருத்தர் சொன்னா இதுதான் எனக்கானதுன்னு சட்டுன்னு எடுத்துக்கிற அளவுக்கு அவங்களைப் பழக்கப்படுத்தி வைச்சிருக்கு இந்த இணைய உலகம்
சரியா சொன்னீங்க சார் ? இதனால என்ன பாதிப்புகள் வருது.

 

இப்போதைக்கு பாதுகாப்பு நமக்கு வெளியே இல்லை நமக்கு உள்ளேயேதான் யாரும் யாரையும் கண்காணிக்க முடியாது தனி மனிதனோட ஒழுக்கம் மட்டும்தான் அவர்களை சீர்படுத்தும் கத்தியின் முனை கூர்மையாத்தான் இருக்கு அதன் பாகத்தின் பாதுகாப்பினை நாம உணர்த்தணும் அங்கே தவறுவதால்தான் நிறைய காயங்களை உள்ளே எடுத்துக்கிறோம். கண்பார்வைகள் கோளாறு அதிகமாகுது. நிறைய பிள்ளைகள் வாதத்தினால் பாதிக்கப்படுவதாக ஆர்த்தோ டாக்டர்கள் சொல்றாங்க. ஆடி ஓடி விளையாடி அடிபட்டு கத்துக்க வேண்டியவைகளைக் கூட இப்போ திரையில் பார்த்து சந்தோஷப்பட்டு ஒரு கற்பனையிலேயே வாழ்க்கை அமைவது அவர்களின் புலன்களை மட்டுமல்ல மனதையும் மந்தப்படுத்துகிறது. 

 

சமீப காலமா மாணவர்களின் தற்கொலை செய்திகள் அங்கொன்னும் இங்கொன்னுமா படிக்கிறோம், நான்கு பேர் காணாமல் போயிருக்காங்க இப்படி எத்தையோ பிரச்சனைகள் இதுக்கு தீர்வு என்னவாக இருக்க முடியும் ஸார். 

 

மறக்கமுடியாத இணைப்புகளை நாம பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தாச்சி, தவறுகளை இலகுவாக கத்துக்க சந்தர்ப்பங்களை வலைவிரிச்சி கொடுக்கிறோம். அவர்களுக்கு அக்கறையும், அன்பையும் கொடுக்கணும். இயந்திரங்களை விடவும் அப்பாவும் அம்மாவும் நமக்கு அநேக அன்பைத் தருவாங்கன்னு உணர வைக்கணும். கண்காணிப்பது தெரியாமயே அவங்க தப்பைச் சுட்டிக் காட்டணும். உண்மையைச் சொல்லணுன்னா அப்பாஅம்மாக்கு பயந்தாற்போல நாம பெத்த பிள்ளைகளுக்கும் பயப்படும் ஜெனரேஷன் நாமகாத்தான் இருப்போம். 

 

ரொம்ப அழகா சொன்னீங்க சார் ? நீங்க சொன்னாற் போல விளம்பரங்கள் இலவசங்கள் கவர்ச்சியான அறிவுப்புகள்னு எல்லாம் விற்பனை மயமாகவே போயிட்டது. யாரை எப்படி பயன்படுத்தலான்னு யோசிக்கும் மனநிலைக்கு எல்லாரும் வந்தாச்சு. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு விளம்பர அறிவிப்பினைக் கேட்டேன். வளர்ந்து வரும் மாலில் ஒரு கேம் கம்பெனி தன்னோட கிளைகளை திறக்கிறாங்க. மாணவர்கள் தான் அவர்களின் டார்கெட். வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மாதிரி அறிவிச்சியிருக்காங்க. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, கேம் ஷோல நிறைய பரிசுகள் இருக்காம். ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுக்கள் கோலோச்சிக்கிட்டு இருக்கும் போது இந்த அறிவிப்பின் தாக்கம் எப்படியிருக்குன்னு நாம அடுத்த வீடியோவில் பார்க்கலாம் அதுவரையில் சைனிங் ஹாப் ஷோபா மற்றும் நம்ம வேலியபுள் கெஸ்ட் மருத்துவர் பிரபாகர் அவர்கள். திரை அணைக்கப்பட்டது. 

 

எங்கே ஆரம்பிக்க போறாங்க ? அந்த வீடியோகேம்.

 

மாயா தன் மொபைலை உயிர்ப்பித்து அந்த விளம்பரத்தைக் காட்டினாள். மாறன் அதை கவனித்தான். இந்தவாரம் நாம இங்கே போகணும் மாயா. 

 

ஏன் ஸார் ? ஸாரி சார் கூப்பிடவேண்டான்னு சொன்னீங்க இல்லை, ஏன் மாறன் ?

 

ஜஸ்ட் பார்க்கணுன்னு தோணுது. என் உள்ளுணர்வு எச்சரிக்கிறது நிச்சயம் அங்கே ஏதாவது ஒரு லீட் கிடைக்கலாம். மாயா இப்போ நாம போற இடம் சமீபத்திய துக்கத்தை விழுங்கியிருக்காங்க கொஞ்சம் பார்த்துப் பேசணும்.

 

என்னோட பேச்சு உபகரணங்களோடதான். அதனால் நீங்க கவலைப்படவேண்டாம். கார் அந்த காம்பெளண்டை தொட்டது. 

 

மாறன் அந்த வீட்டின் வாயிற்படியில் சற்றே தயங்கித்தான் நின்றிருந்தான். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று பெரும் மனக்குழப்பம் எழுந்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு வாசல் முழுவதும் குத்தகைக்கு எடுத்திருந்த காலணிகள் எல்லாம் இப்போது காணாமல் போயிருந்தன. வீடு பிடிக்காத ஒரு மெளனத்தைப் பூசிக் கொண்டு இருந்தது. 

 

 

பக்கத்து பிளாட் பெண்மணி மெல்ல எட்டிப்பார்த்து மாறனைக் கண்டதும் சட்டென்று தலையை இழுத்துக் கொண்டாள். தனக்கேன் வம்பு என்பதாகக் கூட இருக்கலாம். 

 

நகர்ப்புறங்களில் நத்தையாய் இம்மாதிரிக் கட்டிடங்களுக்கு சுருண்டு கொள்ளும் மனிதர்களின் மத்தியில் மனிதத்தை எதிர்பார்ப்பது என்பது ஆழ்கடல் முத்தை தேடுவதைப் போலத்தான் அதில் கூட மனிதன் வெற்றிப் பெறுகிறான் ஆனால் மனிதத்தில் தோற்றுப் போகிறான். அட என்ன இப்படியே நடந்ததை நினைச்சிகிட்டே இருந்தா உங்க உடம்பு என்னாகுறது ? எழுந்து வேலை வெட்டியப்பாருங்கய்யா ? ன்னு கலயத்தில் கஞ்சியைக் கொண்டு வந்து நீட்டும் மனிதர்கள் இப்போது இல்லை. கிராமப்புறங்களில் கூட சற்று விநோதமான நகர கைகள் வளைத்துவிட்டது. 

 

கோலம் அடைத்த வாசலில் எல்லாம் அதன் வண்ணங்களைக் கலைப்பதைப் போல வாகனங்களின் கால்தடங்கள் பதிய துவங்கிவிட்டது. ஆதிச்ச நல்லூரைப் போல இதுநான் எங்கள் காலம் என்று நாம் ரசித்து வாழ்ந்த பக்கங்களை மண்ணுக்குள் தேடும் காலம் விரைவில் இல்லை என்ற நிஜம் நெஞ்சை அழுத்தியது. கூலர்ஸை கழட்டினான். 

 

தொட்டதும் திறப்பதைப் போன்று இருந்த கதவை அலட்சியம் செய்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். சாத்தலைங்க திறந்துதான் இருக்கு.

 

நான் மாறன் இவங்க மாயா இரண்டுபேரும்

 

 தெரியும் ஸார் அன்னைக்கு என் பேரனுடைய கடைசி நாளில் பார்த்தேனே ?!

 

மன்னிக்கணும். எனக்கு இந்த நேரத்தில் உங்களை வந்து தொந்தரவு செய்ய கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் ஏற்கனவே நான்கு பிள்ளைகள் காணாமல் போயிருக்காங்க அதில் இரண்டுபேர் இப்போ உயிரோடவே இல்லை, ஒரு பையன் கிடைச்சும் பலனில்லை. 

 

தம்பி அதுக்கும் என் பேரனோட இறப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ?! அவன் தற்கொலை இல்லை பண்ணியிருக்கான். அவர் அந்த வார்த்தையைச் சொல்லும் போது உடைந்து அழத் தயாராய் இருப்பதைப் போல இருந்தது. 

 

ஸார் நடந்து போன சம்பவத்துக்கும் உங்க பேரனின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லாம இருக்கலாம் ஆனா இறந்த போன உங்க பையனுக்கும் அந்த பிள்ளைகளுக்கும் வயது ஒண்ணுதான் காணாமல் போன பையனும் இவனும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறாங்க. எனக்கு அவனோட அறையை மற்றும் அவனின் பொருட்களை கொஞ்சம் பார்க்கணும். 

 

அன்னையிலே இருந்து அது பூட்டித்தான் இருக்கு. நிற்க நேரமில்லாத என் மகனும் அவன் மனைவியும் கூட இப்போ இதோ பக்கத்து அறையில் முடங்கிக் கிடக்கறாங்க. திறந்துதான் இருக்கு போங்க என்று மாறன் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த அறையைக் காட்டினார். மாறனும், மாயாவும் எழுந்தார்கள். 

 

அந்த அறையை நோக்கி கடக்கும் போதே மெல்லியதாய் முனகல் சப்தம். ஏங்க கார்டுலே கடனாயிடுச்சின்னு அவனைத் திட்டாதீங்க என்னோட நகை இருக்கு நான் வைச்சித்தர்றேன் இல்லைலேன்னா ஆபீஸ்லே லோன் போட்டுத் தர்றேன் பாவம்ங்க அவன்

 

சரிம்மா நான் திட்டலை இப்போ நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று ஒரு ஆண் குரல் சமாதானப்படுத்தியது. பெரியவர் கதவைத் திறந்து உள்ளே சென்று, சிறிது நேரத்தில் அந்த குரலுக்குச் சொந்தகாரன் ஆன மனிதன் வெளியே வந்தான்.

 

நீங்க....

 

நான்தான் அவனோட அப்பா அவர் சுட்டிக்காட்டிய திசையில் சில தினங்களுக்கு முன்பு அதுவா இருந்த அச்சிறுவன் அவனாகச் சிரித்துக் கொண்டு இருந்தான். 

 

வாங்க என்று அறைக்குள் அழைத்துச் சென்றார் அவர். முகத்தில் சில நாட்களின் தாடி முளைத்திருந்தது. கண்களில் சொல்லொண்ணா சோம் துளிர்த்திருந்தது. 

 

அறைக்குள் நுழைந்தார்கள். மாயா தன் போனில் நோட்பேடைத் திறந்தாள். அறையை சுற்றிலும் ஒரு பார்வையிட்டு சில குறிப்புகளை எழுதிக் கொண்டாள்.

 

அறை முழுவதும் பணத்தின் செழுமை படர்ந்திருந்தது. விலையுயர்ந்த படுக்கை, கிரிக்கெட் பேட், சுவரோரமாய் கம்ப்யூட்டர் அதன் அருகில் சுவரின் பிளக்பாயிண்ட்டில் மொபைல் போன்களுக்கு உயிரூட்டும் சார்ஜர்கள். சுவரில் பெரியதாக கோலியும், டோனியும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறு அலமாரியில் சில பொம்மைகள் அதன் நடுவில் பாடப் புத்தகங்கள் பக்கத்தில் ஒரு மொபைல் போன் அநாதையாய் கிடந்தது. 

 

இது....

 

என் பையனோட போன். ஆன்லைன் கிளாஸ்க்காக வாங்கித் தந்தது. 

 

போலீஸ் இதை எடுத்துப் போகலையா ?

 

இல்லை ஸார் அவன் இறந்தப்போ போலீஸ் வந்து விசாரிச்சப்போ இது எங்கே இருந்ததுன்னே தெரியலை நேத்து அவனின் ஈமக்காரியங்களுக்காக அவன் உபயோகிச்ச பொருட்களை எடுக்கும் போது கிடைச்சதுன்னு வேலைக்காரம்மா கொண்டுவந்து கொடுத்தாங்க. 

 

மாயா அதைக் கையில் எடுத்தாள் நான் காஸ்ட்லியான வஸ்த்து என்று அது சிரித்தது. சார்ஜர் பாதி தீர்ந்து போயிருக்க தொடுதிரையில் செக்யூரிட்டி வளையம். 

 

பாஸ்வேர்டு ....

 

எனக்கு தெரியாது ஒருவேளை என் மனைவிக்கு தெரிந்து இருக்கலாம் ஆனா எதையும் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. ஒரே பையன்னு செல்லம் கொடுத்து அவனுக்காகவே கால நேரம் பார்க்காம உழைச்சோம் சார் ஆனா பாருங்க எல்லாத்தையும் .....!

 

உங்க வருத்தம் என்னாலே புரிஞ்சிக்க முடியுது. அவன் எப்படி ரொம்ப மூடி டைப்பா இல்லை நல்லா பேசுவானா ? 

 

ரொம்ப பேசமாட்டான் ஸார். அவனுக்கு பிறகு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள அவளோட உடல்நிலை ஒப்புக்கலை அதனால இவன்தான் எங்களுக்கு எல்லாமா இருந்தான். இங்கே நின்றால் எனக்கு அவன் நினைவு அதிகமாக வருகிறது என்று நகர்ந்தவர் உங்களுக்கு குடிக்க ஏதாவது என்று கேட்டார்.

 

வேண்டாம் ஸார் .... என்றனர் ஒரே குரலில் கோரஸாய் மாறனும், மாயாவும்.

 

அதேநேரம் வாசலில் ஒரு அரவம் கேட்டது. ஒரு சிறுவன் அங்கிள் கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம் உங்க வீட்டு பால்கனியில் எங்க பால் விழுந்திட்டது என்ற குரல். மாறன் அக்குரலில் ஈர்க்கப்பட்டு வெளியே வந்தான். 

 

பால்கனிப் பந்திற்காய் காத்திருக்கும் ஆர்வம். நீளமான டிராக்ஸூம், மஞ்சள்நிற டீ-சர்ட்டும் அணிந்திருந்தான். பேட்டை தாங்கியபடி அவன் சற்றே சாய்வாய் நின்றிருந்த விதம் மாறனுக்கு எதையோ நினைவூட்டியது. அந்த சிறுவனின் உருவம் அவனைப்போல தோன்ற மெலிதாய் ஒரு ஈர்ப்பு எட்டிப் பார்த்தது. விசாரிப்பதற்குள் தான் தேடி வந்த பொருளைப் பெற்றுக் கொண்டு தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்துவிட்டு கிளம்பினான் அவன்.

 

மாறன்...இங்கே வாங்களேன் மாயாவின் குரலில் வழிந்த டெசிபல் அவனை பின்னோக்கி நகர வைத்தாலும் மனம் முழுக்க அச்சிறுவன் வியாபித்திருந்தான்.
 

 

 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #13

Published on 13/07/2022 | Edited on 04/08/2022

 

tt

 

‘முட்டாள்’ என்ற வார்த்தைகளும் நீரஜ்ஜின் சாபமும் இணைந்து கொண்டதோ என்னவோ, ரதி டெக்ஸ்டைல்ஸின் வாசற்படி டைல்ஸ் தன் மடியில் மைக்கேலை வாங்கிக் கொண்டது. தன் கேபினின் ஜன்னல் வழியாக மதன் எட்டிப்பார்க்க கூடவே நீரஜ்ஜூன் கண்களும் சேர்ந்து கொண்டன. அவனின் உதடுகள் கோபத்திலும், அவமானத்திலும் நடுங்கிய மைக்கேலின் உடலைப் பார்த்து மீண்டும் ஒருமுறை ‘முட்டாள்’ என்று கூறிக்கொண்டன.
 
“யார் அவன்? உனக்குத் தெரியுமா நீரஜ்?”
 
நண்பன் சில மணித்துளிகளுக்கு முன்புவரையில் இந்த பகுதிக்கு நான் தேர்ந்த கமெண்டர்களில் ஒருவன். நேர்மை நியாயம் என்ற பேசிவிட்டு இப்போது அடிபடுகிறான்.
 
“பேசிப்பார்க்கலாமா?”
 
“வாய்பில்லை மதன் நான் நிறைய பேசினேன் அவன் எதற்கும் ஒப்புக்கொள்வதாக தெரியவில்லை, நன்றாக வாழ்ந்து கெட்டவன். பாதிப் பட்டினியிலும் நாணயம் போகவில்லை.”
 
“நீரஜ், இம்மாதிரி ஆட்கள் மனசாட்சிக்குப் பயந்தவர்கள், இவர்களை இலகுவாக வளைத்து விடலாம்.” மதன் தன் இண்டர்காமை எடுத்து யாரிடமோ பேசினான். தயங்கித் தயங்கி தன் காயங்களையும் கலைந்த உடைகளையும் பார்த்தபடியே வெளியேறிய மைக்கேலை நோக்கி இருவர் ஓடினார்கள். மேலும் தன்னை தாக்க வருகிறார்களோ என்று பயந்த அவன் ஓட எத்தனிக்கும் போதே,
 
“ஸார், உங்களை எம்.டி. கூப்பிடறார்.” என்றான் வந்தவர்களின் ஒருவன். மைக்கேல் நம்பாமல் பார்க்க, ரிசப்ஷனில் உட்கார வைக்கப்பட்டான். குளிர்பானம் ஐஸ்கட்டிகள் மிதந்து தரப்பட்டது.
 
“எடுத்துக்கோங்க, என்ன ஸார் எனக்குத்தான் தெரியாது. நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லக்கூடாது நான் எம்.டிக்கு வேண்டியவன்னு, என் வேலைக்கே உலை வைக்கப் பார்த்தீங்களே தம்பி?!”
 
பவ்யமாய் அருகில் நின்ற அவரை வியப்பு தடவிய கண்களோடு பார்த்தான் மைக்கேல். சற்று நேரத்திற்கு முன்பு ‘வேலைக்கு சேர வந்த நாளே தாமதம் இதில் அட்வான்ஸ் வேற கேட்கிறே? இதென்ன உங்கப்பன் கட்டிவைச்ச கடையா’ன்னு, கேள்வி கேட்டு வார்த்தை முத்தி, அடித்து வெளியே விரட்டிய மனிதர். கிழிந்த பொட்டலம்போல் தூக்கி வீசியவர். தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் மனிதர்கள்தான் சட்டென்று எத்தனை நிறம் மாறுகிறார்கள். மைக்கேல் ஏதும் பேசாமல் அமைதியாய் பார்த்தான். குளிர்பானத்தையும் தொடவில்லை.
 
அதே ஆசாமி, “சின்னவர் மேல கூப்பிடறார்.” என்று பவ்யமாக சொல்லிவிட்டு, ஒரு ஊழியருடன் முதல் மாடிக்கு அனுப்பினான். இதுவரையில் கண்களில் இகழ்ச்சியும் சக மனிதன் அவமானப்படுகிறானே என்ற அக்கறையின்றி உதட்டை கன்னத்தின் கடைக்கோடிவரை இழுத்து சிரித்த அனைவரின் கண்களிலும் இப்போது ஒருவித மரியாதையைப் பார்க்க முடிந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை.
 
பணம் சட்டைப் பையினை மீறி வெளியே எட்டிப்பார்த்தபோது,
 
“சார்... சார் என்ன வேண்டும்?”
 
“மச்சி அங்க போகணும்டா நீ?!” கார் கதவை பவ்யமாய் திறந்துவிட்டு, “வெல்கம் யூ” தலைசரித்து வணங்கியதும், பில்லுக்கு மீறிய டிப்ஸ்க்குகாக அடிவயிறுவரை சரிந்து வணங்கியதும், ‘இதெல்லாம் அந்த மோசமான நாளுக்குப் பிறகு, அப்படியே தலைகீழாக மாறிப்போனதே ஏன்? நான் இப்படி சபிக்கப்பட்டேன்.’
 
“சார் நீங்க உள்ளே போகலாம்...” மீண்டும் அதே பெரியவர்?! மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“ஹாய் மைக்கேல்?!” என்று மதனின் பின்னால் நின்று குரல் கொடுத்த ராஜீவ்வைப் பார்த்தவுடன் தனக்கு கிடைத்த மரியாதையை சட்டென்று புரிந்து கொண்டான் மைக்கேல். அன்று ஆரம்பித்த பழக்கம். இந்த இழிநிலையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறு இல்லைன்னு மனசுக்குள்ளே தோண ஆரம்பிச்சது.
 
“இரண்டு வருஷம் இப்படியே போச்சு அதற்குப்பிறகுதான் பிரச்சனையே?”
 
“அப்படியென்ன தொழில் பண்ணீங்க? கள்ளக்கடத்தலா?”
 
“இல்லை நவீன தொழில் நுட்பங்களோடு நூதனமா ஒரு திருட்டு.” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான் மைக்கேல்.
 
தன் வீட்டின் முன்னால் வந்து நின்ற வேனைப் பார்த்து அம்மா அதிசயித்தாள், மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“இந்த பிரிட்ஜ், கேஸ் ஸ்டவ் எல்லாம் கிச்சன்லே வைச்சிடுங்க. அப்பறம் அந்த மர பீரோவை எடுத்துட்டு புது பீரோவை வைங்க. சோபா இங்கே சுவரோரமா இருக்கட்டும். டிவி கூட, செல்ப்பில் வேண்டாம் சுவற்றில் அடிச்சிடுங்க...” தன் முன்னால் நின்ற நான்கைந்து இளைஞர்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் மைக்கேலை அம்மாவும், தங்கையுமாய் ஆர்வமாய் பார்த்தார்கள்.
 
“என்ன மைக்கேல் இது? அண்ணா புது டீவியா ஏதுன்னா காசு?”
 
“பிரண்ட் ஒருத்தனோட சேர்ந்து புதுசா தொழில் தொடங்கியிருக்கேன்.” வேலைகளை மேற்பார்வையிட்டபடியே சொன்னவன்.
 
“புது தொழிலா? மூலதனம் இல்லாம எப்படி மைக்கேல்?!” அம்மாவின் சந்தேகப் பார்வையைத் தவிர்த்துவிட்டு,
 
“உலகத்திலே எல்லாரும் கெட்டவங்களா இருக்கப் போவது இல்லைம்மா, நாம நல்லாயிருந்தப்போ நம்மால யாரோ ஒருத்தர் பயன்பட்டு இருப்பாங்களே அவங்களில் ஒருத்தன்தான் இவன். எப்படியோ நம்ம கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போச்சு இன்னும் நல்ல லாபம் வந்தா சொந்தமா வீடு வாசல்லன்னு செட்டில் ஆகிடலாம் தங்கச்சிக்கு நல்ல இடத்திலே கல்யாணம் செய்யலாம். முதல்ல இந்தா பிடி இதிலே இருபத்தைந்தாயிரம் இருக்கு வீட்டுவாடகை கரண்ட் பில் எல்லாம் செட்டில் பண்ணு.” மைக்கேல் அம்மாவின் கரங்களில் திணித்துவிட்டு தங்கையிடம் ஒரு பார்சலைத் திணித்தான்.
 
“இனிமே கிழிந்ததை தச்சிக் கட்டிக்க வேண்டாம் ஐந்து சல்வார் இருக்கு அடுத்த மாதம் உன்கிட்டே பணம் தர்றேன். வேணுங்கிறதை வாங்கிக்க.” என்று புதியதாக கவர் பிரிக்கப்படாமல் இருந்த சோபாவில் அமர்ந்தான் மேலே உறையாய் இருந்த பிளாஸ்டிக் கவர் நசுங்கி சிணுங்கியது அவனின் மனதைப் போலவே?!
 
கண்ணாடித்தடுப்புகளுக்கு நடுவில் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் மைக்கேல் அவனின் லேப்டாப்பின் தொடுதிரையில் பிரபல மொபைல் நெட்வொர்க் கம்பெனிகளின் டேட்டா பேஸ். அவற்றை எடுத்து எக்ஸலில் அப்பலோட் செய்துவிட்டு, க்ரூப் கால் கனெக்ட் செய்தான்.
 
“உங்க மொபைல்ல நம்ம குரூப்-க்கு தகவல்கள் எல்லாம் அனுப்பியிருக்கேன் இன்னும் நாலைந்து நாளுக்கு இந்த டார்கெட்ஸ் எல்லாம் முடிக்கணும்.”
 
“எஸ் ஸார்.” என்ற பதில்கள் கோரஸாக வந்தது.
 
ராக்கேஷ் மைக்கேலை நிமிர்ந்து பார்த்தான்.
 
“எஸ் ஆன்-லைன் சூதாட்டம்தான் சம்பந்தப்பட்ட நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புவோம் அவங்க ரெஸ்பான்ஸ்ஸை பொறுத்து வலை விரிப்போம். எங்களோட டார்கெட் பேராசைப் பிடித்த ஆசாமிகள்தான். ஆன்லைன் விற்பனைகள் அதிகரிச்சிட்டு வந்ததால தங்களோட தொலைபேசி இணைப்புகளை அதில் குறிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அந்த தளத்தில் செயல்படறதுக்காக கேஷ்பேக், சில பரிசுக்கூப்பன்கள் எல்லாம் அனுப்பி வைக்கப்படும், இதே போல் மொபைல் நெட்வொர்க்கில் அவங்க நெம்பரை ஹேக் பண்ணிட்டா அவங்க பங்கேற்ற தகவல்கள் அந்த போனின் எண் எந்த இடத்தில் எல்லாம் லாகின் ஆகுன்னு தெரியும்.
 
உங்களுக்கு ஒரு ஆபர் இருக்குன்னு இரண்டு மெசேஜ் போகும், பார்க்கலைன்னா கவர்ச்சிகரமான குரலில் ஒரு பெண்ணை பேச வைப்போம். பாதிபேர் அதிலேயே மயங்கி விவரங்களை கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. எங்களோட சைட்டில் விவரம் கேட்பாங்க, டம்மியா சில கேள்விகள் கேட்போம். குழந்தை கூட பதில் சொல்வதைப் போல இலகுவா, பத்தாவது கேள்விக்கு பிறகு அவங்க எங்க லிங்கை அவங்க நண்பர்களுக்கும் குழுக்களுக்கம் ஷேர் பண்ணச் சொல்லுவோம். எல்லாம் முடிந்து இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு பெரிய பரிசை வின் பண்ணியிருக்கீங்கன்னு மெசேஜ் தருவோம். அந்த கங்கிராட்ஸ்க்கு மேல விழற கலர் பூக்கள் தான் நாங்க அவங்களுக்கு விரிக்கிற வலை.
 
இது ஏதும் தெரியாதவங்க அடுத்த கட்டத்துக்கு நகர்வாங்க. ஐபோனும், லேப்டாப், காஸ்ட்லி திங்க்ஸ் வெறும் கேள்விக்கு பதில் சொல்லி கிடைச்சா யார் விடமாட்டாங்க. இந்த போட்டிக்கு உள்ள டிமாண்ட்ஸை அவங்களுக்கு புரியாத வியாபார வார்த்தைகள் மூலம் அனுப்பி சப்மிட் பட்டனை கிளிக் பண்ணா?! இந்த பரிசை இத்தனை மணி நேரத்தில் நீங்கள் வெல்லலாம் அதற்கு ஒரு 20ஆயிரம் 30 ஆயிரமின்னு பொருளோட விலைக்கு ஏத்தாமாதிரி டெபாசிட் பண்ண சொல்வோம்.
 
சில பேர் பண்ணிடுவாங்க, அவங்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் கால்வாசி கூட இல்லாத இந்த டெபாசிட் பெரிசா தெரியாது. சிலர் எஸ்கேப் ஆயிடுவாங்க அவங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம். எங்க வெப்சைட்டின் தகவல்கள் அனுப்புவோம் பாருங்க இந்த சைட்டில் நாங்க இதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் ஒரு 50 அல்லது 60 ஐடி கிரியேட் செய்து ரிவ்வியூஸ் பதிவு செய்து அவங்க நம்பிக்கையை அதிகப்படுத்துவோம். பணம் வந்ததும் அந்த ஐடி எங்க ஆப்பில் இருந்து அன்கன்சிடர் பகுதிக்குப் போயிடும் சர்வரோட கனெக்ட் செய்யவும் முடியாம, பணத்தை இழந்தவர்கள் அதிகம்.”
 
“இது தப்புன்னு உனக்குத் தோணலையா மைக்கேல்?!”
 
“சரி தப்பைப் பார்த்தா நான் எப்படி பிழைக்க முடியும். அதிலும் நான் யாரை ஏமாற்றினேன் பேராசை பிடித்த மனிதர்களை எல்லாமே இலகுவா கிடைச்சிடும்ன்னு குறுக்கு வழியில் முயற்சிக்கிற மனிதர்களை அவர்களை ஏமாற்றுவது எனக்குத் தப்பா தெரியலை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவே இருந்தது. எல்லாம் என் ஏரியாவிற்கு வந்த புது இன்ஸ்பெக்டரை சந்திக்கும் வரையில்!
 
ஆன்லைன் சூதாட்ட ஏமாற்றத்தில் இரண்டு பேர் தற்கொலை செய்திட்டாங்கன்னு பேப்பரில் நீயூஸ் படிச்சதும் மேற்கொண்டு இதை தொடறணுமான்னு தோணிச்சி. இரண்டு மனசா நான் தவிச்சிக்கிட்டு நின்னப்போ போலீஸ் விரிச்ச வலைன்னு தெரியாம அவங்களுக்கு எங்க டீமில் உள்ள பையன் கால் பண்ணிட்டான் ட்ரேஸ் பண்ணி அவனைப் பிடிச்சி என்னையும் அதே நேரம், நான் என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் செய்திருந்தேன்.
 
எத்தனை சுலபமா வளர்ந்தேனோ அத்தனை இழந்தேன் ராக்கேஷ், எல்லாம் காலேஜ் பசங்க அவங்க தப்பிக்க அப்ரூவர் ஆகி என்னை கை காட்டிடாங்க, நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன். டிராக்டிங் ஐடி லாக் பண்ணலை, நீரஜ் தன் வரையில் தப்பிக்கணுன்னு கம்பி நீட்டிட்டான். தங்கச்சியோட கல்யாணம் நின்னுபோச்சு அவ தற்கொலை பண்ணிகிட்டா அந்த ஏக்கத்திலேயே அம்மாவும் எல்லாத்தையும் இழந்திட்டேன் ராக்கேஷ்.”
 
மைக்கேல் கதறி அழுதான்.
 
“ஜெயிலுக்கு வந்தபிறகு கூட எனக்கு பிரச்சனைகள் ஓயலை. நீரஜ் பற்றிய உண்மையைச் சொல்லக் கூடாதுன்னு ஒரே மிரட்டல். இங்கே யாரையும் நம்ப முடியலை, யாரைப் பார்த்தாலும் என்னை கொல்ல வர்றா மாதிரியே இருக்கு. எப்படியோ தப்பிச்சிகிட்டே வர்றேன். நீரஜ் பற்றி வாய் திறக்கலை எல்லாமே என்னோட பிளான்னு ஒத்துக்கிட்டேன். குற்றத்தை ஒப்புக்கிட்டதாலே தண்டனை கொஞ்சம் குறைஞ்சது.”
 
“ம்...ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சிக்கல்.” மைக்கேலின் தோளின் மீது ஆதரவாய் கை வைத்தான் ராக்கேஷ்.
 
“எவன் குடிய கெடுக்க இன்னமும் கண்ணு முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று லாட்டியில் கம்பியைத் தட்டியபடியே கன்னடத்தில் கேட்ட செக்யூரிட்டியைப் பார்த்துவிட்டு இருவரும் தங்கள் உறங்க எத்தனித்தார்கள். மனத்தைப் போலவே விழிகளும் மூடாமல் வெறித்தன.