Skip to main content

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்காக பாகிஸ்தான் செல்லுமா இந்தியா? - மத்திய அமைச்சர் பதில்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

anurag thakur

 

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2024 முதல் 2031 வரை நடைபெறவுள்ள ஐசிசி தொடர்களை எந்தெந்த நாடுகள் நடத்தவுள்ளன என்ற பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

 

அதன்படி, 2024 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3 ஐசிசி தொடர்களை நடத்தவுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையை இலங்கையுடன் சேர்ந்தும், 2031 ஒருநாள் உலகக் கோப்பையை வங்கதேசத்துடன் இணைந்தும் இந்தியா நடத்தவுள்ளது. அதேபோல் 2029 சாம்பியன்ஸ் ட்ராஃபியையும் இந்தியா நடத்தவுள்ளது.

 

அதேநேரத்தில் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமான கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு அனுமதி தருவதைப் பொறுத்தே இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்வது குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம், 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபிக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், நேரம் வரும்போது இதுகுறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இதுபோன்ற உலகளாவிய போட்டிகள் நடக்கும்போது பல காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களில் கூட, அங்கு (பாகிஸ்தான்) சென்று விளையாடுவதிலிருந்து பல நாடுகள் விலகியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் அங்கு நிலைமை சாதாரணமாக இல்லை. கடந்த காலங்களில் அணிகள் தாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு என்பது அங்குள்ள முக்கிய சவாலாக உள்ளது. அது ஒரு கவலைக்குரிய விஷயமாகும். எனவே நேரம் வரும்போது, சூழ்நிலையைப் பொறுத்து அரசாங்கம் முடிவெடுக்கும். முடிவெடுப்பதில் உள்துறை அமைச்சகமும் பங்கேற்கும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.