Skip to main content

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்காக பாகிஸ்தான் செல்லுமா இந்தியா? - மத்திய அமைச்சர் பதில்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

anurag thakur

 

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2024 முதல் 2031 வரை நடைபெறவுள்ள ஐசிசி தொடர்களை எந்தெந்த நாடுகள் நடத்தவுள்ளன என்ற பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

 

அதன்படி, 2024 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3 ஐசிசி தொடர்களை நடத்தவுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையை இலங்கையுடன் சேர்ந்தும், 2031 ஒருநாள் உலகக் கோப்பையை வங்கதேசத்துடன் இணைந்தும் இந்தியா நடத்தவுள்ளது. அதேபோல் 2029 சாம்பியன்ஸ் ட்ராஃபியையும் இந்தியா நடத்தவுள்ளது.

 

அதேநேரத்தில் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமான கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு அனுமதி தருவதைப் பொறுத்தே இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்வது குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம், 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராஃபிக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், நேரம் வரும்போது இதுகுறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இதுபோன்ற உலகளாவிய போட்டிகள் நடக்கும்போது பல காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களில் கூட, அங்கு (பாகிஸ்தான்) சென்று விளையாடுவதிலிருந்து பல நாடுகள் விலகியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் அங்கு நிலைமை சாதாரணமாக இல்லை. கடந்த காலங்களில் அணிகள் தாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு என்பது அங்குள்ள முக்கிய சவாலாக உள்ளது. அது ஒரு கவலைக்குரிய விஷயமாகும். எனவே நேரம் வரும்போது, சூழ்நிலையைப் பொறுத்து அரசாங்கம் முடிவெடுக்கும். முடிவெடுப்பதில் உள்துறை அமைச்சகமும் பங்கேற்கும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.