Skip to main content

கரோனா அச்சம்: ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

OLYMPIC

 

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒலிம்பிக் போட்டிகள், வரும் 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த வீரர்கள், விளையாட்டை ஏற்பாடு செய்ய வந்தவர்கள் என இதுவரை ஒலிம்பிக் போட்டிகளோடு தொடர்புடைய 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தலைவர் டொஷிரோ மூட்டோவிடம், கடைசி நேரத்தில் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது" என தெரிவித்தார்.

 

இந்தநிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஒலிம்பிக் தொடக்க விழாவில், போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் சார்பில் ஆறு அதிகாரிகளை மட்டும் அனுமதிக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

 

 

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

விமான தீ விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
japan tokyo flight incident

புத்தாண்டு தினத்தில் (01-01-2024) ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி காரணமாக இன்று (02-01-24) காலை வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதே சமயம் ஒரே நாளில் மட்டும் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது அந்த நாடு முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. 

இந்த சூழலில் ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-2024) ரன்வேயில் தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விமான தீ விபத்தில் கடலோர காவல்படையின் விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தின் கேப்டன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தாண்டு தினத்தில் நாட்டையே உலுக்கிய நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.