Skip to main content

நான்காவது போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும்? ரஹானே பதில்!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

rahane

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத் மைதானத்தில், கடந்த 24 ஆம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் முடிந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

 

இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (04.03.2021) தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே செய்தியாளர்களிடம் பேசினார். ஏற்கனவே கடந்த இரு டெஸ்ட் போட்டிகளின் பிட்ச்கள் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது போட்டிக்கான பிட்ச் எவ்வாறு இருக்கும் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்த பிட்ச் போலவே, நான்காவது போட்டியிலும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "விக்கெட் (பிட்ச்) மூன்றாவது டெஸ்ட் பிட்ச்சுக்கும், சென்னையில் நாங்கள் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் பிட்ச்சுக்கும் ஒத்ததாக இருக்கும். பிங்க் பந்து வித்தியாசத்தை ஏற்படுத்தியது. சிவப்பு பந்தை ஒப்பிடும்போது அது விக்கெட்டிலிருந்து மிக விரைவாக வந்தது" எனத் தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர், "பிட்ச் எப்படி செயல்பட போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாங்கள் இங்கிலாந்து அணியை மதிக்கிறோம். அவர்கள் ஒரு நல்ல அணி. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து நன்றாக விளையாடியது. நாங்கள் அவர்களை லேசாக எடுத்துக்கொள்ளவில்லை" எனக் கூறினார்.

 

மேலும் பிட்ச் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ரஹானே, "நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விக்கெட்டுகள் எவ்வளவு சீம் (seam) ஆகிறது என்று யாரும் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்ட நுட்பத்தைப் பற்றி பேசுகிறார்கள். மற்றவர்கள் சொல்வதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பிட்ச்களில் புற்கள் இருந்து, பந்து மேலாகவும், கீழாகவும் செல்லும்போது, அது ஆபத்தானதாக மாறி விடுகிறது. ஆனால் நாங்கள் அதைப் பற்றி புகார் செய்வதுமில்லை. அதைப்பற்றி ஒருபோதும் பேசியதுமில்லை" எனத் தெரிவித்தார்.

 

"அழுகிற மாதிரியே இருக்கு... ஏன்னுதான் புரியல" - அகமதாபாத் பிட்ச்சிற்கு ஆஸி. வீரர் ஆதரவு!

 

Next Story

நரேந்திர மோடி மைதானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல்; போலீஸார் தீவிர விசாரணை

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Threatening to blow up Narendra Modi stadium in ahmedabad

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

அந்த வகையில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடியது. தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மைதானத்தில் இந்தத் தொடர்கள் நடைபெறவுள்ளன. அதில், முதல் ஆட்டமான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடின. அதேபோல், போட்டிக்கான கடைசி ஆட்டமும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியையும், நரேந்திர மோடி மைதானத்தையும் வெடி வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் மூலம் மும்பை காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் (05-10-23) இரவு மும்பை காவல்துறையினருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது.

 

அந்தக் கடிதத்தில், ‘டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயை விடுக்கவிக்க வேண்டும். அதோடு சேர்த்து ரூ. 500 கோடி பணமும் தர வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வெடி வைத்து தகர்த்து விடுவோம். இந்த தாக்குதலை நடத்துவதற்காக ஆட்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலின் அனுப்புநர் யார் என்ற கோணத்தில் மின்னஞ்சலின் முகவரியைத் தீவிரமாகக் கண்காணித்தும், விசாரித்தும் வருகின்றனர். 

 

 

Next Story

டெஸ்ட்டில் மீண்டும் ரஹானே; தேர்வுக்கு பின்னணியில் தோனி; வெளியான தகவல்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Rahane back in Test; Dhoni in the background for the selection; Released information

 

நடப்பு ஐபிஎல் தொடரில் ரஹானே தொடர்ந்து அசத்தி வருகிறார். கொல்கத்தா உடனான போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை மொயின் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

 

கொல்கத்தா உடனான போட்டியில் 29 பந்துகளில் 71 ரன்களைக் குவித்து 244 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரஹானே, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்ரேட் கொண்டவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸில் 209 ரன்களை குவித்து 199.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் ரஹானே நீடிக்க 198.03 உடன் ஷர்துல் தாக்கூர் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.

 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்தது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் தனது காலடியை ரஹானே பதிக்க உள்ளார். ரஹானே கடைசியாக இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஹானே முதல் இன்னிங்ஸில் 49 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில், ரஹானே இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பின்னணியில் தோனி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவின் பெயரை சேர்ப்பதற்கு முன் பிசிசிஐ தேர்வாளர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனியுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னதாக ரஹானே ரஞ்சி டிராபியில் 7 போட்டிகளில் விளையாடி 634 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 57 ரன்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.