Skip to main content

இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிடா புஜாரா...?

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது ஓவரில் களமிறங்கிய புஜாரா, 380 நிமிடங்கள் களத்தில் நின்று 246 பந்துகளை சந்தித்து 123 ரன்கள் எடுத்து 88-வது ஓவரில் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

 

pp

 

 

ஒருபக்கம் ஸ்டார்க் தலைமையில் புயல் வேகத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள், மறுபக்கம் வெப்பநிலை 39 டிகிரி, மேலும் புஜாராவுக்கு எதிர்முனையில் மளமளவென விக்கெட்கள் சரிவு. ஆனால், சோதனைகளை தன்னுடைய நிதானம் கலந்த ஆட்டத்துடன் சந்தித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டார். 

 

டிராவிட்டின் நம்பர் 3 ஆட்டம், லக்ஷ்மனின் டெஸ்ட் ஸ்பெஷல், கிளாசிக் பேட்டிங் என டெஸ்ட் போட்டிக்கே உரித்தான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் புஜாரா. ஸ்டார்க் பந்தில் சிக்ஸ், அட்டகாசமான ஷாட்கள் என மறுபுறம் சில அதிரடியையும் ஆடி அசத்தினார் புஜாரா. தன்னுடைய சிறந்த டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் 1980, 1990-களில் ஆடிய சிறந்த டெஸ்ட் வீரர்களின் ஆட்டத்தை நினைவு கூறவைத்தார்.

 

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது அனைவரின் கவனமும் கோலியை நோக்கி இருந்தது. மேலும், இந்த தொடருக்கு முன்புவரை புஜாரா வெளிநாடுகளில் சரியாக ஆடுவதில்லை என்ற விமர்சனமும் இருந்தது. ஆனால் புஜாரா, தான் சிறந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பதை மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் உலகிற்கு தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

 

pp

 

 

"விராட் கோலியின் சாதனைகளை போன்று புஜாராவின் சாதனைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. புஜாரா மிகவும் கிளாசிக் வீரர். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறவைப்பார். ஒரு சிறந்த அணிக்கு சிறந்த நம்பர் 3 முக்கியம். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியபோது டிராவிட் நம்பர் 3 ஆக இருந்தார். தற்போது வெளிநாடுகளில் இந்தியா சிறப்பாக விளையாடும்போது, புஜாரா நம்பர் 3 ஆக உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கோலி எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு புஜாரா அணிக்கு முக்கியமான வீரர். ஆனால் அவரின் சாதனைகள் கவனிக்கப்படாமல் உள்ளன. அவரது புள்ளிவிவரங்களை பார்த்தாலே அவரது முக்கியத்துவம் புரியும்.” என்று மார்ச் மாதம் கங்குலி தெரிவித்திருந்தார். அந்த கூற்று இன்று உண்மையாகியுள்ளது. 

 

புஜாரா இதுபோல மராத்தான் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவது முதல் முறையல்ல. இந்திய அணி தடுமாறும்போது, பலமுறை அணியை மீட்டுள்ளார். 2012-ஆம் ஆண்டில் வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் ஸ்கில்களை அற்புதமாக வெளிப்படுத்தினார். மான்டி பனேசர் மற்றும் கிரேம் ஸ்வான் ஆகியோரின் பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. கவுதம் கம்பீர், விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி, யுவராஜ் சிங், தோனி என ஒருபுறம் விக்கெட்கள் சரிந்து கொண்டிருந்தன. ஆனால், மறுமுனையில் 451 நிமிடங்கள் களத்தில் விளையாடி, 350 பந்துகளில் 135 ரன்களை எடுத்து அணியை காப்பாற்றினார் புஜாரா. இப்படி பலமுறை மராத்தான் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். 

 

இந்த சதம் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் தனது முதல் சதத்தை அடித்தார். விஜய் மஞ்ச்ரேகர், சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், விராட் கோலி மற்றும் முரளி விஜய் ஆகியோருக்கு பிறகு ஆசியாவிற்கு வெளியே, ஒரு டெஸ்ட் போட்டியில் தொடக்க நாளில் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இது அவரது 16-வது டெஸ்ட் சதமாகும்.

 

ஆட்டத்தில் மட்டுமல்ல. புள்ளிவிவரங்களிலும் டிராவிட்டை ஒத்துபோகிறார் புஜாரா. டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 67வது இன்னிங்ஸில் 3000, 84வது இன்னிங்ஸில் 4000 மற்றும் 108வது இன்னிங்ஸில் 5000 ரன்களை குவித்தார். அதே இன்னிங்க்ஸ்களில் புஜாராவும் அந்த மைல்கல்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

"இந்த சதத்தை விட சிறந்த டெஸ்ட் சதத்தை அவரிடம் பார்த்திருக்கிறீர்களா?. அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் டிரைவ் ஷாட்கள் ஆட முற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் அற்புதமாக தன்னுடைய ஆட்டத்தை அமைத்தார் புஜாரா. அவரின் சிக்ஸ் மிகவும் என்னை கவர்ந்தது. அடிலெய்டு ஓவலில் நீங்கள் பார்த்த சிறந்த சதங்களில் இதுவும் ஒன்றாகும்." என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமன் கூறியுள்ளார். 

 

"அணியினர் என்னுடைய சிறந்த சதம் என்று கூறுகின்றனர். என்னால் இதை சிறந்த சதமாக கருத முடியவில்லை. என்னுடைய சிறந்த 5 ஆட்டங்களில் இதுவும் ஒன்று.” என்று புஜாரா முதல்நாள் ஆட்டத்தை பற்றி தெரிவித்தார். வெளிநாடு டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் திறமைகளையும், முக்கியத்துவத்தையும் அன்றே கங்குலி துல்லியமாக கணித்தது சிறப்பு வாய்ந்தது. 

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.