Skip to main content

அமைதியான ஆஸ்திரேலியா... அடுத்த வெற்றியை நோக்கி இந்தியா...

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் வீரர்கள் என சிலர் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம், பும்ராவின் பந்துவீச்சு ஆகியவற்றில் கதிகலங்கியது ஆஸ்திரேலியா. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் வீரர்கள் என அனைவரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர். 

 

ii

 

முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமல்லாது, உலகக்கோப்பை தொடரையும் கருத்தில் கொண்டு இந்திய அணி களமிறங்குகிறது. தவான், கோலி, ரோஹித், எம்.எஸ்.தோனி, புவனேஷ், ஜடேஜா, ராயுடு, ஷமி ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உண்டு. மற்ற அனைவரும் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.  

 

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க இணை ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை ரோஹித் ஷர்மா எடுத்த ரன்கள் 1,143, பேட்டிங் சராசரி 51.95. ஷிகர் தவான் 644 ரன்கள்,  42.93 பேட்டிங் சராசரி. இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிதும் உதவியுள்ளனர். இருவரும் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணியை கதிகலங்க வைப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 

 

ii

 

மூன்றாவது வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணிக்கு பெரிய பக்கபலமாக இருப்பார். இவர் சிட்னி மைதானத்தில் மட்டும் குறைவான சராசரி வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அதை மாற்றி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 1001 ரன்கள், 50.05 சராசரி. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அந்த தொடரில் இந்திய அணி எடுத்த ரன்களில் 72% சதவீத ரன்களை எடுத்தது டாப் 3 பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நான்காவது மற்றும் ஐந்தாவது வீரராக களமிறங்கும் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இல்லை. உலகக்கோப்பை போட்டிகளில் இடம்பெற இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆசியக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள ராயுடு இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது வீரராக தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், கேதர் ஜாதவ் பேட்டிங் ஆல்ரவுண்டராக இருப்பதால் இந்திய அணியின் 6-வது பந்துவீச்சாளராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் தனது இடத்தை உறுதிசெய்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.  

 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வில் இருந்த எம்.எஸ்.தோனி ஆஸ்திரேலியா தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இவரது அனுபவம் இந்திய அணியின் இளம் வீரர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரது பினிஷிங் திறமை மற்றும் மின்னல் வேக ஸ்டம்பிங் போன்றவை ஆட்டத்தை மாற்றி இந்திய அணியை வெற்றிபெற வைக்கும். கடந்த சில தொடர்களில் எதிர்பார்த்த அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இவரது அனுபவம் மூலம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் திறமை கொண்டவர்.  

 

ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்தர ஜடேஜா ஆகியோர் அணியின் முக்கிய வீரர்கள். டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா ஒருநாள் தொடரிலும் தனது பங்களிப்பை ஆற்றுவார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருப்பது ஹர்திக் பாண்டியா மட்டுமே. உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் ஆல் ரவுண்டராக வேகப்பந்து வீச்சாளர் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். இவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். 

 

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவமில்லை என்றாலும் இந்த டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார். குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இணை சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு முக்கிய பங்குவகிப்பர். 

 

ii

 

 

வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், முஹம்மது சமி ஆகியோரின் அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முஹம்மது சமி ஒருநாள் தொடரிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் புவனேஸ்வர் குமார், முஹம்மது சமி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு ஆஸ்திரேலியா அணியை திணறவைக்கும். 

 

இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அனுபவமற்ற வீரர்கள் விளையாடுவது இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். 

 

 

 

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.