Skip to main content

1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்!

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

pujara


இருபதாம் நூற்றாண்டு அதிரடிகளுக்கு பெயர்போன காலம். டி20 போட்டிகளும், 10 ஓவர் போட்டிகளும் ஒரு பக்கம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு ஒருபோதும் எந்த கிரிக்கெட்டுக்கும் இருக்காது என்பதை பல டெஸ்ட் போட்டிகள் காட்டியுள்ளன. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் மீண்டும் அதை நிருபித்துள்ளது.
 

டிராவிட், லக்ஸ்மன் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளனர். உலகின் மிகச்சிறந்த பவுலர்களை தன்னுடைய டெஸ்ட் பேட்டிங் மூலம் கதிகலங்க வைத்துள்ளனர். அதே சமயம் ஸ்டெய்ன், மோர்கல், நிடினிஆகியோரிடம் 2008-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டிராவிட், லக்ஸ்மன் போன்ற உலக புகழ்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் கொண்ட இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸில் 100 ரன்களுக்கு குறைவான ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆன வரலாறும் உண்டு. அந்த போட்டியில் 76 ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணி.
 

2000-களில் கிரிக்கெட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலியா. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வரலாறு படைத்த பாண்டிங்கை உள்ளடக்கிய அந்த அணியும் 47 ரன்களில் 2011-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக ஆட்டமிழந்தது. இப்படி பவுலர்கள் பேட்ஸ்மேன்களை திணறடிப்பதும், பேட்ஸ்மேன்கள் பவுலர்களை சோதிப்பதும் டெஸ்ட் போட்டிகளுக்கே உரித்தான ஒன்று.
 

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட், தொடர் தொடங்கும் முன்பிருந்தே அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்த தொடரில் கோலியை விட கவாஜா அதிக ரன்கள் குவிப்பார் என பாண்டிங் தெரிவித்திருந்தார். பலரும் கோலி இந்த தொடரில் பல சாதனைகள் புரிவார் என்று பேசி வந்தனர். தொடர் தொடங்குவதற்கு முன்னர் சமூக ஊடகம் முதல் ரசிகர்கள் வரை பெரும்பாலும் அனைவரும் அதிகம் விவாதித்த வீரர் கோலி.
 

தொடர் தொடங்கிய பின்னர் நிலைமை மாறியது. தேர்வு வினாத்தாளில் அவுட் ஆப் சிலபஸில் இருந்து கேள்வி கேட்பது போல, கோலியை அவுட் ஆக்க பல வியூகங்களை வகுத்த வைத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கு  புஜாராவின் ஆட்டம் அதிர்ச்சியை அளித்தது. முதல் டெஸ்ட் தொடங்கி நான்காவது டெஸ்ட் வரை ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு சோதனைதான். அதற்கு முக்கிய காரணம் புஜாராவின் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் பேட்டிங். இதுவரை இந்த தொடரில் புஜாரா சந்தித்த பந்துகள் 1258. களத்தில் நின்ற நிமிடங்கள் 1321+. அவர் மட்டும் தனியே எடுத்த ரன்கள் 521. பார்ட்னர்ஷிப்பில் முதல் போட்டியில் 418, இரண்டாவது டெஸ்டில் 89, முன்றாவது போட்டியில் 259, நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 408, மொத்தம்1174 பார்ட்னர்ஷிப் ரன்கள். இதுதான் இந்த தொடரில் இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியா அணிக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்பதே உண்மை. இந்த தொடரின் வெற்றி, தோல்வியை தீர்மானித்ததும் புஜாராவின் பார்ட்னர்ஷிப் ரன்கள் என்பதுதான் எதார்த்தம்.
 

இந்த தொடரில் ஒருமுறை மட்டுமே 50+ பார்ட்னர்ஷிப் ரன்களை துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு கொடுத்தனர். கிட்டத்தட்ட ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் போலவே களத்திற்கு வந்தார் புஜாரா. வேகப்பந்து, ஸ்பின் என அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார். புஜாரா இந்த தொடரில் இதுவரை சந்தித்த பந்துகள் 1258. இது இந்திய அணிக்கு சாதனையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு தொடரில் அதிக பந்துகள் சந்தித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் புஜாரா. டிராவிட், கவாஸ்கர், ஹசாரே ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.
 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர். ஆஸ்திரேலியா சார்பில் எதிர்பார்க்கப்பட்ட கவாஜா இதுவரை 6 இன்னிங்க்ஸில் 167 ரன்கள் எடுத்துள்ளார். 509 பந்துகளை சந்தித்துள்ளார். 679 நிமிடங்கள் களத்தில் பேட்டிங் செய்துள்ளார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஹெட் இதுவரை 217 ரன்கள் எடுத்துள்ளார். இந்த புள்ளி விவரங்கள் பேட்டிங்கில் இரு அணிகளுக்குமான வேறுபாட்டை தெளிவாக உணர்த்துகின்றன.
 

 

Next Story

பொறுப்புடன் ஆடிய கோலி; சிலிர்த்தது சின்னசாமி மைதானம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kohli played important knock

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி 3.5 ஓவர்களிலேயே 52 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறது.  சால்ட் 12 பந்துகளில் 24 ரன்களும், நரைன் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், விராத் கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த எடுத்துள்ள வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுக் கொண்டார். 

Next Story

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்