Skip to main content

செஸ் ஒலிம்பியாட் : பாகிஸ்தான் திரும்பிய வீரர்கள்; இந்தியா அதிர்ச்சி!     

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Chess Olympiad!  Pakistan Players returned to their country

 

சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொள்ளவந்த பாகிஸ்தான் வீரர்கள், போட்டிகளில் பங்கேற்காமல் அதிரடியாக பாகிஸ்தான் திரும்பியிருப்பது இந்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

 

சர்வதேச 44-வது சதுரங்க போட்டிகளை மிக பிரமாண்டமாக நடத்துகிறது தமிழக அரசு. இந்த போட்டிகளை நேற்று (28-ந்தேதி) இந்திய பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்த துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள நிலையில், சதுரங்க போட்டிகளின் முதல் சுற்று இன்று சென்னை மாமல்லபுரத்தில் துவங்கியிருக்கிறது. இந்த போட்டிகளில் 168 நாடுகளைச் சேர்ந்த 2,000-த்திற்கும் அதிகமான சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 

 

மிக பிரமாண்டமாகவும் விமர்சியாகவும் நடக்கும் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள பாகிஸ்தானில் இருந்து 16 வீரர்கள் சென்னைக்கு வந்தனர். சென்னையில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது. இவர்களின் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 

 

இந்த நிலையில், சென்னை ஏர்போர்ட்டிலிருந்து மாமல்லபுரம் சென்றனர் பாகிஸ்தான் வீரர்கள். மதிய உணவும் உண்டு மகிழ்ந்தனர். அப்போது, பாகிஸ்தானிலிருந்து அவர்களுக்கு ஃபோன் வந்துள்ளது. ஃபோனில் பேசிய பாகிஸ்தான் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி, “இன்னும் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. 


பதட்டமான வீரர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விபரத்தைச் சொல்ல, தமிழக அரசின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விசயத்தை கொண்டு சென்றனர். அதிகாரிகள் உடனே அவர்களுக்கான டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தனர். 


விமான நிலையத்தில் பேசிய பாகிஸ்தான் வீரர்கள், “இந்த போட்டிகளில் விளையாட மகிழ்ச்சியாக நாங்கள் வந்தோம். ஆனால், விளையாடக் கூடாது; உடனே நாடு திரும்புங்கள் என எங்கள் அரசாங்கம் (பாகிஸ்தான்) எச்சரிக்கை செய்ததால் உடனே தாயகம் திரும்புகிறோம். எங்கள் அரசாங்கத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திரும்புகிறோம். இது மனதளவில் எங்களை வருத்தமடைய வைத்துள்ளது. ஆனால், டெல்லியில் நாங்கள் இருந்த போதும், சென்னைக்கு நாங்கள் வந்த போதும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், பத்திரிகையாளர்களும் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் மன நிறைவைத் தந்தது. அதனை எப்போதும் மறக்கமாட்டோம். எங்கள் நினைவுகளிலிருந்து சென்னையையும் மாமல்லபுரத்தையும் பிரிக்க முடியாது” என்று உணர்ச்சி மேலிட பேசினார்கள். 


பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிச் சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரையும் சோகமாக்கியது. 


இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் ஏர்போர்ட் பாலசுப்பிரமணியம், “பாகிஸ்தான் அரசு விளையாட்டிலும் அரசியல் செய்கிறது. அவர்களின் விளையாட்டு அரசியல் இந்தியாவைச் சிறுமைப்படுத்துகிறது. ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் செஸ் ஒலிம்பியாட் குழுவினரும் பாகிஸ்தான் வீரர்களை பத்திரமாக அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

 

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானில் இருந்து மொத்தம் 16 வீரர்கள் சென்னை வந்தனர். இவர்களுக்கான விசா நடைமுறைகளை மூன்று மாதங்களுக்கு முன்பே துவக்கிவிட்டது இந்திய அரசு. முறையாக இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசாவும் வழங்கப்பட்டது. இது, பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளட்டும் என்றுதான் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது பாகிஸ்தான். 

 

வீரர்களும் சென்னை வந்து மாமல்லபுரத்தில் தங்கினர். அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு கவனித்துக் கொண்டது. போட்டிகள் துவங்க 12 மணி நேரமே இருந்த நிலையில், திடீரென்று தமது வீரர்களை நாடு திரும்ப நிர்ப்பந்தம் செய்திருக்கிறது பாகிஸ்தான். அவர்களும் சோகத்துடன் பாகிஸ்தான் திரும்பினர். இந்தியாவில் நடக்கும் சதுரங்க போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்க விருப்பமில்லையெனில், ‘இந்த போட்டிகளில் எங்கள் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ என்று ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அரசு சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் யாருக்கும் வருத்தமோ கோபமோ வந்திருக்காது. 


ஆனால், எல்லாம் நடந்து போட்டிகள் துவங்க சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், தங்களின் வீரர்களை திரும்பி வருமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருப்பது அந்த நாட்டின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இந்தியாவை சிறுமைப்படுத்தவே பாகிஸ்தான் இதனை செய்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் செயலால் சிறுமைப்பட்டிருப்பது இந்தியா அல்ல; பாகிஸ்தான் அரசு தான்” என்கிறார் மிக அழுத்தமாக.

 


 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.