Skip to main content

பெஸ்ட் பேட்டிங், மாஸ் பவுலிங்... இந்தியாவுக்குத்தான் உலகக்கோப்பை!!!

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
akashchopra
                                                                                    ஆகாஷ் சோப்ரா


2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பையில் இந்தியாதான் வெற்றிபெறும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
 

"இந்தியஅணிக்கு சாதகமாக நிறைய விஷயங்கள் உள்ளன. பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. மிகச்சிறந்த சில பேட்ஸ்மேன்கள்கிடைத்துள்ளனர்.இங்கிலாந்தில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வென்றது. அங்கு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. எனவே, நாம் உலகக்கோப்பையை வெல்ல முடியும்” என்று ஐசிசி உலக கோப்பை டிராபி டூர் நிகழ்ச்சியின்போது அவர் தெரிவித்துள்ளார்.
 

ஆகாஷ் சோப்ரா மட்டுமல்ல. இதற்கு முன்னரும் பல முன்னாள் இந்திய வீரர்களும், சில வெளிநாட்டு வீரர்களும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது கோலி தலைமையிலான அணியின் சமீப காலங்களில் பிரமிக்க வைக்கும் ஆட்டங்கள்தான்.
 

2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இந்திய அணி 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 13 ஒருநாள் தொடர்களில் 11 தொடர்களை வென்றுள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் 1 –2 என தோற்றது. இந்த இரண்டு தொடர்களை தவிர, மற்ற அனைத்து தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
 

ரோகித் சர்மா, தவான், கோலி, தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்/சஹால், புவனேஷ் குமார் மற்றும் பும்ராஹ் ஆகியோர் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் நான்காம் மற்றும் ஆறாம் இடத்தில் விளையாடும் வீரர், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இடங்களில் யார் விளையாடுவார்கள் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்பது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில்தெரியவரும்.
 

நான்காவது இடத்திற்கு ராயுடுவிற்கு வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் அதே இடத்திற்கு கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரஹானே ஆகியோரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆறாவது இடத்திற்கு கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், குருனல் பாண்டியா ஆகியோரில் ஒருவர் இடம்பெறுவார். தாகூர், கலீல் அஹமது, உமேஷ் யாதவ், சமி, தீபக் சஹார், முஹமது சிராஜ் ஆகியோரில் ஒருவர் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற வாய்ப்புண்டு.
 

அம்பதி ராயுடு


இந்த நிலையில் "நான்காவது இடத்தில் விளையாட நாம் பல பேட்ஸ்மேன்களை முயற்சித்தோம். ஆனால் அம்பதி ராயுடு மட்டுமே அதற்கான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் அந்த இடத்தை நிரப்பியுள்ளார் என்று நினைக்கிறேன்.” என்று ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள நான்காவது இடம் பற்றி சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

வரும் ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த கோலியின் பரிந்துரை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஆகாஷ்சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் பேட்ஸ்மேன்களையும் இதில் கணக்கில் எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

"உலகக் கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளையும் கோலி தலைமையிலான அணிகொண்டுள்ளது.” என டேரன் சமியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. அடுத்த வருடம்  மே 30–ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்தும், தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன. ஜூன்5-ல் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.

 


 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.