Skip to main content

மாஸ் பீல்டர்... ஸ்டைலிஸ்ட் கிரிக்கெட்டர்... அஜய் ஜடேஜா

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

aa
அஜய் ஜடேஜா

 

1996-ஆம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 47 ஓவர்களில் 237/6. அடுத்த 3 ஓவர்களில் நினைத்துக்கூட பார்க்காத ஆட்டம். தன்னுடைய வேகம், யார்கர் என இறுதிகட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கலங்கடிக்க கூடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் வீசிய 48 வது ஓவரில் அஜய் ஜடேஜா மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் சேர்ந்து 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் விளாசினார்கள். உலகின் சிறந்த டெத் பவுலர் வக்கார் யூனிஸை கதிகலங்க வைத்தனர். அந்தப் போட்டியில் ஜடேஜா 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 45 ரன்கள் குவித்தார். அவர் எடுத்த அந்த ரன்கள் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

 

ராயல் குடும்பத்தில் இருந்துவந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா 1992-ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்திய அணியில் பேட்ஸ்மேன், மிகச்சிறந்த பீல்டர், பார்ட் டைம் பவுலர் என முக்கிய வீரராக இருந்தார். இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 196 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6 சதம் உட்பட 5359 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாக 3 ரன்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். 13 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். அதில் 8 வெற்றி, 5 தோல்வி. தொடக்க ஆட்டக்காரர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என இந்திய அணிக்கு தேவையான இடங்களில் பேட்டிங் செய்துவந்தார்.  

 

aa

 

 

1997-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 303 என்ற பெரிய இலக்கை வைத்தது இலங்கை அணி. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் விக்கெட்களை பறிகொடுத்தனர். ஜடேஜா மற்றும் அசாருதீன் ஜோடி சேர்ந்து வாஸ், முரளிதரன், மற்ற  இலங்கை பந்து வீச்சாளர்களையும் திணற வைத்தனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 119 ரன்களும், அசாருதீன் 111 ரன்களும் எடுத்தனர். வெற்றிக்கு குறைந்த ரன்கள் தேவைப்பட்டபோது ஜடேஜா அவுட் ஆனதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆனால், இந்திய அணி விக்கெட்கள் இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தபோது தனது ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றதால் அந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.  

 

1999-ஆம் ஆண்டு கோகோ-கோலா கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 223 ரன்கள் இலக்கு வைத்தது இந்திய அணி. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழந்து 196 ரன்கள் எடுத்து வெற்றி பெரும் நிலையில் இருந்தது. அப்போது ஜடேஜா ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். அந்த ஆட்டத்தில்  யாரும் எதிர்பார்க்காத வகையில் பந்துவீசி இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். 

 

எக்ஸ்ட்ரா ரன்கள் விடுவதுபோல் விட்டு பின்னர் ரன் அவுட் செய்யும் இவரது தந்திரமான பீல்டிங் அனைவரையும் வியக்க வைக்கும். இவர் விளையாடிய காலத்தில் அசாருதீன், ராபின் சிங் மற்றும் இவரது பீல்டிங் சிறப்பு வாய்ந்தது. அசாருதீன்-ஜடேஜா ஜோடி நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 

 

1999-ஆம் ஆண்டு பெப்சி கோப்பையில் இலங்கைக்கு எதிராக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். அந்தப் போட்டியில் ஜடேஜா 3-வது விக்கெட்க்கு குராசிய்யா உடன் ஜோடி சேர்ந்து 125 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்து கலக்கியுள்ளார். 

 

aa

 

1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் தோர்ப்பை ரன் அவுட் செய்த விதம் அருமையான நிகழ்வு. இதுபோல பல கிளாசிக் பீல்டிங் மூலம் எதிரணியை மிரட்டுவார். பார்ட் டைம் மீடியம் பாஸ்ட் பவுலிங்கிலும் அசத்தினார். 2015-ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜடேஜா நியமிக்கப்பட்டார். பிறகு ராஜினாமா செய்தார். 

 

ஜடேஜாவின் புன்னகை முகம் மற்றும் முக அமைப்பு பார்த்தவுடன் பிடித்துப்போகும். 2000-களில் எழுந்த மேட்ச் பிக்சிங் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்தது. பிறகு சில படங்களிலும், சில டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார்.  இன்று ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் விமர்சகர் என கிரிக்கெட் நிகழ்வுகளில் தொடர்ந்து தடம்பதித்து வருகிறார்.

 

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.