Skip to main content

1 ஓவர் 36 ரன்கள்... ஐ.பி.ல். அணிகளின் கவனத்தை ஈர்த்த சிக்சர் புயல் ஹஸ்ரத்துல்லா சசாய்...?

Published on 02/11/2018 | Edited on 02/11/2018

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் போட்டிகளில் பலமான இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியது ஆப்கானிஸ்தான் அணி. ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டங்களிலும் தன்னுடைய பலத்தை காட்டியது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டங்களில் இறுதி ஓவர் வரை போராடி தோற்றது. உலகின் மிகச்சிறந்த அணியாக கருதப்படும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சமன் செய்து சாதித்து காட்டியது ஆப்கானிஸ்தான். 

 

 

hh

 

ஒரு கால கட்டத்தில் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, தற்போது பெரும் வெற்றிகளை பெற முக்கிய காரணம் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள்தான். உலகத்தரம் வாய்ந்த ரஷீத் கான், மொஹம்மத் நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனையும் தடுமாற வைக்கக் கூடியவர்கள். இவர்களில் ரஷீத் கான் மற்றும் மொஹம்மத் நபி பேட்டிங்கிலும் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இருப்பினும் அணியின் பேட்டிங் மற்றும் வேகபந்து வீச்சு பெரிய அளவில் சாதிக்க முடியாமல் தடுமாறி வந்தது. 

 

முகம்மது ஷஹ்சாத், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹதி போன்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவு பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்க்கு வலுசேர்க்கும் வகையில் அறிமுகமாகியுள்ளார் சிக்சர் புயல் ஹஸ்ரத்துல்லா சசாய். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.ல். போன்று அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் பிரீமியர் டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் கிறிஸ் கெயில், ஷாஹித் அப்ரிடி, ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கு பெற்றனர். 

 

சார்ஜாவில் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காபுல் ஸ்வான் அணிக்காக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தார். லெக் ஸ்பின்னரான அப்துல்லா மஜாரியின் ஓவரில்தான் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த சாதனை வீரர்கள் பட்டியலில் ஹஸ்ரத்துல்லா இடம் பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), ரவி சாஸ்திரி (இந்தியா), ஜோர்டன் கிளார்க் (இங்கிலாந்து), கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா), யுவராஜ் சிங் (இந்தியா) ஆகியோர் 6  பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தனர்.

 

மேலும் அந்த போட்டியில் 17 பந்தில் 62 ரன்கள் எடுத்தார் இடது கை ஆட்டக்காரரான ஹஸ்ரத்துல்லா சசாய். 12 பந்துகளில் அரை சதத்தை தொட்டார். யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெயிலின் 12 பந்துகளில் அரை சதம் சாதனையை சமன் செய்தார். தொடரில் 21 சிக்சர், 34 பவுண்டரிகள் உட்பட 322 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்  பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். 20 வயதான சசாய் பேட்டி ஒன்றில் தான் ஐ.பி.ல். விளையாட விரும்புவதாகவும், கடினமாக பயிற்சி செய்து, தன்னுடைய முழுத்திறனையும் வெளிபடுத்துவேன் என்றும் கூறியுள்ளார். 

 


வரும் டிசம்பர் மாதம் அடுத்த வருட ஐ.பி.ல். போட்டிகளுக்கான ஏலம் நடைபெற உள்ளது. தன்னுடைய சிறப்பான பேட்டிங் மற்றும் அதிரடியாக சிக்சர் அடிக்கும் திறன் மூலம் ஐ.பி.ல். அணிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் சிக்சர் புயல் ஹஸ்ரத்துல்லா சசாய். 

 

Next Story

IND vs AFG : தொடரை வென்ற இந்திய அணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Indian team won the series

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 வது டி20 போட்டி இன்று (14.01.2024) இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ‘டக்’ அவுட் ஆகி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா  ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் இந்திய அணி 15.4 ஓவர்களில்  4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம்  6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டெல்லியில் லேசான நில அதிர்வு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 Mild earthquake in Delhi

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் இன்று மதியம் 02.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

முன்னதாக ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டன. அதே சமயம் கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.